Friday, January 31, 2014

சக்கரம் சுழல்கின்றது

தெய்வா! பணம் தான் உலகில் கடவுள். பணமில்லாதவனை யாரும் மதிப்பதில்லை. நேற்று வரை நம் மளிகைக்கடையில் அருமையாக வியாபாரமாயிற்று. யார் கண் பட்டதோ தெரியவில்லை. கடையிலிருந்த பொருட்களை யாரோ திருடிச் சென்று விட்டனர். கடனுக்கு பொருள் கொடுத்தவர்கள் துன்பப்படுத்துகிறார் கள். சரி...நடந்ததை நினைத்துப் பயனில்லை. தர்மர் திரவுபதியும், நள தமயந்தியும், அரிச்சந்திரன், சந்திரமதியும் படாத கஷ்டமா! இருக்கிற வீட்டையும், உன் நகையையும் விற்று கடனை அடைப்போம். பின் பார்த்துக்கொள்ளலாம்,'' என்றான் ராமசாமி தன் மனைவியிடம்.
அவளது பெயர் தெய்வநாயகி.
"தெய்வா' என செல்லமாக அழைப்பான். இந்த சம்பவத்திற்குப் பின் அவனைக் கண்டவர் எல்லாம் ஒதுங்கினர். கவலையில் ராமசாமிக்கு கடும் காய்ச்சல். வைத்தியர் கூட, பணம் கொடுத்தால் தான் வருவேன் என அடம்பிடித்தார்.
தெய்வா, தன் இஷ்டதெய்வமான அம்பிகையை வணங்கினாள்.
அர்ச்சகர் அவளிடம்,""மகளே! நீ அம்பாளின் குங்குமத்தை இட்டுக்கொள். உன் மாங்கல்யத்துக்கு பங்கம் வராது,'' என்று சொல்லி அனுப்பி வைத்தார். அர்ச்சகரின் சொல் பலித்தது. ஒருவழியாய் அவனும் எழுந்தான்.
உலகில் நல்லவர்கள் இல்லாமலும் இல்லை. ஒரு தோழி, தெய்வாவுக்கு ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தாள். அதைக் கொண்டு, அவள் காய்கறிக்கடை வைத்தாள். அதில் கிடைத்த லாபத்தில், அரை வயிற்று கஞ்சி கிடைத்தது. ஏழையாகப் பிறக்கலாம்..... தவறில்லை. வறுமை பழகிப் போகும். வாழ்ந்து மட்டும் கெடக்கூடாது.. தெய்வா, தன் நிலையை எண்ணி வருந்தினாலும், தன்
கணவன் சொன்னபடி "தமயந்தி, சந்திரமதிக்கு நேர்ந்தது போல, கணவனை விட்டு பிரியாமல் வாழும் சந்தர்ப்பமாவது கிடைத்ததே என ஆறுதலடைந்தாள்.
ஒருமுறை, அந்நாட்டு அரசன், தன் மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால், அது குணமாக, யாராவது ஒரு அந்தணருக்கு தங்கக்காசுகள் தானம் செய்ய முடிவெடுத்தான். ஆனால், இதை தானம் வாங்குபவருக்கே தெரியாமல் செய்ய வேண்டும் என்பது ராஜகுரு விதித்த நிபந்தனை. எனவே, ஒரு பூசணிக்காயைக் குடைந்து, உள்ளிருப்பதை வெளியே எடுத்து விட்டு, காசுகளைக் கொட்டினான். ஒரு அந்தணருக்கு அதை தானம் செய்தான். உள்ளே காசு இருப்பதை அறியாத, அந்தணர் அதை தன் மனைவியிடம் கொடுத்தார்.
வீட்டில், ஏற்கனவே ஒரு பூசணிக்காய் இருந்ததால், அதை, தெய்வாவின் காய்கறி கடையில் பாதி விலைக்கு விற்று விட்டாள், அந்தப் பெண் அப்போது, கடை அடைக்கும் நேரம் என்பதால், விற்காத பூசணிக்காயுடன் வீட்டுக்குப் போனாள் தெய்வா. மறுநாள், அதை சமைப்பதற்காக வெட்டப்போக, உள்ளிருந்து தங்கக்காசு கொட்டியது. சம்பந்தப்பட்டவரை தேடி கொடுத்து விடலாம் என அவள் முயன்ற போது, கொடுத்தது யார் என அறிய முடியவில்லை.
அந்தப் பணத்தைக் கொண்டு மீண்டும் கடை துவங்கினான் ராமசாமி. அம்பாள் அவனையும், தெய்வாவையும் கைவிடவில்லை. முன்பை விட நல்ல நிலையை அடைந்தனர் அவர்கள். வாழ்வென்றும் தாழ்வென்றும் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கின்றது. அந்த சுழலில் சிக்காதவர்கள் உலகில் யாருமில்லை.

No comments:

Post a Comment