Saturday, December 22, 2012

பதிவிரதையான லோபாமுத்திரை

அரசகுமாரியான லோபாமுத்திரை அழகே வடிவானவள். சகலகலாவல்லி. வாலைக்குமரியான அவளது அழகு பற்றி கேள்வியுற்ற ராஜகுமாரர்கள், அவளை மணக்க போட்டி போட்டு முன்வந்தனர்.
திருமகளை ஒத்த அழகும், கலைமகளை ஒத்த அறிவும் பெற்ற மகளைக் கண்டு அரசனும், அரசியும் மகிழ்ச்சியடைந்தாலும் அவர்கள் மனதில் கவலையும் இருந்தது. "பெண்ணுக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டுமே' என்று ஏங்கினர்.
ஒருநாள் ராஜசபைக்கு அகத்திய மாமுனிவர் எழுந்தருளினார். முனிவரின் வருகையால் சபையோரும் அரசரும் மகிழ்ந்தார்கள். வேண்டிய சேவைகளை செய்து வணங்கினார்கள்.
""அரசே! நான் வந்த காரணம் பற்றி நீ எதுவும் கேட்கவில்லையே!'' என்றார் தமிழ் தந்த தவசீலர்.
அரசன், முனிவரின் முன்பு வணக்கத்துடன் நின்று, ""தாங்கள் வந்ததே பெரும் பாக்கியம். தாங்கள் வேண்டுவது எதுவானாலும் செய்யக் காத்திருக்கிறேன்'' என்றார்.
அகத்தியர் அரசரை ஏறிட்டார். ""எது வேண்டினாலும் தருவாய் அல்லவா?'' என்றார் குறுநகையுடன்.
""என்னிடமுள்ள எதுவாகினும் தர தயாராக இருக்கிறேன். தங்களுக்கு அதுபற்றிய சந்தேகம் வேண்டாம்'' என்றார் அரசர்.
உடனே அகத்தியர், ""உன் அருமை மகள் லோபாமுத்திரையை நீ எனக்கு தரவேண்டும். நான் அவளை மணக்க விரும்புகிறேன்,'' என்றார்.
அவர் கூறியதைக் கேட்டதும் மன்னனுக்கு உடம்பு நடுங்கிற்று.
""தவமே உருவெடுத்த முனிவர் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாரா! குள்ள வடிவாய், ஜடாமுடி அடர்த்தியாய் உள்ள இவருக்கு, அழகே வடிவெடுத்து வந்த அருமை மகளை மணமுடித்து வைப்பதா? இதென்ன கொடுமை''.
மனம் புழுங்கிய மன்னனுக்கு பயமும் மண்டியது.
""சபைமுன் வந்து கேட்பவரோ தவமுனிவர்! "தருகிறேன்' என வாக்களித்தபின் தரமறுத்தால் எத்தகைய சாபத்திற்கு ஆளாக நேரிடுமோ,'' என மனம் கலங்கினான். அரசியாருக்கும் அச்சம். என்ன செய்வது என்று அறியாமல் அவர்கள் தவித்தபோது, அங்கே லோபாமுத்திரை வந்தாள்.
பெற்றவர்கள் கலக்கத்தை உணர்ந்தாள்.
மதிநலம் படைத்த பெண்ணல்லவா!
""தந்தையே! ஏன் கலங்குகிறீர்கள்? நான் ஒரு உபாயம் வைத்திருக்கிறேன். அதன்படி செய்யலாம்,'' என்றாள்.
""லோபா, நீயோ அறியாப்பெண். முனிவரிடம் ஏதேனும் சொல்லி, அவருடைய கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ளாதே!'' என பெற்றோர் அவளை எச்சரித்தனர்.
லோபாமுத்திரை அவர்களைச் சமாதானம் செய்தாள். அகத்தியர் முன்பு நின்று வணங்கினாள்.
""முனிவர் பெருந்தகையே! தங்கள் பெருமையை ஊரும், உலகமும் நன்கறியும். தாங்கள் ஆசிரம வாழ்க்கையை மேற்கொண்டவர்கள். நானோ ராஜகுமாரி. அரச வாழ்வின் சுகபோகங்களை பிறந்தது முதல் துய்த்து வருபவள். இப்
பழக்கத்தை விட்டு ஆஸ்ரம வாழ்வை ஏற்பது சிரமமாகும். ஆனாலும், நான் தங்களை மணக்க சம்மதிக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனைக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும்,'' என்றாள்.
அகத்தியர் அவளிடம் நிபந்தனையைக் கேட்டார்.
""மகா முனிவரே! தாங்கள் தவ வாழ்வு வாழ்வதால், செல்வம் உமக்கு தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால், நான் அப்படிப்பட்ட சூழலில் வளரவில்லை. உமது ஆஸ்ரமத்திற்கு சென்றதும், நீர் எனக்கு ராஜபோகங்களை உருவாக்கத்தித் தரவேண்டும். அவ்வாறு உருவாக்கித் தராதவரை நீர் என்னைத் தொடக்கூடாது. அதுவரை கன்னியாகவே இருப்பேன்,'' என்றாள்.
""இவ்வளவுதானா! உன் நிபந்தனையை ஏற்கிறேன்'' என்றார் அகத்தியர். லோபாமுத்திரையும், அகத்தியரை மணக்க சம்மதம் தெரிவித்துவிட்டாள். திருமணம் சிறப்பாக நடந்தேறியது. மணம் முடிந்தபிறகு, முனிவர் மனைவியுடன் வனத்திற்கு கிளம்பினார். அரசனும் அரசியும் கண்ணீர்மல்க விடைகொடுத்தனர்.
ஆஸ்ரமத்தை அடைந்ததுமே, அகத்தியர் தவத்தில் ஆழ்ந்துவிட்டார். லோபாமுத்திரை ஆஸ்ரமத்தை திறம்பட நிர்வகித்து, முனிவருக்கேற்ற தர்மபத்தினியாக, அதே சமயம் கன்னியாகக் காலம் கழித்தாள்.
ஆண்டுகள் பல கடந்தன. தவம் கலைந்து ஒருநாள் முனிவர் கண்விழித்தார். ஆஸ்ரமத்தின் வாயிலில் நின்றிருந்த மனைவியைக் கண்டு துணுக்குற்றார்.
""லோபாமுத்திரையா இவள்? அழகுருவாகத் திகழ்ந்த பெண்மயில், காலமெல்லாம் என் பணிவிடையிலே, தன் எழிலை இழந்துவிட்டாளே!'' கனிவும், கருணையும் அவர் உள்ளத்தில் தோன்ற மெல்ல அவளருகே சென்றார்.
""முத்திரா! அரசனுக்கு மகளாக அரண்மனையிலே அலங்காரமாக பவனி வந்த உன்னை நான் மிகவும் வருத்திவிட்டேன்,'' என்று கூறியபடி, அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவளது தோளைப்பற்றச் சென்றார்.
லோபாமுத்திரை சட்டென்று விலகி பின்வாங்கினாள்.
""நிபந்தனையை மறந்துவிட்டு என்னைத் தொட முயற்சிப்பதா? நான் கேட்ட ராஜபோகங்கள் எங்கே?''
லோபாமுத்திரையின் நிபந்தனை முனிவரின் நினைவிற்கு வந்தது. ராஜபோகங்களைப் பெற லட்சுமி கடாட்சம் வேண்டுமே! குபேரனிடம் சென்று கேட்டார். குபேரன் அவரிடம், ""முனிவரே! இதென்ன விளையாட்டு. தாங்கள் நினைத்தால், உங்கள் தவவலிமையால் ஒரு குபேரபுரியையே சிருஷ்டி செய்ய முடியுமே,'' என்றான்.
அகத்தியர் அதை ஆமோதித்து, தனது மனைவிக்காக மூவுலகிலும் இல்லாத வகையில், சுகபோகங்களுடன் கூடிய ஒரு மாநகரை உருவாக்கினார். செல்வம் கொழித்த அந்த ஊரைக் கண்டு லோபாமுத்திரை மகிழ்ச்சி கொண்டாள். அகத்தியருடன் ஆனந்த வாழ்வினைத் தொடங்கினாள். பதி சேவையே லோபாவின் வாழ்க்கையானது. மூன்று குமாரர்களை ஈன்றெடுத்தாள்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் பருவமழை தவறி, பஞ்சம் தலைவிரித்தாடியது. ஜீவராசிகள் அனைத்தும் உணவுக்கே வாடியபோது, ஜபமேது? தவமேது? ஹோமங்கள் இல்லாத காரணத்தால் தேவர்களுக்கும் உணவு கிட்டவில்லை. தேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் சென்று தங்கள் குறையை எடுத்துக்கூறி வேண்டினார்கள்.
பிரம்மா, நாட்டின் பஞ்சத்தைப் போக்க வழியொன்றைக் கூறினார். ""பதிவிரதையான ஒருத்தி, நதியாகி, நாட்டில் பாய்ந்தால் பஞ்சம் ஒழியும், பயிர்பச்சை விளையும்,'' என்றார்.
அப்பேர்ப்பட்ட பதிவிரதையை தேட தேவர்கள் முனைந்தனர். முடிவாக, எல்லோராலும் பதிவிரதை என்று போற்றப்பட்ட லோபாமுத்திரை இருக்கும் இடம் தேடி வந்தனர்.
அவர்கள் அகத்தியரைக் கண்டார்கள். நிலைமையை விளக்கி,""தமிழ் முனிவரே! தாங்கள்தான் தயை செய்ய வேண்டும்'' என்றனர்.
அகத்தியர் லோபாவிடம் இதுபற்றி விவரித்தார். கணவர் சொல் தட்டாத அந்தக் காரிகை, நதியாக மாற சம்மதித்தாள். அவரது கமண்டலத்தில் புகுந்தாள்.
விநாயகர் காக வடிவமாய் மாறி அதைத் தட்டி விட, நுங்கும் நுரையுமாக, புது வெள்ளமாய் மாறினாள். ஏழு தோழிப் பெண்கள் இணைந்துவர, காவிரியாக வழி நடந்தாள். பசுமை சேர்த்தாள். பஞ்சம் நீங்கியது. பாருலகம் செழித்தது.
பதிவிரதையான லோபாமுத்திரையே, காவிரியாய் பொங்கிவருவதால் அந்த நதியை பார்த்தாலே, பாவங்கள் அகன்றுவிடுவதாக சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

No comments:

Post a Comment