Tuesday, September 11, 2012

கோ தான பலன்கள்.../(கோ தானத்தின் வகைகள்.............

தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ தானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும். உத்திர நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 3-க்குள் அமைவது உத்தமம் என்றும் 2-க்குள் இருந்தால் கெடுதல் என்றும், இதற்கு அடுத்து எட்டிற்குள் வந்தால் லாபமாகவும் சொல்லப்படுகிறது. 3-லிருந்து 5-க்குள் அமைந்தால் மனத்திருப்தியையும் 1-ல் முடிவது பயத்தையும் உண்டுபண்ணும். பொதுவாக நாலு கால் பிராணி வாங்குவதற்கென்றே ஜோதிடத்தில் சில விதிமுறைகள் உள்ளன. பசு தானம் செய்பவன் தனது முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது. பசுக்களை நன்கு படித்த பண்டிதர்களுக்கும், அதை பராமரிக்கக்கூடிய சக்தி உள்ளவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். அல்லது ஆலயங்களில் தானமாக பசுவைக் கொடுக்கலாம். தானம் செய்ய வேண்டிய பசு கன்றுடன் கூடியதாக இருக்க வேண்டும். கூடுமானவரை முதல் கன்றாக இருந்தால் உத்தமம். கொம்பு, கால், குளம்பு போன்றவை உடையாமலும், வியாதி இல்லாமலும் ஆரோக்கியமாக உள்ள பசுவையே தானம் செய்ய வேண்டும். பசுவை அந்தனர் தானமாக வாங்கினால் ஆறு மாத காலத்திற்கு புரோகிதத்தால் ஜீவனம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் விசேஷமாக காயத்ரி ஜெபத்தை தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். பசுவை தானம் செய்பவர்கள் குளித்து, சூரியனை வணங்கி கிழக்கு முகமாக இருந்து தங்கள் கோரிக்கையை சொல்லி தானம் கொடுக்கலாம். தானம் தரவேண்டிய பசுவின் இரு கொம்புகளிலும் சிறிது தங்கம் சேர்த்த பூண் பூட்டப்பட வேண்டும். நான்கு கால்களிலும் வெள்ளியால் செய்த சலங்கை அணிவிக்கப்பட வேண்டும். பட்டுத்துணி அதன் மீது அணிவித்து அந்த பசு மாட்டிற்கு தேவையான ஒரு வருட உணவையும் சேர்த்தே தானம் செய்ய வேண்டும். தானம் வாங்குபவருக்கு ஆறு மாதத்திற்கு தேவையான பொருளோ, பணமோ கொடுக்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அன்னதானம், வஸ்திர தானம் (துணி தானம்) போன்றவைகளை பொருள் இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும். பசு தானம் மட்டும் அதை பராமரிக்க சக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே தரவேண்டும். கோ தானத்தின் வகைகள்........ கோ தானம் என்பது ஒரு குறிப்பிட்ட காரிம் வெற்றிகரமாக முடிய சங்கல்பம் செய்து செய்யலாம். யாகம் ஆரம்பிக்கும் பொழுதும், சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும். தனது வம்சம் சிறப்புற விளங்கவும் கோ தானம் செய்யலாம். ஒருவர் தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தனக்காக தானே கோ தானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் பிரியும் பொழுது அவருக்காக உக்ராந்தி கோ தானம் என்று செய்வதுண்டு ஒருவர் இறந்த 12-ம் நாள் வைதரணி என்ற கடுமையான நாற்றம் உள்ள நதியைக் கடக்கவும் கோ தானம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு வைதரணி கேப தானம் என்று பெயர். வைதரணி கோ தானம் செய்வதால் பசுவின் வாலைப்பிடித்துக் கொண்டு இறந்தவர் நற்கதி அடைவதாக சொல்லப்பட்டுள்ளது. வருடப்பிறப்பிலும் புண்ணிய காலங்களிலும் கோ தானம் செய்வது மிக விசேஷமானதாகும். சித்திரை மாதத்தில் வளர்பிறை அல்லது தேய்பிறையிëல் வரும் சதுர்த்தியன்று விரதமிருந்து தேவாரம், திருவாசகம் ஓதி, சிவபுராணம் படிக்கக் கேட்டு பசுவை தானம் செய்ய வேண்டும். சிவபெருமான் அருளால் தானம் செய்பவர் உயர்ந்த கதி அடைகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விதம் தானம் செய்பவர் கைலாசத்தில் சிவகணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பலனை அடைவார். ஒருவர் இறக்கும் தருவாயில் கோ தானம் செய்வதால் எம பயம் விலகுகிறது. பசுவை தானம் செய்ய இயலாதவர்கள் ஆலயங்களில் உள்ள பசுவை அதன் உயிர் உள்ளவரை அதற்கு தேவையான உணவை கொடுத்து பராமரிப்பது பசு தானம் செய்வதை விட உயர்ந்த பலனை கொடுக்கும். பசுவை தானம் செய்வதாக இருந்தால் ஆரோக்கியமான பசுவை தானம் செய்ய வேண்டும். பராமரிப்பதாக இருந்தால் ஆரோக்கியம் இல்லாத நோய் உள்ள பசுவானாலும் பராமரிக்கலாம். பால் வற்றிய பசுவை பராமரிக்க பொருள் உதவி செய்பவர்கள் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலனை அடைவார்கள். கோ தான பலன்கள்........ இந்திரன் இருக்குமிடம் இந்திரலோகம் என்றும், பித்ருக்கள் இருக்குமிடம் பித்ருக்கள் லோகம் என்றும், விஷ்ணு பகவான் இருக்குமிடம் வைகுந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. அதுபோல் கிருஷ்ண பகவான் இருக்குமிடம் கோ லோகம் என்று கூறப்பட்டுள்ளது. பசுவை தானம் கொடுப்பவர், பசுவின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு ஆண்டாக இறந்த பிறகு பல ஆயிரம் வருடங்கள் கோ லோகத்தில் கிருஷ்ண பகவானுடன் சேர்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது. பசு தானத்தால் ஒருவர் தனது முன் ஏழு, பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்கு போக வழி செய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது. ஆலயங்களுக்கு பசுதானம் செய்தல்........ ஆலயங்களில் பசு தானம் செய்தால் கட்டாயம் அந்த பசுவை பராமரிக்க தேவையான நிதியையும் சேர்த்துக் கொடுப்பதே நன்மைதரும். பெரும்பாலான ஆலயங்களுக்கு பசு தானம் தருபவர்கள் வயதான அல்லது பால் கறவை இல்லாத அல்லது கன்று இல்லாத பசுக்களை தானமாக கொடுத்து விடுகிறார்கள். பசு தானம் செய்ய எண்ணினால் நல்ல கன்றுடன் கூடிய ஆரோக்கியமான பசுவையும் அதற்கு தேவையான பொருளோ, பணமோ சேர்த்தே கொடுப்பது தான் நல்லது. கோ தானம் கொடுப்பது எப்படி? பிரசித்தி பெற்ற தலம் பிரயாகை. இது அலகாபாத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது. இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் சங்கமமாகிறது. இதற்கு தனிப்பெருமை உண்டு. அனேக கோடி புண்ணிய தீர்த்தங்களில் சிறந்தது பிரயாகை என்றும் சொல்லப்படுகிறது. இந்த இடத்தை திரிவேணி சங்கமம் என்றும் கூறுவர். கங்கையை விண்ணவரும், யமுனையை சூரியனும், பிரயாகையை இந்திரனும் காப்பதாக ஐதீகம். மனித வாழ்க்கையில் ஒரு முறையாவது பிரயாகை கங்கை ஸ்நானம் அவசியம். இந்தப் பிரயாகையில் செய்யும் தானங்களுக்கு, பிரமாதமான பலன்கள் உண்டு. பிரயாகையில் ஒரு மாதமோ, குறைந்தது மூன்று தினங்களோ தங்கி ஸ்நானம் செய்து தான தர்மங்கள் செய்ய வேண்டும். இந்த இடத்தில் கோ தானம் செய்தால், அந்தப் பசுவின் உடலில் எத்தனை ரோமங்கள் உள்ளதோ அத்தனை வருட காலம் சிவலோக வாசம் கிடைக்கும் என்பது ஐதீகம். எந்த தானம் கொடுத்தாலும் அது பித்ருக்களின் பிரீதிக்காக கொடுப்பதாக நினைக்க வேண்டும். தானம் வாங்குபவர்களும், பித்ருக்கள் திருப்தியடைவதாக எண்ணி வாங்க வேண்டும். கோ தானம் கொடுப்பது என்றால் நன்றாகக் கறக்கும் பசுவை, கன்றுடன் சேர்த்து (இளங்கன்று சிறந்தது) பசுவுக்கு அலங்காரம் செய்து கொம்பில், கொப்பிகள், குளம்புகளில் வெள்ளி காப்பு, கழுத்தில் பட்டாடை இவைகளுடன் தானம் செய்ய வேண்டும். கிழ மாட்டையும், நோய் பிடித்த மாட்டையும், தானம் செய்வதால் பலன் இல்லை. நல்ல கறவை மாடு, இளங்கன்று என்றால், ஒரு வருஷத்துக்கு பால் கறந்து சாப்பிடுவர். சிலர் பூஜைக்கும் அபிஷேகத்துக்கும் அதன் பாலை பயன்டுத்துவர். இதனால் பசுவை தானம் செய்த புண்ணியமும், பூஜை அபிஷேகத்துக்குப் பசும்பால் கிடைக்க உதவி செய்த புண்ணியமும் கிடைக்கிறது. ஒரு தடவை இப்படியொரு கோ தானம் செய்து விட்டால், நிரந்தர புண்ணியம் கிடைக்கும்.

No comments:

Post a Comment