Wednesday, September 26, 2012

சோதிடமும் பரிகாரங்கள்

நமது கர்மாவை நாமே அனுபவித்து தீர்க்க வேண்டும். இதை சைவம் மட்டுமல்ல இந்து மதப்பிரிவுகள் அனைத்தும், பௌத்தம், சமணம் போன்ற ஏனைய மதங்களும் கூட ஏற்றுக்கொண்ட ஒன்று. ஆயினும் மனதில் தன்னம்பிக்கையை ஊட்டி, சேவையினூடாகவும், வழிபாடுகளினூடாகவும் சில பரிகாரங்களைச் செய்யும்போது அது நமது கர்ம பலன்களை தவிர்க்கவோ அல்லது குறைக்கவோ கூடும். ஆகக்குறைந்தது அதை எதிர்கொள்ளும் மனப்பாங்கையும், மனோபலத்தையுமாவது தரவல்லது. இவை மிகவும் எளிமையான பரிகார முறைகளே. இவற்றுக்கு அதிக பணச்செலவும் இல்லை. இந்த எளிய பரிகாரங்களைப் பூசகருக்கோ அல்லது இன்னொருவருக்கோ பணம் கொடுத்தும் செய்விக்கலாம் என்று சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் ஒன்றான சிவப்பிரகாசம் கூறுகின்றது. "மற்றவற்றின் ஒருவினைக்குஓர் வினையால் வீடு வைதிக சைவம் பகரும் வழியில் ஆற்றப் பற்றியது கழியும்; விலையால் ஏற்கும் பான்மையுமாம்" -சிவப்பிரகாசம் பாடல் 31- ஆனால் இந்தப் பரிகாரங்கள் அல்லது பிராயச்சித்தங்கள் வைதிக சைவம் பகரும் வழியில் அதாவது வேத ஆகம நூல்களின் பிரகாரம் செய்யப்படவேண்டும். சைவ ஆகமங்கள் இருபத்தெட்டிலும் பிராயச்சித்தவிதி என்று ஒரு படலம் உண்டு. இவற்றை அறியாமல் வெற்றுச் சாத்திரிமார் சொல்லும் போலிப்பரிகாரங்களைப் பெரும் பணச்செலவில் செய்தும் பலன் ஒன்றும் இல்லாமல் அலையும் மக்கள் பலர். இவ்வாறு கர்ம வினைகளைக் கழிப்பதற்கு முதலிலே நமது கஷ்டங்களுக்கு காரணம் நமது கர்ம வினைகளே என்ற எண்ணம் வர வேண்டும்; அது என்ன என்று அறிய தகுந்த ஒருவரை அணுக வேண்டும்; அவருக்கு சோதிடத்தோடு வேத ஆகம முறைப்படியான பரிகார வழிகளும் தெரிந்திருத்தல் வேண்டும்; அவர் சொல்லும் பரிகாரங்களை நாம் நம்பிக்கையோடு செய்யவேண்டும். இவ்வாறு நமது கஷ்டங்களுக்கு நமது கர்மாவே காரணம் என்று உணராமலும், சோதிடரை நாடாமலும், பரிகாரம் தெரியாமலும் இருந்தாலும் எமது கர்ம வினைகள் கழிவதற்கு வழி உண்டா என்று கேட்கலாம். உண்டு என்று முன்னர் சொன்ன சிவப்பிரகாசம் என்னும் சைவ சித்தாந்த நூல் கூறுகின்றது. " பண்ணாது பலிக்கும் பான்மையுமாம்" -சிவப்பிரகாசம் பாடல் 31- அது எவ்வாறெனில் முன் சொன்ன சைவ ஆகம நூல்கள் கூறும் வழிப்படி நடந்து வந்தால். அவ் வழிகள் எவை என்று கேட்கலாம். அவ் வழிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு படிநெறிகளாம். இப்படி முறைகளை எமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தால் பரிகாரங்களுக்கு அடங்காத கர்ம வினைகள் கூடச் சோர்ந்து அடங்கி விடும். ”முன் சொற்றரு நூல் வழியின் வரின் மிகுதி சோரும்” -சிவப்பிரகாசம் பாடல் 31- “சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்” என்ற திருவாசக வரிகள் இவ்வாறு திருமுறைகளை ஓதுவதால் எமது முந்தைய கர்ம வினைகள் ஓயும் என்று கூறுகின்றன. ” சிவசிவ என்றிடத் தீவினை மாளும்” என்று திருமந்திரம் சொல்லுகின்றது. எமது மதத்துக்கு புறம்பாக உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கூட "சொற்றரு நூல் வழியின் வரின்" என்பதின் படி அவரவர் மத நூல்களின் படி ஒழுகி வந்தாலே அவர்களுக்கு கர்ம வினைகளினால் ஏற்படுகின்ற துன்பங்கள் கழியும். 'தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் எவ்வளவு பெரிதாயிருந்தபோதிலும், அவற்றுக்குப் பிராயச்சித்தம் தனிமையில் இருந்து சிவநாமத்தை உச்சரித்தலே' என்று 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹரதத்த சிவாச்சாரியார் பாடிய சுலோகம் ஒன்று கூறுகின்றது. 'ஞானாக்ஞான ப்ரயுக்தானாம் பாபானாம் மகதாம்கபி ஏகாந்த நிஷ்கிரதி; சம்போ: ஸகிர்தேவஹி கீர்தனாத்' - ஹரதத்த சிவாச்சாரியார்- ஹரதத்த சிவாச்சாரியார் இந்த சுலோகத்தை பாதி எழுதிய நிலையில் வைத்து விட்டு செல்ல இவர் வடிவில் சிவபிரானே வந்து மிகுதி பாதியையும் எழுதி பூரணப்படுத்திச் சென்றதாக வரலாறு கூறுகின்றது. இவ்வாறு சிவனே தன் கையினால் எழுதி வைத்த கர்ம பரிகாரம் இது.

No comments:

Post a Comment