Thursday, June 27, 2013

வேதங்களின் தாய் !


சந்தியா , சாவித்திரி , காயத்ரி , சரஸ்வதி இவர்கள் நான்கு பேரும் சந்தியாவந்தன வழிபாட்டில் சிறப்பிடம் பெறும் தெய்வங்கள் . வைதீக வழிபாட்டில் காயத்ரி தேவிக்கு அதிகமுக்கியத்துவம் உண்டு .
சூரியனுக்கு ஒளி தருமாறும் , உலகுக்கெல்லாம் ஞான ஒளி கொடுக்குமாறும் வேண்டும் மந்திரமே காயத்ரி மந்திரமாகும் .
காயத்ரி என்றால் எவரெல்லாம் தன்னை ஜெபிக்கிறார்களோ அவர்களைக் காப்பாற்றுவது என்று பொருள் .
' காயத்ரீம் சந்தஸாம் மர்தா ' என்பது ஒரு வாக்கியம் . இத்தொடரில் உள்ள சந்தஸ் என்பது வேதத்தைக் குறிக்கும் .வேத மந்திரங்களின் தாய் காயத்ரி மந்திரம் என்பது இந்தத் தொடரின் பொருள் .
காயத்ரி 24 எழுத்துக்களை கொண்டது . மூன்று பாதங்களை உடையது . எனவே , இம்மந்திரத்தைத் திரிபதா என்பார்கள் . ஒவ்வொரு பாதம் ஒரு வேதத்தின் சாரமாகும் . மூன்று பாதங்களும் ரிக் , யஜுர் ,
சாம வேதங்களின் சாரமாகக் கருதப்படுகின்றன . ( அதர்வண வேதத்துக்கு என்று தனி காயத்ரி மந்திரம் உண்டு . இரண்டாவது முறை உபநயனம் செய்து கொண்டு அதன் பின்புதான் அதர்வண காயத்ரி மந்திர ஜெபம் செய்வார்கள் .)
காலை , நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் காயத்ரி ஜெபம் செய்ய வேண்டும் . காயத்ரி , சாவித்திரி , சரஸ்வதி என்று மூன்றுவிதமாக தியானிக்கவேண்டும் . காலையில் பிரும்ம ரூபிணியாகவும் , மதியம் சிவரூபிணியாகவும் , மாலையில் விஷ்ணுரூபிணியாகவும் காயத்ரி தேவி இருக்கிறாள் .
மந்திர சக்தி என்பது அக்னியைப் போன்றது . நெருப்பு அணைந்து இருப்பது போல தெரிந்தாலும் அதற்குள் ஒரு பொறி நிச்சயம் இருக்கும் . அந்தப் பொறி தான் காயத்ரி மந்திரம் . அதை ஊதுவதால் பெரிதாக்கிவிட முடியாது . ஓதுவதால்தான் அதிகரிக்கச் செய்ய முடியும் .
ஜூரத்துக்கு மருந்து கொடுப்பது போல ஆத்மாவைப் பிடித்திருக்கக் கூடிய பந்தங்கள் என்னும் ஜூரத்தை நீக்கக் கூடிய மருந்துதான் காயத்ரி என்கிறார் காஞ்சி மாமுனிவர்

No comments:

Post a Comment