Friday, January 31, 2014

தெய்வத்தாய்

பிங்கல நாட்டின் மன்னன் ரகுநாதன். அவனது மனைவி சியாமளா கருவுற்றாள். நாடெங்கும் விழாக்கோலம்.
தங்கள் இளவரசன் வரவுக்காக மக்கள் காத்திருந்தனர். பிரசவநாளும் வந்தது. அரண்மனை வைத்தியர்கள் ஆலோசனைகள் வழங்க, தாதிகள் அரசிக்கு பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தனர். மிகக்கடுமையான வலி வந்தும் குழந்தை பிறக்கிற வழியைக் காணோம். ரகுநாதன் வேண்டாத தெய்வமில்லை. ஒருவழியாய் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அத்தோடு, "ஓவென' தாதியர்கள் அழும் குரலும் கேட்டது.
குழந்தையின் அழுகுரல் கேட்டு மகிழ்ந்திருந்த ரகுநாதன், தொடர்ந்து வந்த தாதியர்கள் அழுகுரல் கேட்டு அதிர்ந்தான். ஆம்...
குழந்தையைப் பெற்றுக் கொடுத்த சியாமளா, ஜன்னி கண்டு இறந்து விட்டாள்.
""பிரசவம் ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்பார்கள். என் மனைவிக்கு அந்தப் பிறவி கிடைக்காமல் போயிற்றே!'' என ரகுநாதன் கலங்கி அழுதான். குழந்தையைக் கவனிக்க யார் இருக்கிறார்கள் என்ற கவலையும் சேர, சோர்ந்து போனான்.
தாதிகள் குழந்தையைக் கவனித்துக் கொண்டார்கள். அவர்களில், தன் நம்பிக்கைக்குரிய பவானி என்பவளைத் தேர்ந்தெடுத்த ரகுநாதன், "" பவானி! இவனை இனி உன் குழந்தை போல் கவனித்து வா!'' என்றான். பவானியும் மகிழ்வுடன் சம்மதித்தாள்.
பவானியின் கணவன் ஏற்கனவே இறந்து விட்டான்.
அவளுக்கு இரண்டு வயதில் ஒரு மகன். இரண்டு குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்தாள்.
மனைவியின் இறப்பால், சோகத்தில் ஆழ்ந்திருந்த மன்னனால் நாட்டின் நிர்வாகத்தில் சீராக கவனம் செலுத்த முடியவில்லை. இதைப் பயன்படுத்தி, அமைச்சர்களும், பிற அதிகாரிகளும் மக்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர்.
ஆனால், மக்களோ மன்னனைத் தான் தூற்றினர்.
ரகுநாதனுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி, அவனை நாட்டே விட்டு துரத்தி விட வேண்டும். தாதியிடம் வளரும் இளவரசனைக் கொன்று விட வேண்டும். தங்களில் ஒருவர் ராஜாவாகவும், மற்றவர்கள் ராஜபிரதிநிதிகளாகவும் இருந்து சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என திட்டமிட்டனர்.
திட்டத்தின் முதல் கட்டமாக, இளவரசனைக் கொல்ல சதி செய்தனர். இதை பவானி தெரிந்து கொண்டு விட்டாள். இளவரசனைக் கொல்ல வரும் நாளில், அவனை வெளியே அழைத்துச் சென்று, ஒரு வீட்டில் மறைவாக வைத்து விட்டாள். தன் மகனுக்கு இளவரசன் போல் அலங்காரம் செய்து, அவன் படுக்கும் கட்டிலில் தூங்க வைத்தாள். சதிகார அமைச்சர்கள், இருளில் பதுங்கி வந்தனர். தூங்கிக் கொண்டிருந்த பவானியின் மகனை, இளவரசன் எனக்கருதி கொன்றனர்.
விஷயம் மன்னனுக்கு தெரிந்தது. அவன் பவானியின் தியாகத்தைப் பாராட்டினான். அமைச்சர்கள் செய்த சதியை மக்களுக்கு தெரியப்படுத்தினான். மக்களுக்கு உண்மை தெரிய வரவே, அவர்கள் அமைச்சர்களை கட்டி இழுத்து வந்தனர். அந்த ராஜதுரோகிகளை பொது இடத்தில் தூக்கிலிட்டனர்.
மகனின் பிரிவைத் தாங்காத பவானி கவலையில் இறந்து போனாள். அந்த தியாகத்தாயை தெய்வமாக மதித்து, அவளுக்கு சிலை வடித்தனர். மன்னன் அவளுக்கு கோயில் எழுப்பினான். அவள் பிங்கலநாட்டின் குலதெய்வமாக வணங்கப்பட்டாள்.

No comments:

Post a Comment