Sunday, September 18, 2011

புண்ணியதானம்

ஒரு மிராசுதாருக்கு, சுப்பன் என்ற மகாமோசமான மகன் இருந்தான். தந்தை சேர்த்து வைத்த சொத்தை அழித்து விட்டான். தாயை மதிக்க மாட்டான். மனைவி, பிள்ளைகள் அவனிடம் அனுபவிக்காத துன்பமே இல்லை. ஒரு கட்டத்தில் அவன் இறந்து போனான். பாவம் மட்டுமே அவனது மூலதனம் என்பதால், நரகத்தில் அவன் வறுத்து எடுக்கப்பட்டான்.
""ஐயையோ! இங்கே இப்படி நடக்குமென தெரிந்திருந்தால், பூலோகத்தில் வாழ்ந்த போது, என் குடும்பத்தாரை நிம்மதியாக வாழ வைத்திருப்பேனே!'' என புலம்பினான். நரகத்தில் தண்டனை முடிந்து அவன் ஒரு கழுதையாகப் பிறந்தான். அதன் மீது அதன் உரிமையாளன் அளவுக்கு மீறி பொதி ஏற்றி சுமக்க வைத்தார். ஒருமுறை கழுதை மயங்கி விழுந்து விட்டது. அதைப்பார்த்து பாவப்பட்ட உரிமையாளரின் மகன், ""இறைவா! பாவம் இந்தக் கழுதை! இது எங்களுக்காக கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறது. நான் செய்த புண்ணியத்தின் பலனை கழுதைக்கு வழங்குகிறேன். இதை எழுப்பு,'' என்றான். கழுதையும் எழுந்துவிட்டது. சில காலம் கழித்து இறந்து விட்டது. கழுதையாக இருந்தபோது பெற்ற புண்ணியத்தால், சுப்பன் பக்தியுள்ள பணக்கார குடும்பத்தில் பிறந்தான்.
அவனுக்கு முற்பிறவி எண்ணங்கள் நினைவுக்கு வந்தன. தான் கழுதையாக வாழ்ந்த வீட்டுக்குப் போய், ""உங்கள் வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து போன கழுதைக்கு என்னென்ன புண்ணியங்களை கொடுத்தீர்கள்?'' என உரிமையாளனின் மகனிடம் கேட்டான்.
""நான் அடிக்கடி "கிருஷ்ணா கிருஷ்ணா' என்பேன். அப்படி சொன்னால் புண்ணியம் என எங்கள் ஊர் கோயிலில் பேசிய உபன்யாசகர் சொன்னார். அந்தப் புண்ணியம் கழுதைக்கு சேரட்டுமே என்றேன்,'' என்றான் அவன். அதன்பிறகு சுப்பனும் "கிருஷ்ணா கிருஷ்ணா' என்று காலமெல்லாம் சொல்லி, பிறப்பற்ற நிலையான முக்தி நிலை அடைந்தான். உங்களுக்கு எந்தக் கடவுளைப் பிடிக்குமோ, அந்தக் கடவுளின் பெயரை அடிக்கடி உச்சரித்தாலே போதும்! சொர்க்கம் கிட்டிவிடும்.

No comments:

Post a Comment