Sunday, September 18, 2011

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!

தேசப்பிதா காந்திஜி ஒருமுறை லண்டனுக்கு கப்பலில் பயணம் செய்தார். ஒரு வெள்ளையன் அவர் எதிரே வந்து அமர்ந்து கொள்வான். எந்நேரமும் கேலியும் கிண்டலும் செய்து கொண்டே இருந்தான். சகிப்புத்தன்மை கொண்ட கருணாமூர்த்தியல்லவா காந்தி மகாத்மா! அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை. இப்படி அவர் பொறுமையாய் இருந்ததே அவனது கோபத்தை கிளறியது.
மறுநாளில் இருந்து அர்ச்சனையை அதிகமாக்கி விட்டான். தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தினான். குளிர்நிலவைப் பார்த்து நாய் குரைத்தால் யாருக்கு நஷ்டம்... காந்திஜி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
ஒருநாள், அந்த வெள்ளையனுக்கு ஏதோ ஒரு அவசர வேலை. அதனால், தான் திட்ட வேண்டியதையெல்லாம் சில காகிதங்களில் எழுதி, அவர் கையில் திணித்து விட்டுப் போய்விட்டான்.
வேலை முடிந்த பிறகு திரும்பி வந்தான். அப்போதும் காந்திஜி "சாந்தி..சாந்தி..சாந்தி' என அமைதி தவழும் முகத்துடன் காட்சியளித்தார். அவனுக்கோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
""என்ன! நான் கொடுத்ததைப் படித்தீரா!'' என்றான். காந்திஜி அவனை ஏற இறங்க பார்த்தார். ஒரு திசை நோக்கி கை நீட்டினார். அங்கே ஒரு குப்பைக்கூடை இருக்கிறது. ""உம் கடிதம் அதோ அதில் பத்திரமாக இருக்கிறது.'' என்றார்.
அவன் முகம் சிவந்தது. பற்களை கடித்தபடியே, ""அதில் உமக்கு பயன்படும்படியாக எதுவுமே இல்லையோ?'' என்றான் காட்டமாக. ""இருந்ததே!'' என்ற காந்திஜி அமைதியாக கையை விரித்தார். அவன் காகிதங்களைக் குத்திக் கொடுத்த குண்டூசி இருந்தது''.
அதற்கு மேலும் அங்கு நிற்க அவன் பைத்தியக்காரனா என்ன! ""போற்றுவார் போற்றலும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே'' என்ற கீதை வரிகளைப் படித்தவரல்லவா நமது மகாத்மா... ஆம்..பொறுமைக்கு மிஞ்சிய ஆயுதம் உலகில் எதுவுமே இல்லை.

No comments:

Post a Comment