Thursday, October 4, 2012

கல்வி, கலை, ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வழிபடவேண்டும்

சிவபெருமானுக்கு ஒருநாள் சிவராத்திரி; திருமாலுக்கு ஒருநாள் வைகுண்ட ஏகாதசி. ஆனால் அம்பிகைக்கோ ஒன்பது நாள் நவராத்திரி! இதை சாரதா நவராத்திரி என்றும் அழைப்பர்.

(ஸ்ரீவித்யா உபாசகர்கள், பராசக்தியின் சேனைத் தலைவியான வாராஹி நவராத்திரியை ஆடி மாதத்திலும்; பராசக்தியின் மந்திரியான சியாமளா நவராத்திரியை மாசி மாதத்திலும்; லலிதா நவராத்திரியை பங்குனி மாத ராமநவமி சமயத்திலும் கொண்டாடுவர்.)


சாரதா நவராத்திரியின் முதன் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும்; கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் அம்பிகையை வழிபடுகிறோம்.

பத்தாம் நாள் விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். அந்த நாளில் எந்த நல்ல செயல்களைத் தொடங்கினாலும் வெற்றிபெறும் என்பதால், குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் உட்பட பல செயல்களை விஜயதசமியில் தொடங்குகிறோம்.

வங்காளிகள் இவ்விழாவை துர்க்கா பூஜை என்ற பெயரில் மூன்று நாட்கள் மட்டும் கொண்டாடுகிறார்கள். சஷ்டியில் ஆரம்பித்து விஜயதசமியன்று விசர்ஜனம் செய்வர். கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை போல வங்காளிகளுக்கு துர்க்கா பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாம் சரஸ்வதியை நவராத்திரியின்போது பூஜிப்போம். ஆனால் வங்காளிகள் தை மாதத்தில் வசந்த பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதியைப் பூஜிக்கின்றனர். எவ்வாறாயினும் மூன்று தேவியர் வழிபாடென்பது இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலுமே நடைபெறுகிறது.

கஜமுகாசுரனை அழிக்க கணபதி வினோத வடிவம் கொண்டார். இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு நரசிம்மமாக வடிவம் கொண்டார். மகிஷனை அழிக்க ஹரிஹர புத்திரன் என்னும் சாஸ்தா அவதரித்தார். சூரபத்மாதியர்களை அழிக்க சிவனே கந்த னாக அவதரித்தார். இராவணனை அழிக்க மகாவிஷ்ணு மனித வடிவம் கொண்டார். அசுரர்கள் பெற்ற வரத்திற்கேற்ப இறை அவதாரங்கள் நிகழ்ந்தன.

அதுபோல, பெண் பலவீனமானவள் என்ற எண்ணத்தில், பெண்களால் அழிவு நேரக்கூடாது என்ற வரத்தை மகிஷாசுரன் பெறவில்லை. எனவே, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் சக்திகள் ஒருங்கிணைந்த துர்க்கையாக பராசக்தி அவதாரம் எடுத்தாள். மகிஷாசுரனை வதைத்தாள். ஆகவே இந்த அன்னை வெற்றிக்குத் துணைபுரிபவள். மன்னர்கள் போருக்குச் செல்லும்போது துர்க்கையை வணங்கிச் செல்வது மரபு.

அதுபோல கல்வி, கலை, ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வழிபடவேண்டும். படைக்கும் தொழில் செய்யும் பிரம்மதேவனின் சக்தி அம்சமே சரஸ்வதி தேவி. இவள் துர்க்கா சரஸ்வதியாக சும்ப நிசும்ப ராட்சஸர்களை அழித்தவள். சும்ப நிசும்பர்களை அழித்த சரஸ்வதியைக் குறித்து தேவர்கள் 32 துதிகள் செய்தனர் என்று துர்க்கா சப்தசதி கூறுகிறது.

ஸர்வஸ்ய புத்தி ரூபேண
ஜனஸ்ய ஹ்ருதி ஸம்ஸ்திதே
ஸ்வர்க அபவர்கதே தேவி
நாராயணி நமோஸ்துதே
ஸ்ருஷ்டி ஸ்திதி வினாசானாம்
சக்தி பூதே சனாதனி
குணஸ்ரயே குணமயி
நாராயணி நமோஸ்துதே

என்னும் துதிகளில் சரஸ்வதி அம்சமும் குறிக்கப்படுகிறது.

தேவி பாகவதம் சரஸ்வதியின் அவதாரத்தை எவ்வாறு குறிக்கிறது என்று காண்போமா?

கணேச ஜனனி துர்க்கா ராதா
லக்ஷ்மி சரஸ்வதி ஸாவித்ரி ச
ஸ்ருஷ்டி விதௌ ப்ரக்ருதி
பஞ்சதாஸ்ம்ருதா.

ஆதிசக்தியிலிருந்து ஐந்து பிரதான சக்திகள் தோன்றின. அவற்றுள் சரஸ்வதியும் ஒருத்தி. துர்க்கா, ராதா, லட்சுமி, சாவித்ரி ஆகியோர் மற்ற சக்திகள்.

மகாவித்யா, மகாவாணி, பாரதி, வாக் சரஸ்வதி, ஆர்யா, ப்ராம்மி, காமதேனு, வாகீஸ்வரி, ருத்ர வாகீஸ்வரி, விஷ்ணு வாகீஸ்வரி, பர சரஸ்வதி, பாலா சரஸ்வதி, நகுலி சரஸ்வதி, வாணி சரஸ்வதி, சம்பத் சரஸ்வதி, தாரகா சரஸ்வதி என கலை மகளுக்குப் பல திருநாமங்கள் உண்டு.

"ஐம்' என்பது சரஸ்வதியின் வாக்பவ பீஜ மந்திரம். இது ஓங்காரம் போன்று மூன்று வேதங்களின் முதல் அட்சரங்களால் (அ, இ, ஏம்) பிணைக்கப்பட்ட பீஜாட்சரம் என்று மந்திர சாஸ்திரம் கூறுகிறது.

சரஸ்வதி தேவியின் லீலாவினோதங்கள் சிலவற்றைக் காண்போமா?

வால்மீகி ராமாயணம் பிறந்த கதை

வேடனாக இருந்த வால்மீகி நாரதரிடம் ராம நாம உபதேசம் பெற்று அந்த மந்திரத்தை ஓதத் தொடங்கினார். "ராம' என்று உச்சரிக்க வராமல் "மரா' என்று உச்சரித்தே இறையருள் பெற்றார். அதன்பின் ராமாயணம் இயற்றத் தொடங்கும் சமயத்தில், வேடனொருவன் ஒன்றாக இருந்த இரு பறவைகள் மீது அம்பெய்தான். அதில் அடிபட்டு ஆண் பறவை கீழே விழுந்தது. அதைக் கண்டு வருந்திய வால்மீகி,

"மாநிஷாத பிரதிஷ்டாம் த்வமகம:
சரஸ்வதி: ஸமா: யத் கௌஞ்ச
மிதுனாதேகம் அவதீ: காமமோஹிதம்'

என்று சபித்தார். அதாவது, "ஏ வேடனே! காமத்தில் திளைத்திருந்த அந்த இரு பறவைகளில் ஆண் பறவையைக் கொன்று விட்டாயே. அதனால் நீ பல்லாண்டு வாழ மாட்டாய்' என்று சாபமிட்டார்.

அதன்பின், ராமாயண காவியம் இயற்ற ஆரம்பிக்கும் வேளையில் இத்தகைய துக்ககரமான சொற்கள் வெளிப்பட்டுவிட்டனவே என்று மிகவும் வருந்தினார். அப்போது நாரதர், ""வருந்த வேண்டாம் முனிவரே. நீ கூறியது மகாவிஷ்ணுவுக்கு மங்களாசாசனம் தான். "ஹே லட்சுமிபதியே, நீ பல்லாண்டு வாழ்வாயாக. காமமோகம் கொண்டவனான இராவணனை அழித்தீரல்லவா?' என்பதே நீ கூறியதன் பொருள். சரஸ்வதியே உமது வாக்கில் அமர்ந்து இத்தகைய மங்களச் சொற்களை உகுத்துள்ளாள். அவள் அருளால் உன் வாக்கிலிருந்து ராமாயணம் மிளிரும்'' என்றாராம்.

கம்பரும் ராமாயணமும்

கம்பநாட்டாழ்வார் சரஸ்வதி தேவியின் அருளால்தான் ராமாயண காவியம் படைத்தார் என்பர். சரஸ்வதியின் திருவுளப் படியே அது ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றப் பட்டது.

சரஸ்வதியும் ஒட்டக்கூத்தரும்

மூன்று சோழ அரசர்களிடம் அவைப் புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர். பூந்தோட்டம் சரஸ்வதியின் அருளால்தான் அவர் புலமை பெற்றார் என்பர். பூந்தோட்டத் திலுள்ள சரஸ்வதி ஆலயம் ஒட்டக்கூத்தரால் அமைக்கப் பெற்றதென்றும்; அவர் பெயரா லேயே அத்தலம் கூத்தனூர் என்று பெயர் பெற்றதென்றும் கூறுவர். ஒட்டக்கூத்தர் சரஸ்வதி புகழ்பாடி அந்தாதி இயற்றியுள்ளார்.

புருஷோத்தமனுக்கு சரஸ்வதியின் அருள்!

சாரங்கபாணி தீட்சிதர் என்பவர் கும்ப கோணத்தில் வாழ்ந்து வந்தார். அவரது மகன் புருஷோத்தமன் பிறவி ஊமை. மருந்துகள், மந்திரங்கள், தந்திரங்கள் என எதுவும் பயன்தரவில்லை. அவர் பூந்தோட்டம் சரஸ்வதி ஆயலத்துக்கு வந்து உள்ளன்புடன் ஒரு மண்டலம் பூஜை செய்தார். பூஜை முடியும் நாளில் ஒரு சுமங்கலிப் பெண் அவரிடம் வந்து "வாயைத் திற!' என்றாள். வாயைத் திறந்ததும், அந்தப் பெண் தன் வாயிலிருந்த தாம்பூலத்தை உமிழ்ந்து, "சாப்பிடு' என்று சொல்லி கருவறைக்குள் சென்று மறைந்தாள். தாம்பூலம் உண்ட புருஷோத்தமன் கவிபாடத் தொடங்கினார். அந்த ஞானத்தைக் கொண்டே அன்னையின் ஆலயத்தை புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்தார் என்று கல்வெட்டு கள் கூறுகின்றன.

குமரகுருபரரும் சரஸ்வதியும்

ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சிறுவனான குருபரன் செந்திலாண்டவன் அருளால் பேசும் வல்லமை பெற்று கந்தர் கலிவெண்பா பாடினார். பின்னர் பாண்டிய மன்னன் முன்பு மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடினார். அப்போது ஒரு சிறு பெண் அங்கு வந்து, பாண்டிய மன்னரின் கழுத்திலிருந்த முத்துமாலையை குமரகுருபரனுக்கு அணிவித்து மீனாட்சியாகக் காட்சியளித்து மறைந்தாள்.

அதன்பின்னர் பல தலங்களையும் தரிசித்து காசி சென்ற குருபரர், அங்கு மடம் ஒன்றை ஸ்தாபிக்க நினைத்தார். அதற்கு அப்பகுதியை ஆண்ட முகம்மதிய மன்னனிடம் இடம் கேட்டார். "இந்துஸ்தானி மொழியில் வாதிட்டு வென்றால் இடம் தருகிறேன்' என்று அவர் கூறிவிட, அம் மொழியை அறிந்திராத குமரகுருபரர் சரஸ்வதி அன்னையை மனதாரத் துதித்து "சகலகலாவல்லி மாலை' பாடினார். அன்னை யின் அருளால் பன்மொழி ஞானம் கைவரப் பெற்று, தன் எண்ணப்படி காசியில் மடத்தை நிறுவினார். அந்த மடத்தை இப்போதும் காசி யில் கங்கைக் கரையோரம் காணலாம்.

இவ்வாறு சரஸ்வதி அருளால் பெரும்புலமை பெற்றோர் பலருண்டு.

ஆதிசங்கரரும் சாரதையும்

கர்நாடக மாநிலம், சிருங்கேரி மடத்தில் கோவில் கொண்டுள்ள சாரதா தேவி சரஸ்வதியே. இவள் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவள். இந்த தேவி இங்கு எவ்வாறு குடியமர்ந்தாள்?

பிரம்மதேவர் மண்டனமிஸ்ரராக அவதரித்தார். பிரம்மபத்தினி சரஸ்வதி தேவி மண்டனமிஸ்ரரின் மனைவி உபயபாரதியாக அவதாரம் செய்தாள். சிவாம்சமான ஆதிசங்கரர் மண்டனமிஸ்ரருடன் 17 நாட்கள் வாதம் செய்தார். அதற்கு நடுவராக இருந்தவள் உபயபாரதி. மண்டனமிஸ்ரர் தோற்கும் தறுவாயில், "என்னையும் வாதத்தில் வென்றால்தான் நீங்கள் வெற்றி பெற்றவராவீர்' என்று கூறிய உபயபாரதி, காம சாஸ்திரம் சம்பந்தமாகக் கேள்வி கேட்டாள். பிரம்மச்சாரியான ஆதிசங்கரர் அதுபற்றி அறியாத வராகையால் ஒரு மாதம் அவகாசம் கேட்டுக்கொண்டு வெளியேறினார். அந்த நேரத்தில் அமருகன் என்ற அரசன் இறந்துவிட, அவனுடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த சங்கரர், மன்னன் மனைவியிடம் காமசாஸ்திரம் சம்பந்தமாக அறிந்துகொண்டு மீண்டும் மண்டனமிஸ்ரர் இல்லம் நோக்கி வந்தார். அவரை வரவேற்ற இருவரும், "நீங்கள் சதாசிவ அம்சம் என்பதை அறிவோம். போட்டி யில் வென்றவர் நீங்களே' என்று பணிந்தனர். மண்டனமிஸ்ரர் சுரேஷ்வரர் என்ற பெயரில் சங்கரரின் சீடரானார். அப்போது உபயபாரதி மறையத் தொடங்க, ஆதிசங்கரர் அவளிடம், "தாங்கள் சரஸ்வதி தேவியே என்பதை நானறி வேன். என் கோரிக்கையேற்று சிருங்கேரியிலும் காஞ்சியிலும் சாந்நித்யம் கொண்டருள வேண்டும்' என்று வேண்டினார். சரஸ்வதியும் அதற்கிணங்கினாள். அதனால்தால் சிருங்கேரி மடத்தையும் காஞ்சி காமகோடி மடத்தையும் சாரதாபீடம் என்று கூறுகின்றனர்.

காஞ்சி காமாட்சி கோவிலில் பணிபுரிந்த ஊமை ஒருவருக்கு மூகன் என்றே பெயர். சுமங்கலியாய் வந்த காமாட்சி தாம்பூலத்தை உமிழ்ந்து உண்ணச் சொல்ல, ஊமை கவிஞனா னார். "மூக பஞ்சசதி' என்னும் பெயரில், சௌந்தர்யலஹரிபோல 500 துதிகள் பாடினார். மூக சங்கரர் என்னும் பெயரில் காஞ்சி மடாதி பதியாகவும் எழுந்தருளினார். அவர் பாடிய துதிகளை காஞ்சி காமாட்சி ஆலயத்தில் கல்வெட்டுகளாக இன்றும் காணலாம்.

சரஸ்வதியின் அருளுக்கு எல்லை உண்டோ?

No comments:

Post a Comment