Friday, December 21, 2012

பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலம்

ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முறைக்கு பிதர்தர்ப்பணம் அல்லது சிதார்த்தம் என்று பெயர். நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.

இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதே போல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும். ஒரு வேளை முன்னோர்களின் இறந்த திதி தெரியாதவர்கள், ஆடி, அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று.


அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது.


திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதர் தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதர்திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.


மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால் அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால் அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும். மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.


மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் அப்போது அந்த நன்னாளில் சிரர்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணம் கூறுகிறது.

No comments:

Post a Comment