Thursday, November 29, 2012

மகாவீரர் கூறுகிறார்

உண்மையைக் கடைபிடிப்பவனின் வாழ்வில் எத்தனை துன்பங்கள் சூழ்ந்தாலும் மனக்கலக்கம் உண்டாகாது.
* கோபம், பேராசை, அறியாமை ஆகிய காரணங்களால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் துன்பம் இழைக்கின்றனர். அச்சம், பகை உணர்வில் இருந்து விடுபட்டவர்கள் எந்த உயிருக்கும் துன்பம் தர விரும்ப மாட்டார்கள்.
* கூட்டுமுயற்சியால் கிடைத்த பலனை கூட்டாளிக்கு பகிர்ந்து அளிக்காமல், சுயநலத்துடன் வாழ்பவன் நற்கதி பெற முடியாது.
* பேராசை பிடித்த மனிதன் இந்த உலகில் மட்டுமின்றி மேலுலகிலும் துன்பத்திற்கு ஆளாவது உறுதி.
* விருப்பு வெறுப்பற்றவர்களாக வாழுங்கள். பிறரால் ஏற்படும் துன்பத்தை சகிப்புத்தன்மையுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்.
* இன்பம் வந்தபோது மகிழ்ச்சியில் துள்ளாமலும், துன்பம் வந்தபோது துவண்டு வருந்தாமலும் மனதை சமநிலையில் வைக்க வேண்டும்.
* வாழ்க்கை என்னும் கடலில் இன்ப, துன்ப அலைகள் ஆர்ப்பரித்து அலைக்கழிக்கின்றன. இருந்தாலும் ஆழ்கடல் அமைதியைப் போல வாழ்விலும் அமைதியைப் பெற வழியுண்டு.
* சமுதாயத்தில் பெரும்பாலானவர்களுக்கு நன்மை தரும் வாழ்க்கை முறைகளையே ஒழுக்கநெறி என்று குறிப்பிடுகிறோம்.
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தீமைகளைச் செய்பவன் விலங்குப் பிறப்பை அடைந்து அளவில்லாத துன்பங்களைப் பெறுவான்.
* மனிதன் அவனவன் செய்த வினைப்பயன்களை அனுபவித்தே கழிக்க வேண்டும். ஒருபிறவியில் செய்த நன்மையோ, தீமையோ மறுபிறவியிலும் அவனைத் தொடர்ந்து வரும்.
* ஒருவன் ஒருபிறவியில் செய்த தர்மத்தின் பயன், அடுத்தடுத்த பிறவியிலும் அவனுக்குத் துணையாக நின்று உயிரைக் காக்கும். நாளைக்கும், இன்றைக்கும் தேவையான நன்மைகளை வாரி வழங்கும்.
* இல்லற நெறியைப் பின்பற்றி வாழ்பவர்கள் அன்பு, அடக்கம், ஒழுக்கம், பொறுமை போன்ற நற்பண்புகளைப் பெற்றிருத்தல் அவசியம்.
* தாவர உணவு வகைகளை மட்டும் உண்ணுங்கள். இதனால், உடல் ஆரோக்கியம் அடைவதோடு மனதிலும் தர்மசிந்தனையும், அமைதியும் நிலைபெற்றிருக்கும்.
* சத்தியத்தை பின்பற்றினால் எதற்கும் அச்சப்படத்தேவையில்லை. சத்தியம் இருக்குமிடத்தில் வஞ்சம், கபடம் காணாமல் போய்விடும்.
* அலைகின்ற மனதை ஒருநிலைப்படுத்த தியானம் பயில வேண்டும். தியானத்தை தொடர்ந்து பயின்று வந்தால் அற்ப எண்ணங்கள் மறைந்து மனதில் தூய எண்ணங்கள் வளரத் தொடங்கும்.
* நாவடக்கம் கொண்டவர்களே நல்ல மனிதர்கள். இவர்கள் பிறரை ஒருபோதும் பழித்துப் பேச மாட்டார்கள். பிறரைப் பற்றி குறை பேசாதவர்களே சான்றோர் ஆவர்.
* பிறரை ஏமாற்றிப் பிழைப்பது கொடிய பாவம். பிறருக்குரிய பொருளை அடுத்தவர் அறியாமல் பெற முயல்பவன் ஏழேழு பிறவிக்கும் தீங்கைத் தேடிக் கொள்கிறான்.
* மனதில் உறுதி இருந்தால் மட்டுமே ஐம்புலன்களை அடக்க முடியும். புலனடக்கம் கை வரப் பெற்றவன் மனதில் ஆசைகளுக்கு இடம் இருப்பதில்லை

No comments:

Post a Comment