Wednesday, September 26, 2012

காயத்திரி மந்திர பொருள்

காயத்திரி மந்திரத்தைப் பலர் சொன்னாலும் அதன் பொருள் என்ன என்று பலருக்குத் தெரியாது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதி தான்பாடிய பாஞ்சாலி சபதத்தில் பின்வருமாறு பாடியுள்ளான். "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" செங்கதிர்த்தேவன் என்பது சூரியனைக் குறிக்கும் செங்கதிர்த்தேவன், காய்கதிர்செல்வன், வெய்யோன், ஞாயிறு, செஞ்சுடரோன், கதிரவன் என்று சூரியனுக்கு பல பெயர்கள் உள்ளன. எமது சைவம் சுட்டுகின்ற சூரியன்கள் பல. 1. பௌதிக சூரியன்: ஒன்று எமது பூமிக்கு ஒளி கொடுக்கும் எரிகோளமான சூரியன். கிரகங்கள் எல்லாம் இந்த சூரியனைத்தான் நீள் வட்டப்பாதையில் வலம் வருகின்றன. இது பௌதிக சூரியன் ; இதற்கு உயிரோ அல்லது உணர்வோ இல்லை. ஆனாலும் இயற்கையில் இறை வெளிப்பட்டு நிற்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர்கள் என்ற அஷ்ட மூர்த்தங்களில் ஒன்றாக இந்தப் பௌதிக சூரியனைச் சைவம் கூறுகின்றது. "மண்ணோடு நீர் அனல்காலோடு ஆகாயம் மதிஇரவி எண்ணில்வரும் இயமானன்....." -சம்பந்தர் தேவாரம்- “இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமானனாய் எறியும் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாசமாய் அட்டமூர்த்தியாகி...” -திருநாவுக்கரசர் தேவாரம்- இதே போல வைணவர்களும் சூரியனை விஷ்ணுவின் நவ வெளிப்பாடுகளில் ஒன்றாகக் காண்கின்றார்கள் என்பது பின்வரும் நம்மாழ்வார் திருமொழியில் இருந்து தெரிகின்றது. 'நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்' - நம்மாழ்வார் ஒன்பதாம் திருமொழி- 2. சூரிய தேவன்இந்த பௌதிக சூரியனுக்கு அதி தெய்வமாக உள்ள தேவதை சூரிய தேவன். இவனையே சோதிட நூல்கள் நவக்கிரகங்களில் ஒன்றாக மொழிகின்றன. கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நவக்கிரகங்களில் உள்ள சூரியன் இவரே. கிரக வழிபாட்டை ஏற்றுப் பலன் தரும் சூரியனும் இவரே. 3. துவாதச ஆதித்தர்கள்: இதைவிட துவாதச ஆதித்யர்கள் என்று பன்னிரு சூரியர்கள் உள்ளார்கள். எமது சூரியக் கிரகத்துக்கும் அதன் அதி தெய்வமான சூரிய தேவனுக்கும் சுழற்சி முறையில் மாதம் ஒருமுறை அதிபதியாக வந்து வழிகாட்டி ஒளி காட்டும் தேவர்கள் இவர்கள். வைகத்தன், விவச்சுதன், மார்த்தாண்டன், பாற்கரன் இரவி, உலோகப்பிரகாசன், உலோகசாட்சி திரிவிக்கிரமன், ஆதித்தன், சமித்திரன், துவட்டா அங்கிசமன் என்ப பன்னிரண்டு ஆதித்தர் என்று பன்னிரண்டு ஆதித்தர்களை திவாகர நிகண்டு கூறுகின்றது. பேரூழிக் காலத்தில் இப்பன்னிரண்டு ஆதித்தர்களும் நெருங்கி வர உலகத்தொகுதியை மூழ்கடித்திருக்கின்ற பிரளய வெள்ளத்தின் மத்தியிலிருந்து அக்கினி உருவாகும். இதையே வடமுகாக்கினி என்று சைவம் கூறுகின்றது. இன்றைய அண்டவியல் விஞ்ஞானமும் அண்டத்தொகுதிகளின் பேரொடுக்கத்தில் (Big Crunch) கோளத்தொகுதிகள் நெருங்கி வரவர அவற்றின் வெம்மை அதிகரித்து அக்கினி பிறக்கும் என்றே கூறுகின்றது. 4. அப்பிராகிருத சூரியன்: இவ்வாறு இந்தப் பிரகிருதியில் உள்ள அண்டத்தொகுதிகளின் கோடிக்கணக்கான சூரியர்களுக்கு ஒளி கொடுக்கும் சூரியனை அப்பிராகிருத சூரியன் என்பர். அப்பிராகிருத சூரியன் என்றால் இந்தப் பௌதிகத்திற்கு அப்பாற்பட்ட சூரியன் என்று பொருள். இந்த அப்பிராகிருத சூரிய மண்டலத்தையே இறப்பின் பின் ஒளிமார்க்கத்தில் செல்லும் உயிர்கள் கடந்து செல்கின்றன. இந்த அப்பிராகிருத சூரியனையே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரும் பாடியுள்ளார். "இருள் அகற்றும் எறிகதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான்" -பெரியாழ்வார் திருமொழி 414- இந்த அப்பிராகிருத சூரியனையே சைவ நாயன்மார்களில் ஒருவரான அப்பர் சுவாமிகளும் பாடியுள்ளார். “அங்கதிரோன் அவனை அண்ணலாக் கருத வேண்டா வெங்கதிரோன் வழியே போவதற்கு அமைந்து கொள்மின் அங்கதிரோன் அவனை உடன் வைத்த ஆதிமூர்த்தி செங்கதிரோன் வணங்கும் திருச்சோற்றுத் துறையனாரே” -திருநாவுக்கரசர் தேவாரம்- 5. சிவசூரியன்: அண்ட சராசரங்கள் எங்குமுள்ள பல்லாயிரக் கணக்கான ஒளி முதல்களுக்கு ஒளி கொடுப்பது ஒரே இறைவனே. இதை சிவசூரியன் என்று சைவம் சொல்ல சூரிய நாராயணன் என்று வைணவம் சொல்லுகின்றது. இவ்வாறு சைவர்கள் சிவனை ஒளிமுதல்களுக்கெல்லாம் ஒளிமுதலான சிவசூரியனாக வழிபடுகின்றனர். இதையே சிவஞானசித்தியாரும் பின்வருமாறு கூறும். ”நாயகன் கண் நயப்பால் நாயகி புதைப்ப, எங்கும் பாய் இருள் ஆகிமூட, பரிந்து உலகினுக்கு நெற்றித் தூய நேத்திரத்தினாலே சுடர் ஒளி கொடுத்த பண்பின் தேயம் ஆர் ஒளிகள் எல்லாம் சிவன் உருத் தேசது என்னார்” - சிவஞானசித்தியார் 72 இந்த இறையையே வைஷ்ணவர்கள் சூரிய நாராயணனாக வழிபடுகின்றனர். நமது தினசரி ஆத்மார்த்த சிவபூசை சூரிய பூசையுடன் தொடங்கி சண்டேச பூசையுடன் நிறைவு பெறுகின்றது. இதை சூர்யாதி சண்டாந்த பூசை என்பார்கள். இந்த சூரிய வழிபாடுகள் வெறும் பௌதிக நெருப்புக் கோளமான, உயிரற்ற, உணர்வற்ற, சடமான சூரியனுக்கு அல்ல; இங்கு வெளிப்பட்டு நிற்கும் இறைவனுக்கேயாம். காயத்திரி மந்திரமும் இந்த சூரியனையே துதிக்கின்றது. அப்பர் சுவாமிகளும், நம்மாழ்வாரும் பாடிய சூரியனும் இதுவே. ஆதலால்தான் 'அங்கதிரோன் அவனை அண்ணலாக் கருத வேண்டா' என்று அப்பர் பாடியிருக்கின்றார், காயத்திரி மந்திரத்தின் பொருள் சிவனே என்று சிவனை முழுமுதற் கடவுளென்பதற்கு கூறும் இருபத்திரண்டு காரணங்களில் முதலாவது காரணமாக அப்பைய தீக்ஷிதர் பாடிய சுலோக பஞ்சகம் கூறுகின்றது. இதையே 'உயர் காயத்திரிக்குப் பொருளாகலின்'

No comments:

Post a Comment