Thursday, July 28, 2011

காசிக்கு இளைஞர்களும் சென்று வரலாம்.

வீட்டில் பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கருத்து வேறுபாடு வந்தால், இந்த வயசான காலத்தில் காசி, ராமேஸ்வரம்னு போக வேண்டியதுதானே என்று சொல்வது வழக்கம். ஆனால் காசி தலம் இளைஞர்களுக்கும் உரியது என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காசி என்றால் ஒளி நகரம் என பொருள். வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற இளைஞர்கள் காசிக்கு இளம் வயதிலேயே சென்று விஸ்வநாதரையும் அன்னபூரணி தாயையும் வணங்கிவருவது நலம் பயக்கும். காசியில் இறந்துபோவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்துபோகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் அவற்றின் காதுகளில் தாரக மந்திரத்தை ஓதுகிறார் என்பது ஐதீகம். இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிமுக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. காசி மிகவும் பழமை வாய்ந்த நகரம். இங்கு வாரணா என்ற நதியும் ஹசி என்ற நதியும் ஓடுகின்றன. இரண்டு ஆறுகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்ததால் வாரணாசி என்ற பெயர் வந்தது. ஆங்கிலத்தில் இவ்வூரை பனாரஸ் என்று சொல்வார்கள். இவ்வூரில் விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர். சிவபெருமானின் அடியையும் முடியையும் காண பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது அவர்களை எரித்து அழித்த இடமும் இவ்வூரே என்று கூறுவதுண்டு. எனவே இவ்வூருக்கு மகாமயானம் என பெயர் வந்தது. இந்தியாவில் முக்தி தலங்கள் ஏழு. அவை காசி, காஞ்சிபுரம், ஹரித்துவார், மாயா, அயோத்தி, துவாரகை, மதுரா ஆகியவையாகும். இவற்றில் முக்கியத்துவம் காசிக்கே தரப்படுகிறது. கங்கை நதியின் மேற்கு கரையில் காசி அமைந்துள்ளது. காசியிலிருந்து வடக்காக 30 கி.மீ. தூரத்திற்கு கங்கைநதி ஓடுகிறது. இங்கே கங்கையை உத்தரவாகினி என அழைக்கின்றனர். கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்த கட்டங்கள் உண்டு. 64 தீர்த்தங்களிலும் நீராடுவது மிகுந்த பலனைத்தரும் என்றாலும் எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே அஸ்சங்கம், தசாசுவமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய தீர்த்தங்களில் ஒரே நாளில் நீராடி வருவது மிகுந்த பலனைத்தரும். இதற்கு பஞ்சதீர்த்த யாத்திரை என பெயர்.
அஸ்சங்கம கட்டம், அஸ் நதி கங்கையில் வந்து கலக்கும் பகுதியில் உள்ளது. காசி தலம் இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. அஸ்சங்கம கட்டத்தை காசியின் நுழைவு வாயில் என்றும் சொல்லலாம். இந்த கரையிலுள்ள சிவலிங்கம் அஸ் சங்கமேஸ்வரா என பெயர் பெற்றுள்ளது. முதல் கட்டத்தில் நீராடிவிட்டு சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும். துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கை நதியில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதையடுத்து தசாவமேத கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாவமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் சூலடங்கேஸ்வரர் என்ற சிவலிங்கம் உள்ளது. இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராடச் செல்லவேண்டும். இங்கு வருண ஆறு கங்கையில் கலக்கிறது. இந்த கரையில் உள்ள ஆதிகேஸ்வரரை வணங்கிவிட்டு யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நான்கு நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடிவிட்டு கரையிலுள்ள பிந்துமாதவர் மற்றும் கங்கேஸ்வரரை வணங்க வேண்டும். இதையடுத்து மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். பஞ்ச தீர்த்த கட்டத்தில் இது கடைசி கட்டமாகும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள மணிகர்ணிகேஸ்வரரையும் அம்பாளையும் வழிபட வேண்டும். இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் உள்ளன. இந்த 12 லிங்கங்களுக்கும் காசி விஸ்வநாதரே முதன்மையானவர் என சொல்லப்படுவதுண்டு. இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இதை கட்டினார். இந்த கோயில் மிக சிறிய கோயில்தான். குறுகலான பாதையில் சென்று கோயிலை அடைய வேண்டும்.
லிங்க ரூபத்தில் இங்கு காசி விஸ்வநாதர் இருக்கிறார். நமது பூஜை பொருட்களைக் கொண்டு நாமே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம். அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த கோயிலில் சுவாமிக்கு ஆறு தட்டுகளில் வெள்ளை அன்னமும் ஆறு தட்டுகளில் ரொட்டி, கூட்டு, குழம்பு ஆகியவையும் வைத்து நைவேத்தியம் செய்கிறார்கள். அந்த நேரத்தில் விஸ்வநாதரை மறைத்து சிறு வேலி அமைக்கப்படுகிறது. விஸ்வநாதர் கோயிலின் அருகிலேயே அன்னபூரணி அம்பாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக் கும். அன்று அம் பாளின் முன்பு பலவகை அன்னங்கள், பலகாரங்கள், ஏராளமான அளவில் படைக்கப்படுகிறது. தீபாவளி அன்று தான் அன்னபூரணி தங்க அன்னபூரணியாக பவனி வருவது வழக்கம். அன்று ஒருகையில் கரண்டியையும் மற்றொரு கையில் அன்ன பாத்திரத்தையும் ஏந்தி பவனி வருவதுண்டு. தங்க அன்னபூரணியை தீபாவளி அன்று மட்டுமே தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காசி தலத்தில் ஒரு விசேஷ அம்சம் உண்டு. இவ்வூரில் பல்லிகள் சத்தமிடுவதில்லை. கருடனும் பறக்காது. பாம்பன் சுவாமிகள் ஒருமுறை காசிக்கு சென்றிருந்தார். அவரை அங்குள்ள சந்நயாசி ஒருவர் காவி உடை கொடுத்து துறவியாக மாற்றினார். அன்று முதல் அவர் அங்கேயே தங்கியிருந்து காசி யாத்திரை என்ற நூலை எழுதினார்.காசிக்கு முதியோர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் சென்று வரலாம்.

No comments:

Post a Comment