Sunday, July 29, 2012

நல்லவர்களைச் சார்ந்திருக்கும் தீயவர்கள் கூட அழிவதில்லை.

ஒரு ஊருக்கு வந்த துறவி, ""நல்லவர்களுடன் மட்டுமே சேருங்கள். ஆன்மிக சொற்பொழிவுகள், பஜனைகளுக்கு சென்று வாருங்கள். நலமாக இருப்பீர்கள். நான் சொல்லும் இந்த மந்திரவாக்கு உறுதியாகப் பலிக்கும்'' என்று அங்குள்ள மக்களுக்கு போதித்து வந்தார். ஒரு வாலிபன் அவரிடம்""ஐயா சாமி! சொல்வது அப்படியே பலிக்கும் என்கிறீர்களே! நீங்கள் என்ன மந்திரவாதியா?'' என்று கேலியான தொனியில் கேட்டான். ""அப்படித்தான் வைத்துக்கொள்ளேன்,'' என்ற துறவியிடம், ""அப்படியானால், இந்தக் கல்லை தண்ணீரில் மிதக்கச் செய்ய முடியுமா?'' என்று ஒரு பொடிக்கல்லை எடுத்துக்கொடுத்தான் வாலிபன். துறவி அதை தண்ணீருக்குள் வீசினார். மூழ்கிவிட்டது. வாலிபன் சிரித்தான். ""தம்பி! அவசரப்படாதே! இது சிறிய கல், பெரிய கல்லை நான் மிதக்க வைப்பேன். ஒரு மணிநேரம் கழித்து வா. கல் மிதக்கும்,'' என்றார் வாலிபன் போய்விட்டான். துறவி ஒரு மரப்பலகையை எடுத்தார். அதன்மேல் பெரிய பாறாங்கல்லை வைத்து தண்ணீரில் போட்டார். கட்டை மீதிருந்த கல் மிதந்தது. வாலிபன் வந்தான். இந்தக்காட்சியைப் பார்த்து சிரித்தான். ""கட்டை மீது கல்லை வைத்துக் கட்டினால் மிதக்கும் என்பது நான் அறியாததா?'' என்றான் ஏளனமாக. ""தம்பி! இதில் கல்லை தீயது என்றும், கட்டையை நல்லது என்றும் வைத்துக்கொள். நல்லவர்களைச் சார்ந்திருக்கும் தீயவர்கள் கூட அழிவதில்லை. புரிகிறதா?'' என்றார். நல்லவர்களுடன் சேர்ந்தால் கெட்டவர்களும் நலம் பெறுவர்... புரிகிறதா!

No comments:

Post a Comment