Sunday, September 18, 2011

பொறாமை!ஆன்மிகத்திலுமா?

முருகபக்தனான இளைஞன் ஒருவன், அருணகிரியாரின் திருப்புகழ் பாடல்களை மாலை துவங்கி இரவு வரை பாடுவான். அவனது பக்திக்கேற்ப முருகப்பெருமான் செல்வவளமும், அழகான மனைவியும், நல்ல குழந்தை களையும் அருளினார்.
இதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரனுக்குப் பொறாமை. அவனும் திருப்புகழ் புத்தகம் வாங்கி வாசித்துப் பார்த்தான். திருப்புகழின் சந்தப்பாடல்கள் அவன் வாய்க்குள் நுழையவில்லை. பக்கத்து வீட்டுக்காரனின் பக்தியைக் கெடுத்தால் அன்றி, அவன் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது என்று நினைத்தவன் தன் அரங்கேற்றத்தை துவக்கினான்.
பக்தனின் மனைவி வெளியூர் சென்றிருந்த சமயத்தில், ஒரு தாசியை அனுப்பி அவனை மயக்கும்படி ஏவினான். அவளும் தன்னால் ஆன முயற்சியை செய்து பார்த்தாள்.
பக்தனோ, அவள் முன்பும் திருப்புகழ் பாடினானே ஒழிய அவளது அழகில் மயங்கவில்லை. ஒருநாள் அவன் மனைவி திரும்பி விடவே, பக்கத்துவீட்டுக்காரன் அவளிடம், ""உன் கணவன் வீட்டுக்குள் தாசியுடன் இருக்கிறான்,'' என வத்தி வைத்தான்.
அவள் வீட்டுக்கு வந்தாள். தன் பணியை பார்க்க ஆரம்பித்து விட்டாள். தாசி அவளிடம் சென்று, ""உன் கணவனைப் போன்ற உத்தம ஆண்களை நான் பார்த்ததில்லை. எல்லாரும் அவரைப் போல இருந்திருந்தால் என்னைப் போன்ற தாசிகள் இந்த உலகில் <உருவாகியே இருக்கமாட்டார்கள். மேலும், அவர் பாடிய திருப்புகழ் என் மனதை மாற்றிவிட்டது. நான் திருந்திவிட்டேன். இனி ஒழுக்கம் மிக்க வாழ்க்கை நடத்தி முருகனடி சேர முயற்சிப்பேன்,'' என்றாள்.பக்கத்து வீட்டுக்காரனை அழைத்த இளைஞனின் மனைவி,""அண்ணா! என் கணவரைப் பற்றி எனக்கு தெரியும். பார்த்தீர்களா! நீங்கள் அனுப்பிய பெண் உண்மையைச் சொல்லி விட்டாள். நீங்கள் பக்தியாளராக இருக்க வேண்டுமென்பதில்லை.பிறரது பக்தியும், வாழ்வும் கண்டு பொறாமை கொள்ளாதீர்கள்,'' என்றாள். அவன் தலை குனிந்தான்.

No comments:

Post a Comment