Monday, January 16, 2012

எல்லாரும் கெட்டவங்க இல்லை

என்மேல் எந்த தவறும் இல்லை. ஆனால், ராமன் அண்ணா என்னைப் பற்றி என்ன நினைத்திருக்கிறாரோ! நான் தனியாகப் போனால், "இவனால் தானே நாம் காட்டுக்கு வந்தோம்' என தப்பாக எண்ணுவாரோ என்னவோ! எனவே, எல்லா ரிஷிகளும் என்னுடன் வரணும்,'' என்று கேட்டுக் கொண்டான் பரதன். ரிஷிகளும் அவனுடன் சென்றார்கள். இந்த சம்பவத்தை ஒரு கதையுடன் ஒப்பிடுவார்கள்.
ஒரு விவசாயி தன் நிலத்துக்கு போகும் வழியில், பாம்பு படமெடுத்து நின்றது. சாதாரணமாக, மற்றவர்கள் தடியை எடுத்து அடிக்க ஓடியிருப்பார்கள், அல்லது பயந்து பின் வாங்கியிருப்பார்கள். ஆனால், இவரோ கீழே விழுந்து வணங்கினார்.
""நாகராஜா! நீ தான் என் நிலத்துக்கு காவல் தெய்வம். உன்னால் தான் எனக்கு அமோகமான மகசூல் கிடைக்கிறது போலும்! தொடர்ந்து இங்கேயே இரு,'' என்றார். பாம்பு தலையைத் தாழ்த்திக் கொண்டு, அருகில் இருந்து புற்றுக்குள் போய்விட்டது. அடுத்தநாள், விவசாயி பால் செம்புடன் வந்தார். புற்று அருகே வைத்து, ""நாகராஜா, பசியாறிக் கொள்,'' என்றார். பாம்பு வெளியே வந்தது. பாலைக் குடித்தது. போய் விட்டது. விவசாயி, செம்பை எடுத்துப் பார்த்தார். அதற்குள் ஒரு தங்கக் காசு கிடந்தது.
இதேபோல், ஒவ்வொரு நாளும் விவசாயி பாலை வைக்க, பாம்பும் குடித்து விட்டு காசைப் போட, இவர் பணக்காரராகி
விட்டார். ஒருமுறை, அவர் வெளியூர் செல்ல வேண்டி வந்தது. மகனை அழைத்து, ""நான் திரும்பி வரும் வரை, பாம்புக்கு பால் வை,'' என்று சொன்னார்.
மகனும் பால் வைக்கச் சென்றான். செம்பை எடுத்துப் பார்த்த போது, தங்கக்காசு இருந்தது. மறுநாள், பால் வைத்தான். அப்போதும் காசு இருந்தது. அப்போது, அவன் மனதில் விபரீத எண்ணம் பிறந்தது.
""இந்தப் பாம்பு புற்று நிறைய காசு வைத்திருக்கிறது. கஞ்சப்பாம்பு, தினமும் ஒன்றே ஒன்றை போடுகிறது. புற்றை உடைத்து விட்டால் எல்லாக் காசையும் ஒரேநாளில் எடுத்துக் கொள்ளலாம். பாம்பைக் கொன்று விட வேண்டியது தான்,'' என்று, மறுநாள் அது பால் குடித்துக் கொண்டிருந்த வேளையில், தடியை தூக்கி அடித்தான். இவனுக்கு கெட்ட நேரம்.
தலையில் விழ வேண்டிய அடிவாலில் விழ, கொதித்தெழுந்த பாம்பு அவனைத் தீண்டிவிட்டது. அவன் இறந்து போனான். திரும்பி வந்த விவசாயி, ரொம்பவும் வருத்தப்பட்டார்.
ஆனாலும், பாம்புக்கு துன்பம் செய்ததால் தானே மகன் <உயிரிழந்தான் என்ற <உண்மையைப் புரிந்து கொண்டார். மறுநாளேபால் செம்புடன் புற்றுக்கு சென்றார். ஆனால், பாம்பு அதைக் குடிக்கவில்லை.
""நீர் இத்தனை நாளும் எனக்கு சேவை மனப்பான்மையுடன் பால் வைத்தீர். இனிமேல், நம் மகனைக் கொன்ற பாம்பு தானே என்ற எண்ணத்தையும் சுமந்து கொண்டு தான் பால் வைப்பீர். எனவே, இனி இதைக் குடிக்கமாட்டேன்,'' என சொல்லிவிட்டு போய்விட்டது.
தன் மகனைக் கொன்ற பாம்பு பற்றி விவசாயி தப்பாக நினைக்கவில்லை. ஆனாலும், பாம்பு அவர் மீது சந்தேகப்பட்டது. அதுபோல், ராமனும் பரதனை தவறாக நினைக்கவில்லை. ஆனால், அண்ணன் தப்பாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்று பயந்தே, பரதன் மகரிஷிகளின் துணையோடு சென்றான்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் நமக்கு செய்த துன்பத்துக்காக, ஒட்டுமொத்த குடும்பத்தையே வெறுக்கக்கூடாது. அந்தக் குடும்பத்திலும் நல்லவர்கள் இருப்பார்கள். எல்லாரையும் தவறாக நினைக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.

No comments:

Post a Comment