Saturday, December 22, 2012

"திருப்பாவை விமானம்'

பூமாலையோடு கண்ணனுக்குத் திருப்பாவை என்னும் பாமாலையும் சூட்டி மகிழ்ந்தவள் ஆண்டாள். அவள் பாவை நோன்பு நோற்ற மாதம் மார்கழி. ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்தவர் பெரியாழ்வார். அங்குள்ள நந்தவனத்தில் பறிக்கும் பூக்களை மாலையாக்கி, சயனத்தில் இருக்கும் வடபத்ரசாயி பெருமானுக்கு சூட்டி வந்தார். ஒருமுறை அவர், நந்தவனத்தில் ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார். பூமாதேவி, குழந்தை வடிவெடுத்து அங்கு பிறந்திருந்தாள். இது ஆழ்வாருக்கு தெரியாது. யாரோ ஒரு குழந்தை என்று தான் எடுத்துச் சென்றார். குழந்தைக்கு "கோதை' என பெயரிட்டார். இதற்கு' நல்வாக்கு தருபவள்' என பொருள். அவள் வளர்ந்ததும், பெருமாளையே திருமணம் செய்வேன் எனக்கூறியதை அடுத்து, அவள் தெய்வாம்சம் கொண்டவள் என புரிந்து கொண்டார். தன் தந்தை, தினமும் வடபத்ரசாயி பெருமாளுக்குக் கட்டும் மாலையை, அவர் அறியாமலேயே கழுத்தில் சூடிப்பார்ப்பாள் கோதை. பெருமாளுக்கு அணிந்தால் அழகாக இருக்குமா! தனக்கும் அவருக்கும் திருமணம் நடந்தால், இதே போல் மணமாலை சூட்டுவாரா என்ற கற்பனை...இப்படியாக, அவள் பெருமாளே கதியெனக் கிடந்தாள்.
ஒருசமயம், இவ்விஷயம் பெரியாழ்வாருக்கு தெரிய வந்தது. ""சுவாமிக்கு அணியும் மாலையை உன் கழுத்தில் போட்டுப் பார்க்கிறாயே! இது அபச்சாரம் இல்லையா?'' என கண்டித்தார். புதிய மாலை கட்டி கோயிலுக்கு எடுத்துச் சென்றார்.
அப்போது பெருமாள் அவரிடம் பேசினார்.
""ஆழ்வாரே! கோதை சூட்டிய மாலையையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டுங்கள்,'' என்றார். தன் மகளின் பக்தியை எண்ணி பெரியாழ்வார் மகிழ்ந்தார். அவளைச் "சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்' என்று மனதுக்குள் பாராட்டினார். பின், பெருமாளின் விருப்பப்படி ஸ்ரீரங்கம் சென்ற கோதை, பெருமாளுடன் ஐக்கியமானாள்.
மதுரை மீனாட்சியைப் போல, ஆண்டாளின் கையிலும் கிளி இருக்கிறது. மாலை சாயரட்சை பூஜையின் போது ஆண்டாளுக்கு கிளி வைக்கப்படும். மறுநாள் காலை இந்த கிளி பக்தர்களுக்கு கொடுக்கப்படும். மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பிஞ்சால் அலகு, இலையால் இறகு, காக்காப்பொன்னால் கண் வைத்து, வாழை நாரில் இணைத்து செய்யப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் உள்ள விமானத்தை "திருப்பாவை விமானம்' என்பர். இதில் திருப்பாவையின் பாடல்களை விளக்கும் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. மார்கழி மாதம் இந்த விமானத்தை தரிசித்து, பாவைப் பாடல்களை பாடி வாருங்கள். நல்லதே நடக்கும், அந்த நல்லவள் அருளால்!

No comments:

Post a Comment