Thursday, July 28, 2011

காரடையான் விரதம்

சுமங்கலிப்பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.
சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்பு கிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள். இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார். மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.
பெண்களுக்கு எமனையும் வெல்லும் தைரியம் உண்டு என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவள் சாவித்திரி. அவளது வெற்றிக்கு காரணம் தைரியம், பொறுமை, கடமை, சமயோசிதம் ஆகியன. இவை அத்தனையும் ஒருங்கே இணைந்த தெய்வப்பிறவியாக அவள் திகழ்ந்தாள். மத்ர தேச மன்னன் அஸ்வபதி. இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதற்காக 10 ஆயிரம் யாகங்கள் செய்தார். சாவித்திரி தேவதையை நினைத்து 18 ஆண்டுகள் தவமிருந்தார். அவரது தவத்தை மெச்சிய சாவித்திரி தேவதை அவருக்கு குழந்தை பாக்கியம் அளித்தது. அந்தக் குழந்தைக்கு தனக்கு வரமளித்த தேவதையின் பெயரையே இட்டார். சாவித்திரியை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. காரணம், அவளை ஒரு தெய்வப்பிறவியாக மன்னர்கள் கருதினர். கவலையடைந்த அஸ்வபதி, மகளை நேரடியாக மாப்பிள்ளை பார்க்க அனுப்பினார். உனக்குரிய கணவனை நீயே தேர்ந்தெடு என சொல்லி அனுப்பினார். அவள் பலநாடுகளுக்கும் சென்று திருப்தி ஏற்படாமல், ஒரு காட்டிற்கு சென்றாள். அங்கே த்யுமத்சேனன் என்ற பார்வையற்ற ராஜா, தன் மனைவி ஸைவ்யையுடன் வசித்தார். அவர்களது மகன் சத்தியவான், அவர்களுக்கு தகுந்த உதவி செய்தான். சத்தியவான் மிகுந்த குணவான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். பெற்றவர்களுக்கு சேவை செய்யும் அவனது பண்பு மிகவும் பிடித்து விட்டது, அவர்கள் எதிரிகளிடம் தங்கள் நாட்டைப் பறிகொடுத்து காட்டில் தங்கியிருந்தனர்.
ஊர் திரும்பிய சாவித்திரி, சத்தியவானை திருமணம் செய்ய விரும்புவதாக தந்தையிடம் சொன்னாள். அப்போது, அங்கு வந்த அஸ்வபதியின் குருநாதரான நாரதமுனிவர், சத்தியவான் குணவான் என்பதில் ஐயமில்லை. உலகில் அப்படி ஒரு ஆணை பார்க்க இயலாது. சாவித்திரிக்கு தகுதியானவன் என்றாலும், அவனது ஆயுள் இன்னும் ஓராண்டே இருக்கிறது, என்றார். அப்படியானால் வேறு மாப்பிள்ளை பார், என மகளிடம் அஸ்வபதி சொல்ல, வாழ்க்கை என்றால் இன்ப துன்பங்கள் சகஜம். அதை எதிர்கொள்ளவே நாம் பிறந்திருக்கிறோம், என்று திடமாகச் சொல்லிய சாவித்திரியை நாரதர் பாராட்டினார். அந்த திருமணத்தை தைரியமாக நடத்தும்படி அஸ்வபதியிடம் சொன்னார். அஸ்வபதியும் திருமணத்தைமுடித்து விட்டார். இந்நிலையில், நாரதர் சொன்ன கணக்குப்படி நான்கு நாட்களே இருந்த நிலையில், சாவித்திரி ஒரு விரதத்தை துவங்கினாள். அதன்படி, மூன்று நாட்கள் இரவும் பகலும் விழித்திருந்து உண்ணாமல் இருக்க முடிவு செய்தாள். அம்மா! இது சாத்தியம் தானா! என மாமனார் கேட்டார். எல்லா செயல்களிலும் உறுதிப்பாடே வெற்றிக்கு காரணம், என்று பதிலளித்த சாவித்திரி விரதத்தை துவங்கினாள். அன்று சத்தியவான், பெற்றோருக்கு பழம் கொண்டு வர காட்டுக்கு கிளம்பினான். சாவித்திரியும் உடன் வருவதாகச் சொன்னாள். காட்டில் நடக்க கஷ்டமாக இருக்குமே! என்ற கணவனிடம் அனுமதி பெற்றாள். மாமனார் மாமியாரும் பத்திரமாக சென்று வர அறிவுறுத்தினர். அன்று மாலை சத்தியவானுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. அவன் அப்படியே மனைவியின் மடியில் சாய்ந்தான். அந்நேரத்தில், சிவந்த கண்களுடன் பாசக்கயிறு ஒன்றுடன் ஒரு உருவம் தென்பட்டது. நீங்கள் யார்? என்றாள் சாவித்திரி.
நீ பதிவிரதை என்பதால் உன் கண்ணுக்குத் தெரிந்தேன். நான் எமதர்மராஜா. உன் கணவனின் ஆயுளைப் பறிக்க வந்தேன், என்றவன் சற்றும் தாமதிக்காமல் அவனது உயிருடன் கிளம்பினான். சாவித்திரி பின் தொடர்ந்து சென்று, நண்பரே! என்றாள்.நான் உன் நண்பனா? என்ற எமனிடம்,ஒருவன் மற்றொருவனுடன் ஏழு அடிகள் நடந்து சென்றால் நட்புக்குரியவர்கள் ஆகிறார்கள் என்று சான்றோர் சொல்லுவர், என்று பதிலளித்த சாவித்திரியிடம், தெளிவாகப் பேசும் உனக்கு வேண்டும் வரங்களைக் கேள், உன் கணவனின் உயிர் தவிர, என்றான் எமன். தன் மாமனாருக்கு பார்வை தெரிய வேண்டும், அவரது நாடு மீட்கப்பட வேண்டும், என் தந்தைக்கு ஆண் வாரிசு இல்லை. அவருக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள் சாவித்திரி. எமன் அந்த வரத்தைத் தந்து இனி போய்விடு என்றான். சாவித்திரி பின் தொடர்ந்தாள். உமக்கு தர்மராஜா என்று பெயர் உண்டு. தர்மவான்களுடன் உறவு கொண்டால் பலனளிக்காமல் போகாது. உம்முடன் சிறிது நேரம் நட்பு கொண்ட எனக்கும் அதற்குரிய பலன் உண்டல்லவா? என்ற சாவித்திரியின் பேச்சைக் கேட்ட எமன்,மேலும் சில வரங்களைக் கேட்கச் சொன்னான். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள் அவள். அவளது சமயோசிதத்தை பாராட்டிய எமன், கணவனின் உயிரைத் திருப்பித் தந்தான். நூறு குழந்தைகள் வேண்டுமென கேட்டதன் மூலம், சத்தியவானும், சாவித்திரியின் தந்தையும் நானூறு ஆண்டுகள் வாழும் பாக்கியம் பெற்றனர். இதன் காரணமாகத்தான் சாவித்திரியின் கதையைக் கேட்பவர்கள் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பார்கள். கார் காலத்தில் விளைந்த நெல்லைக் குற்றி எடுத்த அரிசியை மாவாக்கி, வெல்லம், ஏலக்காய் சேர்த்து அடை செய்ய வேண்டும். இதை திருவிளக்கின் முன் வைத்து, விளக்கை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும். இதனால் தான் இந்த விரதத்துக்கு காரடையான் நோன்பு என பெயர் வந்தது. சாவித்திரியின் கதை கேட்ட பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.
மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.
விரதமுறை: விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். கார்காலத்தில் (முதல் பருவம்) விளைந்த நெல்லைக் குத்தி கிடைக்கும் அரிசி மாவில், இனிப்பு சேர்த்து அடை தயாரிக்க வேண்டும். இதுவே, காரடை ஆகும். இந்த பெயராலேயே இந்த விரதத்திற்கும்ச பெயர் அமைந்தது. அன்று நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்ய கயிறு மாற்றிக்கொள்வர்.
பலன்: காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.

No comments:

Post a Comment