Friday, July 8, 2016

இன்றைய உலகில் ஒரு நல்ல பெற்றோரின் பாத்திரம் எப்படி இருக்க வேண்டும்?

இன்றைய உலகில் ஒரு நல்ல பெற்றோரின் பாத்திரம் எப்படி இருக்க வேண்டும்?
உண்மையில் பெற்றோராக இருப்பதே ஒரு வேடிக்கையான விஷயம்தான். இதுவரை யாரும் இருந்ததை விட நான் ஒரு நல்ல பெற்றோராக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் முயற்சிக்கிறீர்கள். ஆனால் இதுவரை யாருக்குமே, குழந்தைகளை வளர்ப்பதில் எது சிறந்த வழி என்று தெரிந்திருக்கவில்லை. உங்களுக்கு 12 குழந்தைகள் இருந்தாலும் நீங்கள் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறீர்கள். நீங்கள் 11 குழந்தைகளை நன்றாக வளர்த்திருப்பீர்கள். ஆனால் அந்த 12 ஆவது உங்களுக்கு நிறைய வேலையைக் கொடுக்கலாம்.
எனவே உங்கள் வேலையை இன்னமும் சிறப்பாக செய்ய ஆசைப்படுகிறீர்கள். அப்படிச் சிறப்பாக நீங்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி உங்களை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். அதற்குமுன் முக்கியமாக உங்களையே நீங்கள் ஒரு சில விஷயங்களில் கவனித்து சரி செய்து கொள்ள வேண்டும். உங்களுக்குப் போதுமான நேரம் செலவு செய்ய வேண்டும். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், நீங்கள் எப்படி உட்கார்கிறீர்கள், நீங்கள் எப்படி நிற்கிறீர்கள், நீங்கள் எப்படி பேசுகிறீர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள், நீங்கள் என்ன செய்யவில்லை, எல்லாவற்றையும் நீங்களே உங்களை நன்கு கவனியுங்கள். ஏனெனில் குழந்தைகள் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் மிக வேகமாக கற்றுக் கொள்கிறார்கள்.
அது மட்டுமல்ல, அவர்கள் நீங்கள் செய்வதையெல்லாம் மிகைப்படுத்தியும் செய்வார்கள். எனவே குறைந்தபட்சமாக, நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி உங்களை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். சிலர் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும் பரவாயில்லை. மற்றவர்கள் உங்களிடமிருந்து மேலும் கூட எதிர்பார்க்கலாம். ஆனால் அதை யாரும் வரையறுத்துச் சொல்ல முடியாது. எனவே குறைந்தபட்சம் நீங்கள் உங்களை விரும்பும்படி முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதை நீங்கள் அவசியம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வது குழந்தைகளுக்கு சரியான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கலாம். ஆனால் அவர்கள் சரியாக வளர இதுவே உத்தரவாதம் என்று சொல்ல முடியாது. மகிழ்ச்சி, அன்பு, கவனிப்பு, அக்கறை, கட்டுப்பாடு கொண்ட ஒரு சூழ்நிலையை உங்களுக்கும் உங்கள் வீட்டுச் சூழ்நிலையிலும் நீங்கள் ஏற்படுத்தினால் நிச்சயமாக அவர்கள் வளர்ச்சியில் இருப்பார்கள். உங்கள் எல்லைகளுக்கு உட்பட்டு எவ்வளவு வாய்ப்புகள் உருவாக்கித்தர முடியுமோ அந்த வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
ஆனால் அடக்கமான குழந்தையை வளர்க்கிறீர்களா அல்லது அடங்காப் பிடாரியை வளர்க்கிறீர்களா என்பதும் மிகவும் முக்கியமானதுதான். எனவே, உங்கள் மனைவி கர்ப்பம் அடைந்து விட்டால் நீங்கள் உங்களையே மாற்றிக் கொள்ளும் நேரம் வந்து விட்டது என்று அர்த்தம். ஏனெனில் இன்னொரு உயிர் இப்போது உங்கள் குடும்பத்திற்குள் வருகிறது. நீங்கள் தற்போது இருக்கும் வழி உங்களுக்கே பிடிக்காத பொழுது, இன்னொரு உயிரும் அந்த வழியில் போக வேண்டாம். அல்லவா? எனவே நாம் செய்யக் கூடிய செயல்களில் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம்.
சரி, நான் அவர்களுக்கு எப்படி, எதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்? அதற்கு நான் என்ன சொல்கிறேன் என்றால், அவர்கள் எதைப் பற்றியும் கேள்வி கேட்கும்படி நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்களின் கேள்வி சந்தேக மனப்பான்மையில் இருக்கக்கூடாது, தெரிந்து கொள்ளும் மனப்பான்மையில் இருக்க வேண்டும். கேள்வி கேட்பது என்பது ஒரு நோயைப் போலவும் ஆகலாம் அல்லது ஒரு ஆரோக்கியமான செயலாகவும் முடியலாம். ‘எல்லாமே மோசம்’ என்று மக்கள் ஏற்கனவே சந்தேகத்துடன் இருப்பதால்தான் கேள்வி கேட்கிறார்கள்.
இது ஒரு நோய். ஆனால் ஒரு கேள்வியின் அடிப்படை நோக்கம், இன்னமும் சிறிது ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகள், தங்கள் மனதில் தோன்றும் எதைப் பற்றி வேண்டுமானாலும், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதையும் சேர்த்து, கேள்வி கேட்கலாம் என்பதைக் கொண்டு வந்தால், எதையும் சந்தேகத்தோடு பார்த்து எல்லாவற்றிலும் தப்புக் கண்டுபிடித்து ஒரு நோயைப் போலக் கேள்வி கேட்காமல் எதையும் ஆரோக்கியமான வழியில் கேட்க அனுமதித்தால், உங்கள் குழந்தை அதனுடைய அறிவைத் தொடர்ந்து உபயோகிக்கும்.
நீங்கள் இப்படிச் செய்வதால் அவன் ஒரு டாக்டர் ஆகிவிடுவான் அல்லது ஒரு இன்ஜினியர் ஆகிவிடுவான் என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது. ஆனால் அவனுடைய புத்திசாலித்தனம் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். அவன் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உடலளவில் அவனுக்குத் தேவையானதையும், தேவையான கல்வியையும் எப்படியும் உங்கள் சக்திக்கேற்ற அளவு செய்வீர்கள். ஆனால் அத்துடன் அவனை எந்த அடையாளங்களும் இல்லாமல் வளர்க்க வேண்டும். அவனுடைய அறிவுத்திறனை எதனுடனும் அடையாளப் படுத்தாமல், சிக்கல் படுத்தாமல் வளர்த்தால், அவன் எதற்கும் விருப்பமுடனும், திறந்த மனதுடனும் இருக்குமாறு வளர்த்தால், அவன் தன்னுடைய வாழ்க்கையை எந்த அளவு முடியுமோ அந்த அளவு சிறப்பாக அமைத்துக் கொள்வான்.
அவன் வேறு யார் போலவோ ஆகாவிட்டாலும் அவனால் எவ்வளவு முடியுமோ அதைச் செய்வான். ஆனால் இவையெல்லாமே அவன் தன் பாதையில் யாரை சந்திக்கிறான், எந்தெந்த சூழ்நிலைகளைப் பார்க்கிறான், ஆன்மீகச் சூழலைப் பார்க்கிறானா, போர்முனையைப் பார்க்கிறானா இவை அனைத்தையும் பொறுத்தது. ஆனால், இவையெல்லாம் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை அல்லவா? ஆனால் நீங்கள் அன்பு, தியானம், திறந்த மனது போன்ற சூழ்நிலைகளுடன், எதனுடனும் அடையாளப்படுத்தாமலும் அவர்களை வளர்த்தால் அவர்கள் பொதுவாகவே நன்றாகத்தான் வளர்வார்கள். ஆனால் இதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
ஆனால் நீங்கள் உங்களால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டீர்களா என்பதுதான் விஷயம். அவன் யாரையோ பார்த்து, ஏதோ ஒரு சூழ்நிலையில் சிக்கி தவறாகப் போகிறான் என்றால் அது வேறு விஷயம். அது உங்கள் கையில் இல்லை. ஆனால் அவன் உங்களைப் பார்த்து தவறான வழிகளில் சென்றுவிடக்கூடாது. இல்லையா? நீங்கள் அவர்களுக்குள் பயத்தைக் கொண்டு வந்தால், பாரபட்சத்தைக் கொண்டு வந்தால், வெறுப்பைப் கொண்டு வந்தால் அது நீங்கள் அவனுக்கு செய்யும் குற்றமாகும். ஏனென்றால் இப்போது உங்களால் அவர்கள் பாதைத் தவறிப் போகமுடியும்.
இது மன்னிக்க முடியாத குற்றம். எந்த பெற்றோருமே இதைத் தன் குழந்தைக்குச் செய்யக்கூடாது. ஆனால், இது பலவிதமாக நடைபெறத்தான் செய்கிறது. நீங்கள் உங்கள் பயத்தையும், உங்களுடைய இது, உங்களுடைய அது, போன்ற உங்களுடைய குறைகளை எல்லாம் அவனுக்குள் விதைக்கிறீர்கள். உங்களுடைய எந்தப் பலவீனத்தையும் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் மாற்றக்கூடாது.
நீங்கள் அன்பு, தியானம், திறந்த மனது போன்ற சூழ்நிலைகளுடன், எதனுடனும் அடையாளப்படுத்தாமலும் அவர்களை வளர்த்தால் அவர்கள் பொதுவாகவே நன்றாகத்தான் வளர்வார்கள். எல்லாப் பெற்றோருமே தங்கள் குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கான திறமையைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இது பல காரணங்களினால் இருக்கலாம். இது உங்கள் வேலையினால் இருக்கலாம். நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பது போல பல விஷயங்கள் இருக்கலாம்.
எனவே குழந்தைகள் இன்னும் சிறப்பாக வளர, நிறைய இடங்கள் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி இடங்களை உருவாக்க தொழில் ரீதியாக யாரையும் ஆசிரியர் போல நியமித்து செய்ய முடியாது. அவர்கள் இன்னொருவர் குழந்தைக்காக தன்னைக் கொடுக்க மாட்டார்கள். எனவே இதற்கான அர்ப்பணிப்புடன் உள்ள தன்னார்வத் தொண்டர்களை வைத்துத்தான் இதை செய்ய முடியும். இது ஒரு சவாலான வேலைதான். ஆனால் அடுத்த தலைமுறையின் மேல் அக்கறை கொண்ட யாரும் இதை செய்யத்தான் வேண்டும். அடுத்த தலைமுறையில் வளர்பவர்கள் உங்களையும் என்னையும் விட ஒரு படி மேலாக இருக்க வேண்டும்.
இது மிக முக்கியம். அடுத்த தலைமுறையினர் அதிக ஆனந்தத்துடன், குறைந்த பயத்துடன், குறைந்த துன்பத்துடன், குறைந்த வெறுப்புடன் இருக்க வேண்டும். இதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும், இல்லையா? உங்களுக்கு 2 குழந்தைகள் என்றால் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விட்டுச் செல்லும் நன்கொடையாக இருக்க வேண்டும். இரண்டு அடங்காப்பிடாரிகளாக இருக்கக்கூடாது. உங்களை விட சிறிதளவாவது உயர்ந்த மனிதர்களை நீங்கள் விட்டுச் செல்வதுதான் இந்த மனித சமுதாயத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரு பெரிய பங்களிப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment