Wednesday, July 11, 2012

இராமரின் குழந்தைப் பருவ லீலை

கோசலையின் மகனுக்கு வசிட்டர் "இராமன்' என்றுதான் பெயரிட்டார். "இராமன் எனப் பெயர் ஈந்தனன்' என்பது கம்பன் வாக்கு.

"இன்பத்தின் இருப்பிடம், அகில உலகுக்கும் அமைதி தருபவன் ஆதலால் இராமன் என்ற பெயரே சிறந்தது' என்று வசிட்டர் பெயரிட்ட தாக துளசி மகா முனிவரும் இதனை உறுதிப் படுத்துகிறார்.

உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் இராம காதை இருந்தாலும், அனைத்துக் கதைகளிலும் இராமன் என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்தனர்.

ஆனால் நடைமுறையில் இராமச்சந்திரன் என்றே பண்டிதர் முதல் பாமரர் வரை வழங்குகின்றனர்.

நாட்டுப்புறக் கதையாக உருவான இராம கதைக்கு ஏட்டுப்புற வடிவம் கொடுத்தவரும் வேடர் குலத்தவரான வால்மீகிதானே!

நாட்டுப்புறவாசியின் கற்பனை இன்பம் கண்ட நாட்டுப்புறக் கலைஞன் சும்மா இருப்பானா...?

தன்னுடைய கற்பனையும் அதனுடன் இணைந்து- இயைந்து இருக்க வேண்டும் என்று எண்ண மாட்டானா?

இதன் அடிப்படையிலேயே இராமச்சந்திரன் பெயர் காரணத்தை கற்பனைக் கதையாக வடித்து விட்டான்.

துளசி இராமாயணம் இயற்றிய துளசிதாசரே இராமரின் குழந்தைப் பருவ லீலைகளை பலப்பட பாடியுள்ளார்.

அதில் ஒரு கதை...

கைகேயி இராமனைத் தன் இடுப்பில் வைத்துப் பாலமுது ஊட்டிக் கொண்டிருக் கிறாள்.

இராமன் நிலவினைக் காட்டி, "சந்திரன் என்னுடன் விளையாட வரவேண்டும்' என்று அடம் பிடிக்கிறான்.

நிலா நிலா ஓடிவா...

நில்லாமல் ஓடிவா...

என்று பாடத்தான் முடியும். நிலவை இப்பூவுலகுக்குக் கொண்டு வருவது எப்படி?

இராமனின் பிடிவாதம் ஓயவில்லை. நிலவைக் கொண்டு வரமுடியாது. நிலா இல்லாமல் இராமன் சோறு உண்ண மாட்டான்.

தாய் கைகேயி எத்தனையோ போக்குக் காட்டி முயன்றும் இராமனை சாப்பிட வைக்க முடிய வில்லை. இராமன் பட்டினி கிடப்பதை எப்படிப் பொறுப்பது... கைகேயி கண்களில் கண்ணீர்.

இப்பிரச்சினையைத் தீர்க்க தாதி ஒருத்தி முன்வந்தாள்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வந்து இராமன் அருகில் வைத்தாள். அந்தத் தண்ணீரில் சந்திரனின் பிம்பம் தெரிந்தது. "இராமா இதோ பார்! சந்திரன் வந்துவிட்டான். அவனைப் பார்த்துக் கொண்டு சாப்பிடு' என்றவாறு கைகேயி பாலமுதை ஊட்டலானாள்.

இராமனும் பிடிவாதத்தைவிட்டு சந்திரனைக் கண்ட மகிழ்வுடன் சாப்பிடத் தொடங்கினான்.

இந்த நிகழ்ச்சி நடந்தது முதல் இராமன் பெயருடன் சந்திரன் பெயரும் இணைந்து உலகம் முழுவதும் இராமச்சந்திரன் என அழைக்கப்பட்டான்.

No comments:

Post a Comment