Thursday, February 16, 2012

வழி சொல்வது எவ்வளவு பெரிய புண்ணியம் தெரியுமா!

நாம் ஏதாவது புது ஊருக்குப் போய், குறிப்பிட்ட இடம் பற்றி விசாரித்தால் , வழி சொல்லக் கூட தயங்குவார்கள். சிலர் உதாசீனப்படுத்துவார்கள். ஆனால், வழி சொல்வது எவ்வளவு பெரிய புண்ணியம் தெரியுமா!
ஒருமுறை, ராமானுஜர் திருப்பதிக்கு சீடர்களுடன் புறப்பட்டார். இரவில் ஓரிடத்தில் அவர்கள் தங்கினர். இருளாக இருந்ததால், தங்கிய இடம் எது என்று கூட அறிய முடியவில்லை. விடிந்த போது, எங்கும் வயலாக இருந்தது. எந்த திசையில் செல்வது என்று புலப்படவில்லை. சற்று தூரத்தில் ஏற்றம் இறைத்தபடி விவசாயி ஒருவர் தென்பட்டார்.
அவரிடம், ""ஏனப்பா! திருப்பதி செல்லும் வழி தெரிந்தால் சொல்வாயா?'' என்று கேட்டார்.
""ஐயா! நான் அங்கே போனதில்லை. அதோ தெரிகிறதே! அந்த மலையை ஒட்டிய பாதையில் "வெங்கடரமணா கோவிந்தா' என்று பாடிக் கொண்டு பக்தர்கள் செல்வதைப் பார்த்திருக்கிறேன்,'' என்றார்.
வழியைத் தெரிந்து கொண்டதும் எல்லாரும் புறப்பட்டனர்.
ராமானுஜர் சீடர்களை நிறுத்தி, ""திருப்பதிக்கு வழிகாட்டியதால் இவர் நமக்கெல்லாம் குருநாதராகி விட்டார். அதனால், இவருக்கு தெண்டனிடுவோம் வாருங்கள்,'' என்று சொல்லி வணங்கினார்.
பாதை காட்டுவது எவ்வளவு பெரிய புண்ணியம் பார்த்தீர்களா! 

No comments:

Post a Comment