Sunday, March 4, 2012

இனிமையான இல்லறம் அமைய


இன்று உள்ள காலகட்டத்தில் குடும்பத்தை நடத்தும் பொறுப்பு, பணிச்சுமை போன்ற பலவிதமான காரணங்களால் கணவன், மனைவி இருவரும் தங்களுக்குள் அன்பையோ, பிரச்சனைகளையோ பரிமாறிக் கொள்வது குறைந்து வருகிறது. மனம் ஒத்த தம்பதிகளாக நூற்றுக்குப் பத்து பேர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இருவரும் விட்டுக் கொடுத்து வாழ மனமில்லாமல் தங்களில் யார் பெரியவர் என்ற மனநிலையிலேயே காலத்தை கழித்து விடுகின்றனர். காலப்போக்கில் கணவன், மனைவி இருவருமே குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்கிறோம் என்ற சூழ்நிலை உருவாகி விடுகிறது. ஆனால் அப்படி இல்லாமல் வாழும் காலம் வரை கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் மட்டுமே வாழ வேண்டும். இப்படி இல்லறத்தை நடத்துபவர்களும், இல்லற வாழ்க்கையில் ஈடுபடப் போகின்றவர்களும் கீழே உள்ள சிறுகதையைப் படித்து இல்லறத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சுமனை என்பவள் உத்தமமான பதிவிரதை. கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழ்ந்தவள். இவள் திடீரென மரணம் எய்ததும், சொர்க்க லோகத்துக்குச் செல்கிறாள். நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அப்போது அங்கே சாண்டல்யன் என்பவன் எப்படியம்மா உனக்கு இப்படி ஒரு வரவேற்பு? ஏதேனும் சந்நியாச வாழ்க்கை வாழ்ந்து, உயர்ந்த நெறிகளைக் கடைப்பிடித்தாயா? என்று கேட்கிறான். அதற்கு சுமனை, சந்நியாச வாழ்க்கை எல்லாம் வாழவில்லை. பெண்களுக்கே உரிய தர்மப்படி என் கணவரைப் போற்றி வாழ்ந்தேன். அவருக்கு உரிய கடமைகளை நான் முறையாகச் செய்தேன். அவ்வளவுதான் என்றாள். வியந்தான் சாண்டல்யன். அப்படி, என்ன, எவரும் செய்யாததை நீ உன் கணவனுக்குச் செய்தாய்? என்று எதிர் கேள்வி கேட்டான். என் கணவர் மனம் வருந்தும்படி எந்த நாளும் ஒரு செய்கையை நான் செய்ததில்லை. எப்போதும் கனிவான வார்த்தைகளையே பேசி வந்தேன். கணவருக்கு எந்த ஒரு தொந்தரவையும் தர மாட்டேன். என் கணவருக்குப் பிடித்ததை மட்டுமே சமைப்பேன். பணி நிமித்தம் கணவர் வெளியே எங்காவது சென்றிருந்தால், அவர் திரும்பி வரும்வரை தெய்வ வழிபாட்டில் இருப்பேன்.
அசதியின் காரணமாக அவர் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும்போது எத்தகைய முக்கியமான செய்தி என்றாலும், அவரை எழுப்பவே மாட்டேன். இதை வாங்கிக் கொடுங்கள்... அதை வாங்கிக் கொடுங்கள் என்று அவரை நச்சரிக்க மாட்டேன். எனக்குப் பணம் தாருங்கள் என்று அவரிடம் எந்த நாளும் நான் கேட்டதே இல்லை. அவர் ஊரில் இல்லை என்றால், நான் என்னை அலங்கரித்துக் கொள்ள மாட்டேன். என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போக... சாண்டல்யன் அதிசயித்தான். அவளை வணங்கினான். இதைப் படிக்கும் கணவன்மார்களுக்கு, தங்களது மனைவியும் இப்படி இருந்தால் எத்தனை சுகமாக இருக்கும் என்கிற ஏக்கம் வருவது இயற்கை! உண்மை ! எதிர்பார்ப்பு ! ஆனால், பதிவிரதா தர்மத்தில் இருந்து சுமனை இம்மியும் நழுவாமல் இருந்ததற்கு, உத்தமமான அந்தக் கணவனும் ஒரு காரணம் என்பது உண்மை. இல்லறம் என்பது கணவனும் மனைவியும் இணைந்து நடத்துகிற நல்லறம் ! அதில் கண்ணீரும், கவலையும் கலந்து விடாமல் இருக்க வேண்டும் ! கணவனும் மனைவியும் ஒருவர் மீது மற்றொருவர் செலுத்துகிற அன்பே, இந்த இல்லறத்தின் மூலதனம் ! இதயம் மட்டும் உறுதி கொண்டதாக அமைந்து விட்டால், ஒரு சுண்டெலிகூட யானையைத் தாக்கி விடும் என்பது மேலைநாட்டுப் பழமொழி. உங்கள் இதயங்களை உறுதி கொண்டதாக ஆக்குங்கள். இல்லறம் நல்லறமாக மாறும்

No comments:

Post a Comment