Thursday, March 10, 2011

புதன் தசையின் பலன்கள் என்ன?

புதன் தசையின் பலன்கள் என்ன?
ஜோதிடத்தைப் பொறுத்தவரை புதனை வித்யாகாரகன் என்று அழைப்பர். கல்வி, வித்தைக்கு உரியவர் புதன். ஒரு மனிதனின் நரம்பு மண்டலங்களை இயக்குவது புதன். கற்றலில் ஆர்வம் இருப்பதற்கும் புதனே காரணம்.
புதன் நன்றாக அமையப் பெற்றவர்கள் சுயமாக முன்னேறுவார்கள். யாருடைய உதவியையும் எதிர்பார்க்க மாட்டார்கள். புதனின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். சபையில் பேசும் போது கூட முதலில் பேசத் தயங்குவார்கள். அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்ட பின்னரே இவர்கள் பேசுவார்கள். ஆனால் தேர்வின் போது சரியான பதிலை எழுதுவதற்கு இவர்கள் தயங்க மாட்டார்கள்.
புதன் நன்றாக இருந்தால் சொந்தத்தில் (மாமன் மகள், அத்தை மகள்) திருமணம் நடக்கும். விடாமுயற்சி உடையவர்களும் புதனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களே. வணிகத்திற்கு உரியவரும் புதன்தான். பங்கு வர்த்தகத்தில் வெற்றி பெறுபவர்கள் ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்கும். ஆனால் புதன் வலுவிழந்து காணப்பட்டால் அந்த ஜாதகர் பங்குச்சந்தையும் எவ்வளவு முதலீடு செய்தாலும் லாபம் பார்ப்பது கடினம். தூதுக்கோள் என்றும் புதன் அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் மன்னர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு போர் மூளும் சூழல் நிலவும் தருணத்தில், புதன் ஆதிக்கம் (ஆயில்யம், கேட்டை, ரேவதி அல்லது மிதுனம்/கன்னி ராசி) பெற்ற தகுதியான நபர் தூது சென்றால் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி விடுவார் என ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
புதனின் ஆதிக்கம் பெற்றவர்களிடம் எதிரிகள் கூட பகைத்துக் கொள்ளமாட்டார்கள். இதற்கு மனிதாபிமானமும் ஒரு காரணம்.
எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் புதன் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு மற்றவர்களின் பாராட்டு கிடைக்காது. உதாரணமாக அலுவலகத்திலேயே சிறந்த பணியாளர் எனப் பெயர் பெற்றிருந்தாலும் பதவி உயர்வு கிடைக்காது. புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இதுபோன்ற துரதிருஷ்டமும் ஏற்படும்.
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சிறு துயரமும் இவர்களை பெரியளவில் பாதிக்கும். புதன் தசை மொத்தம் 17 ஆண்டுகள் நடக்கும். சிறுவயதில் புதன் தசை வந்தால் சிறப்பான கல்வி கிடைக்கும். நடு வயதில் புதன் தசை வந்தால் வியாபாரத்தில் செல்வம் கொழிப்பார்கள். முதிய வயதில் புதன் தசை நடந்தால் புத்தகங்கள் எழுதிக் குவிப்பார்கள்.
கணிதத்திற்கு உரியவரும் புதன். ஒருவர் ஜாதகத்தில் புதன் நல்ல ஆதிபத்தியம் பெற்று, நல்ல கிரக சேர்க்கைகளுடன் இருந்தால் அவர்கள் ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியராக இருப்பார்கள்.
யாராவது கண்ணீர் விட்டால் இவர்களுக்கு மனம் இளகி விடும். கையில் இருப்பதையெல்லாம் கொடுத்து விடுவார்கள். மனித நேயம் மிக்கவர்களாகத் திகழும் புதன் ஆதிக்கம் பெற்றவர்கள் அதனாலேயே ஏமாற்றப்படுவார்கள்.
புதன் நன்றாக இருந்தால் அவர்கள் ஆய்வுப் படிப்புகள் மேற்கொள்வார்கள். கல்விக் கூடம் நடத்துவதற்கும் புதனின் தயவு தேவை. வில் வித்தைக்கு மட்டுமின்றி அனைத்து உள்ளரங்க விளையாட்டுகளுக்கும் உரியவர் புதன். திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள் என்பதால் சதுரங்க விளையாட்டில் நல்ல திறமை பெற்றிருப்பார்கள்.

No comments:

Post a Comment