Wednesday, February 22, 2012

ராமபிரானுக்கு அவரது குரு வசிஷ்டர் சொன்ன அறிவுரை


* தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாதவர்கள், உதாசீனப்படுத்தியவர்கள் நரகத்தில் வீழ்வார்கள். சிலர் மரம், செடி, கொடியாவும், சிலர் மிருகமாகவும் பிறப்பார்கள்.
* மனிதன் வாழும் காலத்தில் தனது செயல்பாடுகளால் தான் உயர்வோ தாழ்வோ அடைவான். அதுபோல, அவனது வினைகளின் அடிப்படையிலேயே சொர்க்கத்துக்கே, நரகத்துக்கோ செல்ல முடியும்.
* வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் இன்ப துன்பங்களைச் சமமாக நினைத்து கடமையைச் செய்பவன், எப்பொழுதும் இன்பமாயிருப்பான்.
* எப்படி நல்ல இசையால் மான், பாம்பு ஆகியவையெல்லாம் மயங்குகிறதோ, அதுபோல பணிவாகவும், இனிமையாகவும் பேசுபவன் எல்லோராலும் போற்றப்படுவான்.
* பிறரை மதிக்கும் தன்மை, நேர்மை, அறிவு போன்ற நற்குணங்கள் வேலைக்காரர்களின் சேவையைப் போல மறுபிறவியிலும் தொடரும்.
* கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைந்து உலக வாழ்வு என்ற மாயப்பற்றில் இருந்து விடுபடு.
* உலகில் பிறந்தால் பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும். அவற்றைக் கண்டு பதட்டப்படாதே, சங்கடப்படாதே, நிறைந்த கடலைப் போல இரு. உனக்கு கிடைத்துள்ள பதவி, பணத்தால் பெருமையோ, அகம்பாவமோ கொள்ளாதே.
* பொறுமையாக, அமைதியாக, நடுநிலையாக, @நர்மையாக இரு. நவரத்தினம் போல் ஜொலிப்பாய்.
* "நான் மட்டுமே துன்பப்படுகிறேன், தனிமையில் இருப்பது போல உணர்கிறேன்' என்று உனக்கு மட்டும் ஒரு தனித்துவத்தை வழங்கிக் கொள்ளாதே. உலகில் எல்லாருமே இதே நிலையில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்.
*எப்படி மழைக்காலத்தில் கருத்த மேகங்களைக் கண்டவுடன் அன்னப்பறவைகள், கொக்குகள் வெளிப்படுகின்றனவோ, அதுபோல் முற்பிறவியில் செய்த நற்செயல்களின் பலன், மறுபிறவியிலும் தானாகத் தொடரும்.
* சொந்த முயற்சியால் நாம் அடைந்த பொருள், சொர்க்கத்தில் இருந்து நம் கையில் விழுந்த பழத்துக்கு சமமானது.
* பல பெரிய, நல்ல, வல்லமையுள்ள மனிதர்கள், அவர்கள் மறைந்த பிறகும் நம் மனதில் நினைவுகளாக வாழ்கிறார்கள். அவர்களில் நீயும் ஒருவராகும் நிலையில் இருந்து கொள். இருந்தாலும், மறைந்தாலும் உன் பெயர் நிலைத்திருக்க வேண்டும்.
* பிறப்பும் இறப்பும் அழுகையுடன் ஆரம்பித்து அழுகையுடன் முடிகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடப்பதெல்லாம் கனவு போல மறைந்து விடுகிறது. இதுதான் வாழ்க்கை என்பதைப் புரிந்து கொள்.
* கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காதே. வருங்காலம் பற்றி திட்டமிட்டும் பயனில்லை. நிகழ்காலத்தில் நல்லதைச் செய், வாழ்ந்து காட்டு. அதுவே நிஜம்.
* வாழ்க்கையில் நடப்பவற்றைக் கண்டு பயப்படுபவனுக்கு நிம்மதியே இருக்காது. இவர்கள் படும் துன்பங்களில் இருந்து மீள விதியோ, பணமோ, உறவினர்களோ உதவியும் செய்வதில்லை. உன் சுயமுயற்சியால் மட்டுமே கஷ்டத்தில் இருந்து விடுபட முடியும். 

No comments:

Post a Comment