Thursday, December 19, 2013

மாயை:

மாயை:

மாயை என்ற பதம் உலக மதங்கள் எல்லாவற்றாலும் சொல்லப்படுகிறது. மாயை என்றால் என்ன என்பது உலகம் முழுவதும் அறிந்த ஒரு சத்தியமாகும். இதைப் பற்றி வேதத்தில் சொல்லப்பட்டாலும் இந்த வார்த்தை மற்ற மதங்களை நினைவுபடுத்துவது போல இருப்பதால் மாயையை பற்றி பெரும்பாலும் போதிக்கபடுவதில்லை. ஆனால் இதைப் பற்றிய அறிவு நாம் நம்முடைய வாழ்வில் முன்னேறிச் செல்ல மிகவும் தேவையானதாகும்.

இப்போது மாயை என்றால் என்று பார்ப்போம். மாயை என்பதற்கு உண்மையைப் போலத் தோற்றமளிக்கும் உண்மையில்லாதவைகள் என்று பொருள்.

மனிதன் இந்த உலகில் என்னுடைய குடும்பம், என்னுடைய சொத்து என்று இப்படிப் பல என்னுடையவைகளை தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறான். இப்படி இந்த உலகில் தன்னுடையவைகளோடு இருக்கும் மனிதன் மரணம் வரும் போது தன்னுடையது என்று அவன் நினைத்து கொண்டிருக்கும் எல்லாப் பொருள்களிடமிருந்தும், உயிர்களிடமும் இருந்து பிரிக்கப்படுகிறான்.

இப்படி இறக்கும் போது கூட வராதவைகள் மாயை என்று சொல்லப்படுகிறது. கூட வருவதோ சத்தியம் அல்லது மெய்ப்பொருள் என அழைக்கப்படுகிறது. கண்ணதாசனின் "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை" பாடலில் வரும் கடைசி வரை யாரோ என்பதற்க்குப் பதில் தான் மெய்ப்பொருள் அல்லது சத்தியம்.

மாயை என்பது சைவ சித்தாந்ததில் சிறப்பான ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் பல இடங்களில் இந்த உலகம் மாயை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று மெய்ப்பொருள், இரண்டாவது பொருள் போல தோற்றம் கொண்ட மாயையான பொருள். எது நேற்றும், இன்றும், நாளையும் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறதோ, எது தோன்றுவதும், மாறுவதும், அழிவதும் இல்லையோ, அதுவே மெய்ப்பொருள்.

அது எந்த காலத்திலும் எந்த மாற்றமும் இல்லாமல் நிலையாக இருக்கிறது. எது தோன்றுவதும், மாறுவதும், காலத்தால் அழிவதுமாக இருக்கிறதோ அது பொருள் இல்லை மாயை. இது ஆன்மிகம் கூறும் மாயைக்கான விளக்கம்.
உதாரணமாக ஒரு வாழைப்பழம் என்ற பொருளை எடுத்துக் கொள்வோம். இதை சாதரணமாக பார்த்தால் இது ஒரு வாழைப்பழம் என்று தெரிகிறது. இன்னும் கொஞ்சம் அறிவியல் பார்வையில் உள்ளே போனால் இந்த வாழைப்பழம் பல அணுக்களின் கூட்டு என்றும், ஒவ்வொரு அணுக்களும் தனித்தனியாக இயங்கிக் கொண்டு இருக்கின்றன என்றும் தெரிந்துகொள்ளலாம்.

பல அணுக்கள் இணைந்து வாழைப்பழம் என்ற இயக்கத்தை, நிகழ்ச்சியை நடத்தி கொண்டு இருக்கின்றன. எனவே இந்த வாழைப்பழத்தை நாம் ஒரு நிலையான பொருள் என்று சொல்லமுடியாது. ஒரு நிகழ்ச்சி என்று சொல்லாம். ஆனால் அது நம் பார்வைக்கு ஒரு நிலையான பொருள் போல தோற்றம் தருகிறது. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி ஒரு பொருள் போல தோன்றுவதே அறிவியல் பார்வையில் மாயைக்கான விளக்கம்.
இதே அடிப்படையில்தான் தாவரம், விலங்குகள், பறவைகள், மனிதன், இன்னும் நாம் உலகில் தொடர்புகொள்ளும் அத்தனை பொருட்களும் தொடர்ந்து இயக்கத்தில் உள்ள ஒரு நிகழ்சிகளே. எதுவும் நிலையான பொருள் இல்லை என்று புரிந்துகொள்ளலாம். ஆனால் ஒரு மனிதனை பார்க்கும்போது ஒரு திடமான உருவம் தெரிகிறது அவன் உடல் முழுதும் அணுக்கள் தொடர்ந்து இயங்கி கொண்டே இருப்பதாக தெரியவில்லையே ஏன்? இதற்கும் அறிவியல் விளக்கம் உள்ளது.

நாம் நம் வீட்டில் மேலே மின்விசிறி சுழல்வதை பார்த்திருக்கிறோம். அது வேகமாக சுழலும்போது அதன் இறக்கைகள் தனித்தனியாக தெரியாது. மொத்தமாக ஒரு தட்டு போல தெரியும். அதற்க்கு காரணம் அதன் வேகமான சுழற்சி இயக்கமே. அதே போல் நாம் திரையரங்கத்தில் திரைப்படம் பார்த்திருக்கிறோம், அங்கு திரையில் நாம் தொடர்ந்து படம் ஓடுவதை பார்க்கிறோம் அனால் அந்த படத்தின் “பிலிமை” எடுத்து பார்த்தால் இரண்டு நிமிடம் படம் ஓட இருநூறு தனித்தனி “பிலிம்கள்” உபயோகப்படுத்த படுவதை பார்க்கிறோம். எப்படி தனித்தனி “பிலிம்கள்” ஒரு நிலையாக தொடர்ச்சியாக ஒரு காட்சியை தருகிறது. இதுவும் அந்த “பிலிம்களின்” வேகமான சுழற்சி இயக்கமே காரணம்.

இப்படித்தான் நம் உடலிலும் உள்ள அணுக்கள், வேகமாக சுழன்று இயங்கிக்கொண்டே இருப்பதால் நம் உடல் மொத்தமாக ஒரு நிலையான பொருள் போல தெரிகிறது. அனால் உண்மையில் இந்த அணுக்கள் தினமும் நம் உடம்பிலிருந்து ஆயிரக்கணக்கில் இறப்பதும் புதிதாக தோன்றுவதுமாக இருக்கிறது. இன்று நாம் பார்த்த அணு நம் உடலில் நாளை இருக்காது. எனவே இன்று உள்ள நாம் உடலும் நாளை உள்ள நம் உடலும் ஒன்று அல்ல வேறுவேறு. அனால் நமக்கு நம் உடல் பிறந்ததிலிருந்து ஒன்று போல தோன்றுகிறது. இதுதான் மாயை. நாம் மரணம் அடைந்தவுடன் அந்த அணுக்களின் சுழற்சி நின்றவுடன் நாம் உடல் என்ற கூட்டு இயக்கம் நின்று தனித்தனி அணுக்களாக பிரிந்து அதன்அதன் இயல்பான இடத்தை சென்று சேர்ந்துவிடும். இதே இலக்கணம்தான் உலகில் உள்ள விலங்குகள், பறவைகள், மற்ற உயிருள்ள, உயிர் இல்லாத அனைத்து பொருட்களுக்கும்.
மேற்படி கருத்துகளிலிருந்து நாம் தெரிந்துகொள்வது இந்த உலகில் நம் கண்களுக்கும், மற்ற புலன்களுக்கும் தெரியும் அனைத்து விஷயங்களுமே, மனிதன் உட்பட ஒரு நிரந்தர பொருள் இல்லை. அனைத்தும் வெறும் நிகழ்ச்சிகளே. இதை விளக்கத்தான் நம் முன்னோர்கள் “ உலகம் ஒரு நாடக மேடை” என்று சொல்லிவைத்தனர்.

உயிருள்ளவை உயிரில்லாதவை என்று எதை வேண்டுமானாலும் எடுத்து அதை பிரித்து கொண்டே போனால் கடைசியில் இனி பிரிக்கமுடியாத ஒரு அணு கிடைக்கும். அந்த ஒற்றை அணு, மனிதனிடமும், விலங்குகளிடமும் மற்ற உயிரில்லா பொருள்களிடமும ஒன்றேதான். நம் உருவங்களில் காணும் மாற்றங்கள் எல்லாம் அந்த அணுக்களின் எண்ணிக்கையிலும் இயக்க வேகத்திலும் உள்ள மாற்றங்களால் வருவது. இதன் அடிப்படையில் நான் வேறு நீங்கள் வேறு இல்லை, நான் வேறு ஒரு விலங்கு வேறு இல்லை, நான் வேறு ஒரு மரம் வேறு இல்லை, நான் வேறு ஒரு கல் வேறு இல்லை. ஆனால் நாம் பார்க்கும்போது இதெல்லாம் வேறுவேறாக தெரிகிறதே இதுதான் மாயை. இதுதான் மாயையின் அடிப்படை.

அப்போது உலகில் உள்ளதெல்லாம் மாயை என்றால் மாயை இல்லாத பொருள் என்று ஒன்று உண்டா? என்று சந்தேகம் எழுவது இயல்பு. அந்தப் பொருள் மாயைக்கு எதிர்ப்பதமான மெய்ப்பொருள்.

2 comments:

  1. Sir
    மிக சிறப்பான விளக்கம்
    மிக்க நன்றி
    ஜவஹர் .P

    ReplyDelete
  2. அருமை.....நல்ல பதிவு

    ReplyDelete