Saturday, December 29, 2012

அம்பாளின் மஹிமை

வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த்த ப்ரதிபத்தயே |
ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ பரமேஸ்வரௌ ||
காளிதாசன் தன்னுடைய ரகுவர்மச காவ்யத்தை எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் உலகின் தாயும் தந்தையுமானவர்களும், சொல்லும், பொருளும் போன்று பிளீக்க முடியாதவர்களும் லோகத்தின் மங்களமான தம்பதியுமான பார்வதீ பரமேச்வரர்களை நமஸ்கரிக்கின்றேன், என்று மங்கள ஸ்லோகத்தில் கூறுகின்றான்.
உலகத்தின் தாயும் தந்தையுமாகிய அந்த பார்வதீ பரமேஸ்வரர்களின் மஹிமைகளை வார்த்தைகளால் வடித்துக் கூற இயலாது. அதிலும் அந்தப் பரமேஸ்வரனையே மங்களமாக்குகின்ற ஸர்வமங்களையான அந்தப் பரமேஸ்வரியின் மஹிமைகள் பற்றிச் சிந்திப்பதே நமக்கு மிகுந்த மனமகிழ்வைக் கொடுக்கும்.
ஞானசம்பந்த பெருமான், தமது தேவாரத்தில் “பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே” என்று அம்பாளை “பெண்ணில் நல்லாள்” என்று குறிப்பிடுகின்றார்.
எக்காலத்திலும் எல்லாரிடத்திலும் பூரணமான தாய்மையுணர்வு அம்பாளின் ஹ்ருதயத்தில் பொங்கி வழிகின்றது. தன்னால் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளிடத்திலும் தன்னுடைய கருணையை மழையாகப் பொழிவிக்கின்றாள் அந்தப் பராசக்தி.

அந்த அம்பாளின் மஹிமைகளும் வர்ணனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. அவளுடைய கருணையானது ஸாகரம் போன்று பரந்து அதுவும் வர்ணனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. அம்பாளைப் பற்றி அபிராமி பட்டர்,
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே!
என்று கூறுகின்றார்.
அம்மா! என்று தன்னுடைய சிறு குழந்தையானது அன்புடன் ஓடிவரும் போது அதனுடைய தாயானவள் எவ்வாறு தாயுள்ளத்துடன் தன்னுடைய குழந்தையை வாரியெடுத்து உச்சி முகர்கின்றாளோ, அது போன்று ஜகன்மாதாவான அம்பாளையும் நாம் ஒரு முறையாவது “அம்மா!” என்று உளங்கனிந்த அன்புடன் அழைத்துவிட்டால் நம்முடைய இடர் களைய அவள் ஓடிவருகின்றாள்.
தன்னிடம் அன்பு செலுத்தாத பிள்ளையிடம் கூட ஓர் அன்னை அன்பு செலுத்துவதைப் போன்று நாம் அவளை நினைக்காவிட்டாலும் நம்மிடையே அவள் இன்றளவும் கருணை மழையைப் பொழிந்து கொண்டிருக்கின்றாள். அதனால்தான் நாம் இன்றளவும் இம்மண்ணில் ஜீவித்துக் கொண்டிருக்கின்றோம். நாம் மறந்தாலும் நம்முடைய தாய் நம்மை மறவாமல் இருக்கின்றாள். ஆனால் பெற்ற தாயினை மறப்பது என்பது பரிஹாரமே இல்லாத மஹாபாபமாகும். பெற்ற தாயினை மறப்பதே இவ்வளவு பெரிய பாபத்தினைத் தருமானால் ஜகன்மாதாவான அந்த அம்பாளை மறப்பது தகுமா? அவள் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஒன்றைத் தவிர அது சற்றும் கலக்கமுறாத தூய அன்பு!
அந்த பராசக்தியான அம்பாள் ஜகத்பிதாவான பரமேஸ்வரனின் பத்நியாக இருந்து கொண்டு நம்மனைவர்க்கும் தாயாக இருந்து கொண்டு இந்த உலகத்தினை நடத்துகின்றாள்.
அபிராமிபட்டர் கூறுகிறார்:
“துணையும் தொழுந்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் பனி மலர்ப்பூங்
கணையும், கரும்புச்சிலையும், மென்பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரீ ஆவது அறிந்தனமே!
என்று,
மேலும் அந்தப் பரமேஸ்வரனின் பிரிக்கமுடியாத சக்தியாக விளங்குகின்றாள். ஆதிசங்கர பகவத்பாதர் ஸௌந்தர்ய லஹரியில் அம்பாளைப் பற்றிக் கூறும் போது.
“சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி |
அதஸ் - த்வா- மாராத்யாம் ஹரி - ஹர விரிஞ்சாதிபி - ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய: ப்ரபவதி ||
பரமேஸ்வரன் அம்பாளுடன் பிரியாமல் இணைந்திருப்பதனால் தான் இந்த உலகினை இயக்க சக்தியுடையவர் ஆகின்றார். அவ்வாறு இல்லாவிட்டால் அவர் அசைவதற்குக் கூடத் திறமையற்றவர் ஆகிவிடுவார். எனவே ப்ரஹ்ம, விஷ்ணு ருத்ரர்களால் பூஜிக்கப்பட்ட உன்னை வணங்குவதற்கோ, அல்லது துதிப்பதற்கோ கூட புண்யம் செய்தவனால் மட்டுமே முடியும்! என்று கூறுகின்றார்.
அம்பாளைப் பற்றி நினைப்பதற்கும், அவளைத் துதிப்பதற்கும் அவளுடைய அருள் இருந்தாலன்றி முடியாது.
அம்பாளைப் பற்றி நம்மால் எவ்வாறு அறிய முடியும்? ஆனால் ஜகன்மாதாவான அந்தப் பரமேஸ்வரியே தன்னுடைய கருணை விழிகளால் நம்முடைய அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்கி ஞானம் என்ற வெளிச்சத்தினால் தன்னை அறியுமாறு செய்கின்றாள். தாமரையை விடவும்ம் மென்மையான அந்த அம்பாளின் திருவடிகளை இடைவிடாது ஆராதிப்பதே நம்மைத் துன்பமில்லாத சிவானந்த வெள்ளத்தில் ஆழ்த்தும்.
அத்தகைய அந்த அம்பாளின் பாதத் தாமரைகள் எவ்வாறு விளங்குகின்றன?
அவித்யானாம் அந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகரீ
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணிகுணநிகா ஜன்மஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி
அம்பாளுடைய திருவடித் தாமரைகள் அவித்யை உடைய உள்ளத்தினர்க்கு, இருளினை நீக்கும் சூர்யனுடைய உதயத்தீவின் நகரத்தினைப் போன்றும், விவேகமற்றவர்களுக்கு ஞானமாகிய கற்பக விருக்ஷத்தின் பூங்கொத்திலிருந்து பரவிச்செல்லும் மகரந்தம் போலவும், ஏழைகளுக்கு நினைத்ததை அளிக்கும் சிந்தாமணிக் குவியலாகவும், பிறவிக்கடலில் மூழ்கியவர்களை மீட்டெடுக்கும் வராஹமூர்த்தியின் கோரைப்பற்கள் போன்றும் விளங்குகின்றது என்று ஸௌந்தர்ய லஹரீ கூறுகின்றது.
அத்தகைய அம்பாளின் திருவடிகளே நம்மை உய்விக்க வல்லது. இதை அபிராமிபட்டர் இவ்வாறு கூறுகின்றார்.
“சென்னியது உன்பொற் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன்திரு மந்திரம் சிந்தூர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே!
எனவே பரமேஸ்வர பத்நியும், கணபதி, ஸ்கந்தன் ஆகியோரின் குறும்புகளால் மகிழ்வடையும் அன்னையும், நம்மை பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்டெடுப்பவளும், நித்ய சுமங்கலியும், கருணைக்கடலாகியவளுமான அந்த அம்பாளின் திருவடிகளில் சரணமடைவதே நம்முடைய பிறவிப்பயனை அடைய வழிவகுக்கும்.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும், திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயுமென்புந்தி எந்நாளும் பொருந்துகவே!
-அபிராமி பட்டர்

No comments:

Post a Comment