Wednesday, September 26, 2012

அக்கினிஹோத்திரம்

அக்கினி ஹோத்திரத்தில் பாவிக்கும் அக்கினி மூன்று வகை. 1. காருக பத்திய அக்கினி; இதுதான் மிகவும் முக்கியமான அக்கினி. சிக்கி முக்கிக் கல்லைக்கொண்டோ அல்லது அரணிக்கட்டைகளை கடைந்தோ நெருப்பை உருவாக்கி இந்த அக்கினியை புதிதாக உருவாக்க வேண்டும். கார்ஹபத்ய= க்ருஹ+பதி= கிருகத்துக்கு அதிபதியாக இருந்து காப்பது என்று பொருள். 2. ஆகவனீய அக்கினி 3. தக்ஷிணாக்கினி பின்னர் சொன்ன இரண்டு அக்கினிகளையும் முன் சொன்ன கார்ஹபத்ய அக்கினியில் இருந்துதான் பற்ற விட்டு பசு நெய்யினால் ஹோமம் செய்ய வேண்டும். இவ்வாறு நாளும் தமது இல்லத்தில் அக்கினி வளர்த்து எரியோம்பி வழிபடுதலை அந்தணர் செய்து வந்தனர். "மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து" என்று ஆகவனீயம், காருக பத்தியம், தக்ஷிணாக்கினி ஆகிய மூன்று வகையான அக்கினியையும் திருமுருகாற்றுப்படை கூறுகின்றது. திருமுருகாற்றுப்படை சைவ இலக்கியங்களின் தொகுப்பான திருமுறைகளில் பதினோராம் திருமுறையிலும், சங்க இலக்கியங்களின் தொகுப்புகளில் ஒன்றான பத்துப்பாட்டிலும் ஒருங்கே இடம்பெற்றிருக்கின்றது. இவ்வாறு திருமுறைகள் சங்க இலக்கியங்கள் இரண்டிலும் இடம் பிடித்துள்ள ஒரே பாடல் கடைச்சங்க காலத்து மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரன் பாடிய திருமுருகாற்றுப்படைதான். “கற்றாங் கெரியோம்பி கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய முற்றா வெண்டிங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் ப்ற்றா பாவமே” என்று தில்லை வாழ் அந்தணர்கள் எரியோம்பி வாழ்வதை சம்பந்தர் தனது தேவாரத்தில் குறிப்பிடுகின்றார். திருஞான சம்பந்தருடைய அடியார் குழு திருநீலநக்கர் என்னும் அந்தணர் இல்லத்தில் எழுந்தருளியபோது அவர் திருஞான சம்பந்தரோடு இருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் யாழிசை பாடும் பாணரை சம்பந்தரின் வேண்டுகோளின் பேரில் தனது இல்லத்திலேயே, அதுவும் தாம் அக்கினி வளர்த்துச் சிவ பூசை செய்யும் மேடையிலேயே இடம் கொடுத்தார். அடுத்த நாள் அவர் அக்கினி காரியம் செய்யும்போது சிவாக்கினி முன்னெப்போதும் இல்லாதவாறு பெரிதாக வலஞ் சுழித்து எழும்பி ஆசீர்வதித்தது என்று பெரிய புராணத்தில் பார்க்கின்றோம். நின்ற வன்பரை நீலகண் டப்பெரும் பாணர்க் கின்று தங்கவோ ரிடங்கொடுத் தருள்வீ ரென்ன நன்று மின்புற்று நடுமனை வேதியின் பாங்கர்ச் சென்று மற்றவர்க் கிடங்கொடுத் தனர்திரு மறையோர் ஆங்கு வேதியி லறாதசெந் தீவலஞ் சுழிவுற் றோங்கி முன்னையி லொருபடித் தன்றியே யொளிரத் தாங்கு நூலவர் மகிழ்வுறச் சகோடயாழ்த் தலைவர் பாங்கு பாணியா ருடனரு ளாற்பள்ளி கொண்டார் வேதமுறையில் இவ்வாறு அக்கினிஹோத்திரம் செய்யும் வழமை இப்போது இல்லையென்னும் அளவுக்கு அருகிவிட்டாலும் ஆங்காங்கு ஒவ்வொரு வேதியர் இன்னமும் இதை நாளும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் கண்டு கொள்வதில்லை. நாம் இப்போது சம்பந்தர் பாடிய "வேதவேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி யமணொடு தேரர் " போலாகிவிட்ட சைவர்கள் அல்லவா? இப்போதும் தமது இல்லங்களில் அல்லது ஆலயங்களில் நாளாந்தம் அக்கினிஹோத்திரம் செய்யும் வழமை உடைய அந்தணப் பெருமக்கள் ஆங்காங்கு இலை மறை காயாக இருக்கத்தான் செய்கிறார்கள்; நாம்தான் இவர்களைக் கண்டுகொள்வதில்லை. . அக்கினிஹோத்திரம் செய்யும் அந்தணன் இறக்கும்பொழுது அவனுடன் அவனுடைய அக்கினிஹோத்திர வழிபாட்டுப் பொருட்கள் எல்லாவற்றையும் தகனம் செய்யவேண்டும் என்பது விதி

No comments:

Post a Comment