Saturday, January 29, 2011

கண்ணப்பநாயனார்

கண்ணப்பநாயனார்

திருக்காளத்திக்கு அருகில் உள்ளது உடுப்பூர். மலையும் காடும் சார்ந்த இடம். அவ் வனப்பகுதியில் நாகன் என்பவர் வேடுவர்களின் தலைவனாக இருந்தார். அவருடைய மனைவியின் பெயர் தத்தை. அவர்களுக்கு நீண்டகாலமாக பிள்ளை பாக்கியம் இல்லாததால் குல தெய்வமான முருகக் கடவுளை வேண்டி விரதம் இருந்தார்கள்.
முருகப்பெருமான், சிறந்த பக்தனான நாகனுக்கு அருள் செய்தார். நாகனுக்கும் தத்தைக்கும் தைமாதம் மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் ஒரு பிள்ளை பிறந்தான். பிறக்கும் போதே சற்று கனமாக இருந்த காரணத்தால் குழந்தைக்கு ‘திண்ணன்’ என்று பெயர் சூட்டினார்கள்.
திண்ணன் வளர்ந்தான். காட்டு விலங்குகளின் இயல்புகளை நன்கறிந்து கொண்டான். வேட்டையாடும் பயிற்சியையும் மேற்கொண்டான். பயிற்சியில் வெற்றி பெறுவதற்காக வேட்டைக்குச் சென்றான். திண்ணனுக்கு உதவி புரிவதற்காக, சில வேடுவர்களும் அவனுடன் சென்றார்கள். ஒரு பன்றியை வேட்டையாட, அதனைத் தொடர்ந்து வெகுதூரம் சென்று, ஒரு மலையின் அடிவாரத்தில் பன்றியை, திண்ணன் வில்லால் அடித்து வீழ்த்தினான்.
திண்ணன், உயர்ந்து நின்ற மலையை மிகுந்த ஆர்வத்துடன் நோக்கி, உடன் வந்தவர்களிடம் அதைப்பற்றிக் கேட்டான். “இந்த மலையின் பெயர் திருக்காளத்தி. இதன் உச்சியில் குடுமித்தேவர் எழுந்தருளியிருக்கிறார்.” என்று அவர்கள் கூறியதும், திண்ணன் மலைமீது ஏறத் தொடங்கினான். ஏதோ ஒன்று அவனை ஈர்ப்பது போல் உணர்ந்தான்.
ஏகாந்தமாக, மலை உச்சியிலே வீற்றிருந்த காளத்தியப்பரைத் தரிசித்ததும் திண்ணன் பரவசமடைந்தான். ஓடிச் சென்று சிவலிங்கத்தைக் கட்டித் தழுவிக் கொண்டான்.
காளத்தியப்பர் இங்கே தனியாக இருக்கிறாரே! இவருக்கு பூஜைகள், அபிஷேகம் எதுவும் கிடையாதா?” என்று கண்ணீர் மல்கக் கேட்டான். அந்தணர் ஒருவர் வந்து பூஜை செய்கிறார் என்று அறிந்து கொண்டான். காளத்தியப்பரை விட்டுப் பிரிய மனமின்றி அங்கேயே இருக்கலானான். உடன் வந்தவர்களைத் திரும்பிச் செல்லுமாறு கூறிவிட்டான்.
“காளத்தியப்பா! உனக்குப் பசிக்குமே!” என்று நெக்குருகி மலையிறங்கி வந்தான். கொன்று போட்ட பன்றியின் இறைச்சியைப் பக்குவம் செய்து எடுத்துக் கொண்டான். அபிஷேகம் செய்ய, ஆற்றுநீரை வாயிலே தேக்கிக் கொண்டு, காட்டுப் பூக்களையும் பறித்துக் கொண்டு மலைமேலை ஏறினான். வாயிலிருந்த நீரால் குடுமித்தேவரை நீராட்டினான். மலர்களை அவருக்கு அர்ச்சனை செய்வித்து, பன்றி இறைச்சியை நிவேதனம் செய்தான். ஐந்து நாள்களாகத் தொடர்ந்து, காளத்தியப்பரைப் பிரிய மனமின்றி அங்கேயே இருந்தான் திண்ணன். அவரைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து பக்தியால் உருகினான்.
வழக்கமாக வருகின்ற அந்தணர், காளத்தியப்பருக்கு அருகிலே வேடுவனையும், முன்னால் சிதறிக் கிடந்த இறைச்சித் துண்டுகளையும் கண்டு முகம் சுளித்து விட்டு பூஜை செய்யாமலே சென்று விட்டார். அன்று இரவு அவர் கனவிலே சிவபெருமான் தோன்றி, “நாளை மலைக்கு வந்து, திண்ணன் அறியாதபடி மறைந்திருந்து பார்.” என்று உத்தரவிட்டார்.
மறுநாள் புலர்ந்தது. திண்ணன் மலைமீது வாசம் செய்யும் ஆறாவது நாள். கண் விழித்து, காளத்தி நாதரை நோக்கிய திண்ணன் திடுக்கிட்டான். காளத்தியப்பரின் ஒரு கண்ணிலிருந்து உதிரம் வழிந்ததைக் கண்டதும் பதறினான். கதறினான். உடனே வேலால் தன்னுடைய கண்ணைத் தோண்டி, அப்பனின் கண்ணில் அப்பியதும் உதிரம் நின்றது. திண்ணன் ஆனந்தமடைந்தான். அப்பனைக் கட்டி அணைத்துக் கொண்டான். ஆனால் இதென்ன கொடுமை, மற்றொரு கண்ணில் உதிரம் வடிகிறதே! என்று அரண்டான். வேலை எடுத்தான். மற்றொரு கண்ணையும் தோண்டி விட்டால் காளத்தியப்பரின் உதிரம் வழியும் கண் இருக்கும் இடம் தெரியாதே என்று, செருப்பணிந்த காலை, அவர் கண்ணருகே வைத்தான். தன்னுடைய இரண்டாவது கண்ணைத் தோண்டும்போது சிவபெருமான் அங்கே தோன்றினார். “கண்ணப்பா நில்!” என்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டார். அனைத்தையும் மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த அந்தணர், திண்ணனின் பக்தியை அறிந்து மெய் சிலிர்த்தார். காளத்தியப்பரின் வாய்மொழியால் ‘கண்ணப்பா’ என்று அழைக்கப்பட்டவர் 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார்.



1 comment:

  1. for video about kannappanayanar

    http://www.youtube.com/watch?v=XgtLjAjAFfA

    ReplyDelete