Thursday, October 31, 2013

மனிதன் பலவீனங்களுக்கு ஆட்பட்டவன். கடவுளோ நிலையான தன்மை உடையவர்.

நான் தான் பெரிய ஆள்...என்னை வெல்ல யாருக்கு சக்தியுண்டு, என் பணமென்ன, அந்தஸ்தென்ன!
மாடமாளிகைகள் என்ன! கூடகோபுரமென்ன!' என்று அகம்பவமாக பேசிக்கொண்டு, இந்த உலகத்தில் வாழ்பவர்கள் எத்தனையோ பேர். கடவுள் தான் உலகில் உயர்ந்தவர் என்பதை இவர்கள் ஏனோ மறந்தே போகிறார்கள்.
சுந்தன், உபசுந்தன் என்ற அரக்க சகோதரர்கள், தங்கள் பலத்தைக் கொண்டு தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தினர். பிரம்மாவை எண்ணி கடும் தவத்தில் ஆழ்ந்து, நான்கு முக பிரம்மாவை வரவழைத்தனர்.
""குழந்தைகளே! உங்களுக்கு என்ன வரம் வேண்டும், கேளுங்கள்!'' என்றார் பிரம்மா.
""ஐயனே! நாங்கள் என்றும் சாகாமல் இருக்க வரம் வேண்டும்,'' என்றனர்.
""பிள்ளைகளே! அது நடக்காத காரியம். இயற்கைக்கு புறம்பான ஒன்றை வரமாகத் தர முடியாது. நீங்கள் நினைப்பது போல் நீண்டநாள் வாழலாம். ஆனால், ஏதோ ஒரு வகையில் நீங்கள் மரணத்தைச் சந்தித்து தான் ஆக வேண்டும்,'' என்றார்.
அவர்கள் புத்திசாலித்தனமாக,""எங்கள் மரணம் எந்த தெய்வத்தாலும், தேவராலும், மிருகத்தாலும், இன்ன பிறவற்றாலும் நிகழக்கூடாது. எங்களை நாங்களே தான் அழித்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு வரம் தாருங்கள்,'' என்றனர்.
பிரம்மா சம்மதித்தார்.
தங்களுக்கு அழிவில்லை என்று இறுமாந்திருந்த அந்த அசுரர்கள் செய்த கொலைகளுக்கும், அட்டூழியங்களுக்கும் அளவே இல்லாமல் போனது. இதுபற்றி பிரம்மாவிடம் தேவர்கள் முறையிட்டனர். அவர், தேவலோக சிற்பியான மயனை அழைத்தார்.
""சிற்பியே! இவ்வுலகில் இதுவரை பிறக்காத பேரழகுடன் கூடிய ஒரு பெண் சிலையைச் செய்,'' என ஆணையிட்டார். மயனும், அவ்வாறே ஒரு சிலையை வடிவமைத்தார். அந்த சிலைக்கு உயிரூட்டிய பிரம்மா, அவளுக்கு "திலோத்தமா' என்று பெயரிட்டார்.
அவளை அரக்கர்கள் அடிக்கடி நடமாடும் கானகப்பகுதிக்கு செல்லுமாறு பணித்தார். திலோத்தமாவும் காட்டிற்குச் சென்றாள். அப்போது சுந்தனும், உபசுந்தனும் அங்கே வந்தனர். பேரழகு பெட்டகமான திலோத்தமையைக் கண்ட அவர்கள் அவள் மீது ஆசை கொண்டனர்.
சுந்தன், ""இவள் எனக்குத்தான், நீ போய் விடு,'' என உபசுந்தனை விரட்டினான். அண்ணனுக்கே எதிலும் முதல் பங்கு என வாதிட்டான். உபசுந்தனோ, ""தம்பிக்காக விட்டுக்கொடுப்பது தான் அண்ணனின் கடமை. அண்ணன் என்பவன் தந்தைக்குச் சமம்,'' என்றான்.
இருவரது வாய்தகராறும் கைகலப்புக்கு சென்று, கடும் போராக மாறியது. அவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டு மரணமடைந்தனர்.
இப்போது புரிகிறதா! மனிதன் பலவீனங்களுக்கு ஆட்பட்டவன். கடவுளோ நிலையான தன்மை உடையவர். அவரே பெரியவர்.

No comments:

Post a Comment