Wednesday, October 30, 2013

இயற்கையில் இறைத்தன்மை

இந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்

இயற்கையில் இறைத்தன்மை

இந்துத்துவத்தின் மற்றொரு தன்மை இயற்கையில் இறைத் தன்மை காணுதல். பூமியை, நதியை, பேசும் மொழியை என்று அனைத்தையும் தெய்வத் தன்மையின் வெளிப்பாடாகக் கொண்டாடுவது ஹிந்துத்துவத்தின் முக்கிய அம்சம்.
ஹிந்து பண்பாட்டின் அனைத்து அம்சங்களும் ஏதோ ஒரு பெரும் விபத்தால் அழிந்து போய்விட்டதென்று வைத்துக் கொள்வோம். அப்படி ஒரு சூழ்நிலையிலும் கூட ஒரே ஒரு இந்து வாசகம் பிழைத்தால், மொத்த இந்துப்பண்பாடும் அதே செழுமையுடன் மீண்டும் பிறந்துவிடும் என மகாத்மா காந்தி ஒரு உபநிடத வாக்கியத்தைக் குறிப்பிட்டார்.
“ஈஸாவாஸ்யமிதம் ஸர்வம்’ என்பதே அந்த வாக்கியம்.
இந்த பிரபஞ்சம் அனைத்தும் இறைவனால் நிறைக்கப் பட்டிருக்கிறது எனும் அந்த வாக்கியம் நம்முள்ளும் நம்மைச் சுற்றியும் இருக்கும் அனைத்தையும் இறைவடிவாகக் காணவும் மதிக்கவும் வைக்கிறது. இந்த வேத ஞானமும் இந்திய மண்ணிலிருந்து எழுந்ததாகும். இந்தியா முழுவதிலும் இதைப் பார்க்கலாம். உதாரணமாக, இந்தியா முழுவதும் ஒவ்வொரு பிராந்தியத்திலுள் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு புனித வனங்கள் இருக்கின்றன. இந்த வனங்களைப் பாதுகாத்துப் போற்றி வணங்கும் பண்பாடு இந்தியா முழுவதும் நிலவுகிறது.

போபாலில் உள்ள இந்திரா காந்தி ராஷ்டிரீய மானவ் சங்கிரகாலயா எனும் அமைப்பு 4875 புனித வனங்களை கணக்கெடுத்துள்ளது. இவற்றின் பரப்பளவு 39,063 ஏக்கர்கள். ஆனால், இந்தக் கணக்கெடுப்பில் அடங்காமல் பல புனித வனங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் வனங்கள் கூட நலிவடைந்து வரும் இந்தக் காலகட்டத்திலும், புனித வனங்களின் பரப்பளவு அப்படியே இருந்து வருகிறது என இந்திய வன நிர்வாகத்துறையின் இயக்குநரே கூறுகிறார்.
இன்றைய தேதியில் கேரளாவில் 500 ஹெக்டேருக்கு மேலாக 2000 நாகக் காடுகள் (ஸர்ப்ப காவுகள்) உள்ளன. இந்த 2000 காடுகளில் 761 காடுகளில் சுற்றுச்சூழல் தாவரவிய லாளர்கள் 722 தனித்தனி பூப்பூக்கும் தாவர இனங்களை கண்டறிந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 304 காடுகள் இன்றும் உள்ளன. மிகச்சிறந்த மூலிகைச் செடிகள் கிடைக்கும் இடமாக இந்தக் காடுகள் அறியப்படுகின்றன. சூழலியல் உணர்வு என்பது ஹிந்து தர்மத்தில் அன்றாட வாழ்க்கையிலும் வெளிப்படுவது.
ஹிந்துத்துவத்தின் இரண்டு முக்கியத் தன்மைகளை நாம் மேலே காண்கிறோம். பௌத்த அறிஞர் பேராசிரியர் லோகேஷ் சந்திரா இந்த இரண்டையும் ஒன்றோடொன்று இணைந்த இறையியல் பன்மை (theo -diversity) உயிரியல் பன்மை (bio-diversity) என அழைக்கிறார். இந்த இரண்டையும் பேணிக் காப்பதாக நம் பண்பாடு அமைந்துள்ளது. இந்தப் பண்பாட்டு வாழ்வியலின் வரலாற்றுப் பெயர்தான் ஹிந்துத்துவம்.

இந்துத்துவம் மிளிரும் பாரத இறையாண்மை
மேலே கூறிய இரண்டு அடிப்படைகளும் பரந்துபட்ட தத்துவங்களாகத் தோன்றலாம். ஆனால், அவை இந்த தேசத்தில் தலைமுறைகள் தாண்டிப் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இந்த உண்மைகளை நம்முடைய நவீன பாரத அரசாங்கத்தை ஏற்படுத்திய தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவேதான் நம் தேச இறையாண்மையைக் காட்டும் சின்னங்கள் இந்துத்துவத் தொல்மரபினை வெளிக்காட்டுபவையாக அமைக்கப்பட்டன.

நம் தேசத்தின் முத்திரை வாக்கியமான “சத்யமேவ ஜெயதே’ என்பது முண்டக உபநிடதத்தின் வாசகம்.
இந்தியக் கடற்படையின் முத்திரை வாக்கியம் “சம் நோ வருணா:’ வருணன் நமமைக் காப்பாற்றட்டும் என்பது அதன் பொருள்.
இந்திய விமானப்படையின் முத்திரை வாக்கியம் “நப: ஸ்ப்ருசம் தீப்தம்’. இது பகவத் கீதையின் 11வது அத்யாயத்தின் 24வது சுலோகம். “வான்முகத்தை தொடுபவன் ஒளி வீசுபவன்’ என பகவான் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனத்தை கூறும் வாசகமே அது.
மத்திய அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி மையத்தின் (என்.சி.இ.ஆர்.டி) முத்திரை வாக்கியம் “அறிவின் மூலம் அழியா வாழ்வு’ என்பது. இது ஈஸாவாஸ்ய உபநிடதத்திலிருந்து பெறப்பட்டது.
எல்.ஐ.சியின் முத்திரை வாக்கியம் “யோகஷேமம் வஹாம்யகம்’ “உங்கள் நலன் எம் பொறுப்பு’ எனும் கீதையின் வாசகம். இவ்வாறு இந்திய இறையாண்மை நம் கலாசார தேசியத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது

No comments:

Post a Comment