Wednesday, October 3, 2012

அவனை மனதிற்குள்ளேயே கைது செய்து வைத்துவிட்டால், துன்பம் என்ற சொல் கூட நம்மை நெருங்காது

வாழும்போது ஒரு கஷ்டம் வந்து விட்டால் போதும். ""வைகுண்டம் போன அன்று தான் எனக்கு நிம்மதி'' என புலம்ப ஆரம்பித்து விடுவார்கள். அதாவது இறப்புக்குப் பிறகே, சுற்றத்தாரின் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் நிரந்தர நிம்மதி எனக் கருதுவார் உண்டு. ஆனால், பூலோகத்திலேயே இருக்கிறது ஒரு வைகுண்டம். அதுதான் ஆயர்பாடி. திருமால், கிருஷ்ணனாக அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தார். அங்கேயே தங்கினார். யசோதை அவரை பக்தி என்னும் கயிறால் கட்டி உலகம் என்னும் உரலிலே பிணைத்தாள். ராதை அவனை நெஞ்சிலே இருத்தி, போக விடாமல் செய்து விட்டாள். பாமா, ருக்மணியர் அவரை தங்கள் அன்பால் கட்டிப்போட்டனர். ஆயர்பாடி பெண்கள் உறியில் வெண்ணெய் வைத்து அதையே நைவேத்யமாக்கி இங்கேயே தங்கும்படி செய்தார்கள். ஆக, திருமால் இங்கேயே இருக்கும்போது, வைகுண்டம் போவானேன் என்று பெரியவர்கள் கேட்டார்கள். பக்தி என வந்துவிட்டால் எல்லா ஊரும் ஆயர்பாடி தான். ""எங்கள் ஊரில் வந்து தங்கு கண்ணா'' என அவனை நெஞ்சம் நிறைய அழைத்தால் போதும், ராதையைப் போல் கணநேரம் கூட நினைவு மாறாமல், அவனைக் கூப்பிட்டால் போதும். எல்லா ஊரும் ஆயர்பாடியாக மாறிவிடும். அவனை மனதிற்குள்ளேயே கைது செய்து வைத்துவிட்டால், துன்பம் என்ற சொல் கூட நம்மை நெருங்காது. நித்தமும் ஆனந்தமயமாய் இருக்கலாம்.

No comments:

Post a Comment