Friday, April 24, 2015

பகவத் கீதை

நம் வாழ்க்கையை செப்பனிடும் ஹிந்துமதக் கருவி
மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது என்பது பற்றி பரந்தாமன் அர்ஜூனனுக்கு உபதேசித்த பகுதி, பகவத்கீதையின் தியான யோகம்.


சகல காரியங்களுக்கும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நன்மைக்கும் தீமைக்கும் இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும் பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் அன்புக்கும் வெறுப்புக்கும் மனமே காரணம். மனதின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன.

பகுத்தறிவையும் மனம் ஆக்ரமித்துக் கொண்டு வழி நடத்துகிறது. கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான்; கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.

"இன்பமோ தும்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்" என்றிருக்க மனம் விடுவதில்லை. ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை. எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனதின் அலைகளாலேயே சஞ்சலிக்கிறான்.

கடிவாளம் இல்லாத இந்த மனக்குதிரையை அடக்குவது எப்படி"
பிறர் தனக்கிழைத்த துன்பங்களை மறந்துவிடுவது; மன்னித்துவிடுவது; முயற்சிகள் தோல்வியுறும்போது, 'இதற்கு இறைவன் சம்மதிக்கவில்லை' என்று ஆறுதல் கொள்வது; 'கணநேர இன்பங்களை' அவை 'கண நேர இன்பங்களே' என்று முன் கூட்டியே கண்டு கொள்வது.

'ஆத்மா என்னும் மாயப்புறா அமரும் மாடங்களெல்லாம் நம்முடைய மாடங்களே', என்ற சம நோக்கத்தோடு பார்வையைச் செலுத்துவது; காலையில் இருந்து மாலை வரை நடந்த நிகழ்சிகள், ஆண்டவனின் கட்டளையால் செலுத்தப்பட்ட வாகனங்களின் போக்குதான் என்று அமைதி கொள்வது.

சொல்வதற்கும் எழுதுவதற்கும் சுலபமாக இருக்கிறது. ஆனால் எப்படி இது முடியும்?

பகவத் தியானத்தால் முடியும்.
அதிகாலையில் ஓர் அரைமணி நேரம், இரவிலே ஓர் அரைமணி நேரம், கோயிலிலோ வீட்டுப் பூஜை அறையிலோ தனிமையில் அமர்ந்து, வேறு எதையும் நினைக்காமல் இறைவனையே நினைப்பது.

இயற்கையாகவே கவியாற்றல் பெற்றிருக்கும் ஒரு கவிஞன், ஒரு பொருளைப் பற்றிக் கவிதையில் சிந்திக்கும்போது, அவன் மனம் கவிதையிலேயே செல்கிறது. அதில் லயிக்கிறது, ரசிக்கிறது, சுவைக்கிறது. அப்போது ஓர் இடையூறு, குறுக்கீடு வந்தாலும் அவனுக்கு ஆத்திரம் வருகிறது. கண்கள் திறந்திருக்கின்றன. மனம் கவிதையில் ஆழ்ந்து கிடக்கிறது; அப்போது திறந்த கண்களின் எதிரில் நிற்கும் மனைவிகூட அவன் கண்களில் படுவதில்லை.

மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையை நோக்கி வில்லெடுக்கும் வேடனின் கண்களில் பறவை மட்டும் தெரியுமே தவிர, மரத்திலுள்ள இலைகள், காய்கள், கனிகள் தெரிவதில்லை.

கவிஞனுக்கும் வேடனுக்கும் சாத்தியமான மனதின் ஒருமுக நிலையை மற்றவர்களும் பெற முடியும்.

அதாவது ஒன்றையே நினைத்தல்.
அந்த லயம் கிட்டிவிட்டால் புலன்களும், பொறிகளும், செயலற்றுப் போகின்றன.

வாயின் சுவை உணர்வு, நாசியின் மண உணர்வு, கண்களின் காட்சி உணர்வு, செவியிற் ஒலி உணர்வு, பிற அங்கங்களில் ஸ்பரிச உணர்வு அனைத்தையும் அடித்துப் போட்டுவிட்டு, புலியைக் கொன்ற வேடன் போல் மனது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அதுதான் சரியான லயம்.

ஒரு கதை உண்டு!
ஒரு தாய் தனது ஒரு மாதக் கைக்குழந்தையோடு அறையிலே பாய் விரித்துப் படுத்திருந்தாள். அப்போது அவளுக்குக் கொஞ்ச தூரத்தில் பாம்பு வந்து நின்றது.

பாம்பைக் கண்ட உறவினர்கள் பதறினார்கள்: துடித்தார்கள். அந்தப் பாம்பு, குழந்தையையும் தாயையும் கடித்துவிடப் போகிறதே என்று பயந்தார்கள். தாயின் பெயரைச் சொல்லி சத்தமிட்டார்கள். தாய் எழவில்லை.

ஓங்கித் தடியால் அடித்தார்கள்; அப்போதும் அவள் எழவில்லை.
பக்கத்தில் படுத்திருந்த குழந்தையின் மீது ஒரு மல்லிகைப் பூ எடுத்துப்போட்டார்கள். தாய் உடனே விழித்துக்கொண்டு அந்தப் பூவை எடுத்து அப்புறம் போட்டால்.

தன்னை உதைத்தபோது கூடச் சொரணையில்லாது உறங்கிய தாய், குழந்தையின் மீது பூ விழுந்ததும் விழித்துக்கொண்டது எப்படி?

அந்த உள்ளம் குழந்தையிடமே லயித்துக்கிடந்ததால்தான்.
ஈஸ்வர பக்தியில் உடல் உருக, உள்ளம் உருக லயித்துக் கிடந்த அடியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் மனதை ஒருமுகப் படுத்தியவர்களே.

பிறந்தோருக்காக சிரிக்காமலும், இறந்தோருக்காக அழாமலும், பரந்தாமன் கூறியதுபோல சமநோக்கத்தோடு நின்று, மன அமைதி கொள்ள முயல்கிறேன். அதை நான் அடைந்துவிட்டால், கடவுள் கண்களில் கண்ணீர் வைத்ததற்கான காரணமும் அடிபட்டுப் போகும்.

இவ்வளவையும் நான் சொல்வது லௌகிக வாழ்க்கையிலும் நம்மை அமைதிப்படுத்துவதே ஹிந்து மதத்தின் நோக்கம் என்பதை விளக்கத்தான்.
லௌகிக வாழ்க்கையைச் செப்பனிடும் ஹிந்து மதக் கருவிகளில், பகவத்கீதையும் ஒன்று என்பதுதான் என் துணிவு.

(பாரதம் என்றால் கீதை: கிரேக்க நாட்டின் மாபெரும் தத்துவ ஞானியான அரிஷ்டாடிலும் அறிவுலகின் மாமேதையான சாக்ரடீஷும் மாவீரன் அலெக்சாண்டரிடம் நாடுகளில் வெற்றி கொண்டு தாயகம் திரும்பும்போது ஆன்மிக மெய்ஞானிகளின் பிறப்பிடமான புண்ணிய பூமி இந்தியாவிலிருந்து ஞானிகளால் ஆன்மிகக் கருவூலம் என போற்றப்படும் ஸ்ரீமத் பகவத்கீதையை கொண்டுவரும் படி கேட்டுக் கொண்டார்களாம்.)
டால்ஸ்டாய் கூறினார்: "ஹிந்து குறள்"; திருக்குறள் பற்றி ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்; "அது ஹிந்துக் குறள்" என்றார்.)
(ஆறுதலுக்கு கீதை; சந்தேகங்கள் என்னை அலைக்கழிக்கும் போது, ஏமாற்றங்கள் என்னை எதிர்கொள்ளும் போது, நம்பிக்கையின் ஒரு கிரணம் கூட கண்ணுக்கெட்டும் தூரம் வரை தென்படாதபோது, நான் பகவத்கீதையை திறக்கிறேன்; எனக்கு ஆறுதலாக அங்கேயே ஒரு சுலோகமாவது இருக்கும். தாங்கொணா துயரங்களின் நடுவிலும் என் முகத்தில் புன்னகைக் கீற்று பரவும்.

பகவத் கீதையைத் தினமும் படியுங்கள்; அதன் பொருளை ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள்; நீங்கள் புத்துணர்வு பெறுவீர்கள்; உங்கள் வாழ்க்கைக்குப் புது அர்த்தம் காண்பீர்கள்.-மகாத்மா காந்தி )
நன்றி : விஜய பாரதம்

No comments:

Post a Comment