Monday, October 1, 2012

நாய் தண்டனை வழங்கியதா? வரத்தை வழங்கியதா?

ஸ்ரீ இராமர் தன்னுடைய நியாய சபையில் மகரிஷிகளுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசனை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது நாய் ஒன்று அரண்மனை வாயிலில் மண்டையில் அடிபட்டு ரத்தக் காயத்துடன் "ஸ்ரீராமரின் " கருணைக்காகக் காத்திருப்பதை அறிந்து அதனை அழைத்து விசாரித்தார். உடனே நாய், தர்மத்திலும், குணத்திலும் சிறந்து விளங்கியும், ஆட்சியில் சிறு குறையும் ஏற்படாமல் மிகவும் நன்றாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் சுவாமி, நான் எந்தத் தவறும் செய்யாத பொழுது சர்வார்த்த சித்தன் என்ற அந்தணர் என்னை மண்டையில் தடியால் அடித்துப் பிளந்து விட்டான் என்று கூறியது. உடனே ஸ்ரீ ராமர் சர்வார்த்த சித்தனைப் பிடித்து வரச் செய்து விசாரித்தார். உடனே சர்வார்த்த சித்தனும், சுவாமியே நான் மிகுந்த பசியுடன் சென்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தேன். பல இடங்களிலும் எனக்குப் பிச்சை கிடைக்கவில்லை. அச்சமயம் இந்த நாய் என் பாதையை மறித்து நின்றது. நான் விலகிப் போ என்று கூறியும் கேட்காமல் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதனால் கோபமடைந்து அந்த நாயைத் தடியால் அடித்து விட்டேன். ஆதலால் எனக்கு உரிய தண்டனை வழங்குங்கள் என்று கூறினான். ஸ்ரீராமர் சற்று யோசித்து அவையோரை நோக்கி என்ன தண்டனை வழங்கலாம்? என்று கேட்டார். அப்பொழுது அவையில் சிலர், அந்தணர்களைத் தண்டிக்கவும், கொல்லவும் கூடாது என்று தர்ம நூல்கள் கூறுகின்றன என்றனர். அப்பொழுது மகரிஷிகள், "ஸ்ரீ ராமா, எல்லோரையும் தண்டிப்பதற்கு மன்னருக்கு உரிமை உள்ளது' என்று கூறினர். இதையெல்லாம் கவனித்த நாய், 'சுவாமி, நான் விரும்பும் வரம் ஒன்று; இந்த அந்தணனை ஒரு நாட்டின் மன்னனாக்குங்கள்' என்றது. ஸ்ரீ ராமரும் நாயின் வேண்டுகோளை ஏற்று சர்வார்த்த சித்தனை ஒரு சிறு நாட்டின் மன்னனாக்கி தக்க உபசாரங்களோடு அனுப்பி வைத்தான். இதனால் சபையில் இருந்தோர் நாய் அந்தணனுக்குத் தண்டனை வழங்கியதா? அல்லது வரத்தை அளித்ததா? என்று சிந்தித்தனர். இதனைக் கண்ட ஸ்ரீராமர் அவையோரிடம் அனைவரும் நீதியின் இரகசியம் புரியாமல் உள்ளீர்கள். நாயே அதன் காரணத்தைக் கூறும் என்றார். நாயும் சபையோரைப் பார்த்து, நான் அந்தணனுக்கு நன்மை செய்துள்ளதாக எண்ணுகிறீர்கள்; என் கதையைக் கேட்டால் தான் அதன் தன்மை புரியும் என்று கூறத் தொடங்கியது. சென்ற பிறவியில் நானும் ஒரு மன்னனாக இருந்து தேவர்கள், அந்தணர்கள், பெரியோர்கள், பெண்கள், பணியாளர்கள் அனைவரையும் மிகுந்த பணிவுடனும், வணக்கத்துடனும் வழி நடத்தினேன். நானும், ஒழுக்கத்துடனும், தர்ம சிந்தனையுடனும் ஆட்சி செய்து மக்களை நல்வழிப்படுத்தினேன். அப்படிச் செய்தும் நான் இப்பிறவியில் நாயாகப் பிறந்துள்ளேன். ஏனென்றால், மக்கள் செய்யும் பாவம் மன்னனையே சாரும். ஆதலால் எனக்கு இப்பிறவி. அந்த அந்தணனோ மிகுந்த முன்கோபி, ஞானம் இல்லாதவன், குரூர சிந்தனை உடையவன். ஆதலால் அவன் பல பாவங்களைச் செய்வான். அடுத்த பிறவியில் மட்டுமல்லாமல் இன்னும் ஏழேழு பிறவியிலும் அவன் நரகத்தில் வீழ்ந்து துன்பப்படுவான். அதனால் தான் நான் அந்தணனுக்கு இத் தண்டனை அளித்தேன் என்று கூறிச் சென்றது. இதனைக் கேட்ட சபையோர் நீதியின் தன்மை புரிந்து மிகவும் வியப்படைந்தனர்

No comments:

Post a Comment