Monday, October 1, 2012

கடவுளின் அருளை பெற பலி தேவை இல்லை கனிகள் போதும்

ஒரு உண்மையான ஆன்மிகவாதி , யாருக்கும் தீங்கு செய்ய நினைக்க மாட்டார், மேலும் பிற உயிர்களை தன் உயிர் போல் மதிப்பார் . உலகில் முக்கிய மதங்கள் அனைத்தும உயிர் கொலையை கண்டிக்கின்றன மாமிசம் உண்பவர்கள், தங்கள உயிரை போன்று மற்ற உயிர்களையும் மதிக்க வேண்டும். அசைவம் உண்பவர்கள் தங்களை "சைவர்கள்' என்று அழைத்துக் கொள்வதே ஒரு வகையில் அபத்தம்தான்! கடவுளின் அருளை பெற விரும்புகிறவர்கள் மாமிசத்தைப் புறக்கணிக்க வேண்டியது அவசியம். இதே கருத்தைதான் திருவள்ளுவரும், ""பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை; அருளாட்சி ஆங்கில்லை ஊன் தின்பவர்க்கு'' என்று அடித்துச் சொல்கிறார். அதாவது, "எப்படி செல்வத்தைப் பாதுகாக்காதவனுக்கு அதனால் வரும் நன்மைகள் கிடைக்காதோ அதுபோல் மாமிசம் உண்பவர்களுக்கும் இறையருள் கிடைக்காது' என்பது அவருடைய கருத்து. ஜோதிப்பூர் நகரத்தில "லாடு பாவா' என்ற ஆன்மிகவாதி இருந்தார். இரவும், பகலும் இறைவன் பெயரை ஓதுவதையே தவமாகச் செய்து கொண்டிருந்தார் , "கடவுளுக்கு காணிக்கை' என்ற போர்வையில் மிருக வதை செய்பவர்களைக் கண்டால் "லாடு பாவா'வின் உள்ளம் பதறும். அப்படிப்பட்டவர்களிடம் ஓடோடிச் சென்று அன்பாகப் பேசுவார். "உயிர்க் கொலை பெரும் பாவம்' என்று உபதேசிப்பார். மேலும் நாட்டின் பல் பகுதிகளுக்கும் சென்று மிருகவதைக்கு எதிரான கருத்துகளை பரப்பினார் ஒரு முறை கோவூர் என்ற கிராமத்துக்கு "பாவா' சென்றார் அங்கே ஒரு காளி கோயிலில் தினமும் ஏராளமான மிருகங்களை பலி கொடுத்து அவற்றை பிரஷாதமாக சமைத்து தின்றுத் தீர்த்தார்கள். பாவாவுக்கு இது பெரும் கவலையை ஏற்ப்படுத்தியது . தெரு தெருவாக சென்று மிருக பலிக்கு எதிராக கடுமையாகப் பிரசாரம் செய்தார்.அவரது சாஸ்திர அறிவும் கனிவான அணுகு முறையும் கிராம மக்களை வெகுவாகக் ஈர்த்தது . அவர்களில் பலர் கோயிலில் பலியிடுவதற்காக மிருகங்களையும், பறவைகளையும் நேர்ந்து விடுவதை உடனடியாக நிறுத்திக் கொண்டனர். இதனால் கோயிலின் பெயரால் வயிறு வளர்த்துக் கொண்டிருந்த ரத்த வெறி பிடித்த பக்த கோடிகளுக்கு பித்து பிடித்த மாதிரி ஆயிற்று! தங்கள் பிழைப்பைக் கெடுத்த "லாடு பாவா'வைக் கொன்றுவிட வேண்டுமென்று தீர்மானித்தார்கள். தங்கள் திட்டப்படி "லாடு பாபா'வை கடத்தி கொண்டு வந்தார்கள். காளி கோயிலுக்கு அவரை இழுத்து வந்து கம்பத்தில் அவரை கட்டினார்கள். அவர்கள் கோபத்தோடு, எங்கள் பிழைப்பை கெடுப்பதில் உனக்கு என்னடா அத்தனை ஆசை? எத்தனையோ வருஷங்களாக நாங்கள் காளிக்கு பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். அன்னைக்கு அது பிடிக்காதென்றால் அவளே வந்து அதைத் தடுத்திருப்பாளே?'' என்று சீறினான். அந்த வெறி பிடித்த கும்பலுக்கும் நெறிமுறைகளைப் போதிக்க பாவா தயங்கவில்லை. மனிதர்களாகிய நமக்கு ஆறு அறிவு உண்டு. நாம் செய்கிற நன்மை, தீமைகளுக்கு உடனடியாக இறைவனிடமிருந்து பாராட்டோ, தண்டனையோ கிடைப்பதில்லை. ஆனால் இறைவன் நாம் செய்யும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கண்காணித்து கொண்டிருக்கிறான். தாங்க முடியாத வியாதிகளால் தினந்தோறும் செத்துப் பிழைக்கிறவர்கள் அனைவருமே முற்பிறவிகளில் மாமிசம் தின்றவர்களும், உயிர்க் கொலை செய்தவர்களும்தான். எனவே மிருக வதை செய்வதை உடனடியாக நிறுத்துங்கள். அன்போடு கொடுக்கின்ற கனிகள், இலைகள், தண்ணீர் இவற்றாலேயே இறைவன் திருப்தி அடைந்துவிடுவான். இரக்கமின்றி மாமிசம் தின்பவர்கள் மீது அவனுக்கு மட்டும் எப்படி இரக்கம் வரும்?'' என்றார் பாவா. ஆனால் கருவாடுகளின் நடுவே அவருடைய உபதேசப் பூக்களின் நறுமணம் எடுபடவில்லை. "பாவா'வின் பேச்சால் வெகுண்ட அந்தக் காளிதாஸர்கள், ""உன்னை உயிரோடு விட்டால்தானே மிருக வதைக்கு எதிராகப் பிரசாரம் செய்து எங்கள் வயிற்றில் கறிக்குப் பதிலாக காய்களைப் போடுவாய்? உன்னையே இப்போது பலி கொடுத்துவிடுகிறோம். "மிருக பலியைக் கேலி செய்ததால் காளியே உன்னைக் கொன்றுவிட்டதாக' ஊரில் வதந்தியைப் பரப்பிவிடுகிறோம். ஒரே வெட்டில் கிடாயும், குறும்பாடும் கிடைத்த மாதிரி ஆகிவிடும். ஜனங்களும் வெட்டிச் சிதைக்கப்பட்ட உன் உடலைப் பார்த்துப் பயந்து கோழிகள், ஆடு, மாடுகளைக் கொண்டுவந்து கட்டுவார்கள். நாங்கள் வழக்கம் போலவே "கோழீஸ்வரர்'களாக வாழ்வோம்'' என்று உறுமினார்கள்; பாவா'வைக் கொல்லப் பட்டயங்களைத் தீட்ட ஆரம்பித்தார்கள். அவரோ உயிருக்கு அஞ்சவில்லை. காளியைப் பார்த்து பேச ஆரம்பித்துவிட்டார். அம்மா தாயே ! இவர்களும் உன் பிள்ளைகள்தானே? ஏன் நீ இவர்களை திருத்த கூடாதா? சாகப்போவதை பற்றி எனக்கு கவலை இல்லை . ஆனால் இவர்கள் பரப்பும் பொய்கதையை ஊர் மக்களும் நம்பி விட்டால் மிருக பலிக்கு நானும் ஒரு காரணமாக ஆகிவிடுவேனே! இங்கே பலியாகும் மிருகங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவிடுமே? அது உனக்கு சம்மதமா?'' என உளமுருகிக் கேட்டார். மனம் இறங்கிய காளியின் சிலையிலிருந்து ஒரு மிகப்பெரும் பேரொளி கிளம்பியது. அதன் அதீத உஷ்ணம் பாவாவை தவிர அனைவரையும் பொசுங்கி, கருகி, கட்டைகளாகக் கீழே சாய்ந்தது. அவருக்கு முன்னே பிரபஞ்ச நாயகியான காளி காட்சியளித்தாள்; கனிவோடு பேசினாள். குழந்தாய்! நான் தூய்மையான பக்திக்கும், அஹிம்ûஸக்கும் மட்டுமே வசமாவேன். என் முன் பலியிடுகிறவர்களும், மாமிசம் உண்பவர்களும் பற்பல பிறவிகளில் வறுமை, தீரா நோய், எதிரிகளால் பயம் போன்ற துன்பங்களால் அல்லல்பட்டு தங்கள் பாவத்துக்குரிய தண்டனையைக் கட்டாயம் அனுபவிப்பார்கள். நீ புகழோடு வாழ்வாய். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்'' என்று பராசக்தி உரைத்தாள். ஆனால் லாடு பாவாவோ அம்மா! தேவர்களுக்கும் அரிதான உன் திருவுருவ காட்சி என் கண்களின் முன்னர் தோன்றியதே! இதை விட வேறு உயர்ந்த வரம் வேறு என்ன இருக்கப் போகிறது? அதையும் மீறி எனக்கு ஏதாவது நீ தர விரும்பினால், இதோ உன் வெம்மை தாங்காமல் கருகிச் செத்த என் சாக்த சகோதரர்களுக்கு மறுபடியும் உயிர்ப் பிச்சை கொடு' என்று சொல்லி, அம்பிகையின் மலரடியில் விழுந்தார். தன்னைக் கொல்ல நினைத்தவர்களும் வாழ வேண்டுமென்ற குணத்தை எண்ணி அந்த தெய்வத் தாய் மனம் குளிர்ந்தாள்; மாண்டவர்களை எழுப்பினாள்; மறைந்தாள். அந்த நிமிடம் முதல், காளியின் பெயரால் கத்தி ஏந்திய அவர்கள் மனம் திருந்தினார்கள். வெற்றிலை, பாக்கு, பழம் முதலிய "சாத்வீக' நிவேதனங்களைப் படைத்து உண்மையான சாக்தர்களாக ஆனார்கள். தங்களுக்கு நல்வழி காட்டிய "லாடு பாவா'வைக் குருவாக ஏற்று பிறவிப் பயனைப் பெற்றார்கள்

No comments:

Post a Comment