Wednesday, February 19, 2014

இறைவனை வழிபட வேத மந்திரங்கள் அவசியம் வேண்டுமா?

இறைவனை வழிபட வேத மந்திரங்கள் அவசியம் வேண்டுமா? நிறைவான பக்தியுடன் இறை நாமத்தைச் சொல்லி வழிபட்டால், இறையருள் பரிபூரணமாகக் கிடைத்துவிடாதா..?

ஒலி அதன் வடிவம். அதி...ல் ஒளிந்துள்ள ஒளியானது ஒலியை இயக்கும். அதன் செயல்பாடு அறம். அதன் பெயர் வேதம். வேதம் என்றால் பேரறிவு எனப் பொருள் (விதஞானே...). பரம்பொருளில் இருந்து இடைவெளி வெளிப்பட்டது; ஆகாசம் தோன்றியது; அதிலிருந்து காற்று வந்தது என படைப்பை விவரிக்கிறது வேதம். அந்தக் காற்றானது பொருள் படைத்த ஒலி வடிவைப் பெற்று, உலகின் காதுகளில் வந்து விழுந்தது. காதில் விழுந்த முதல் ஒலி வேதம் என்கிறது ஸனாதனம் (ஆத்மன: ஆகாச: ஸம்பூத: ஆகாசாத் வாயு:....). நாம் வெளியிடும் ஒலி, உடல் வெப்பத்தின் தாக்கத்தால் உருவானது என்கிறது ஆயுர்வேதம் (காயாக்னிமாஹந்தி).

வேதத்துக்கு 'ச்ருதி’ என்று பெயர். காது வழியாக ஒலியை (வேதத்தின் கருத்தை) ஏற்று, மனத்தில் பதிய வைப்பதால் காதுக்கும் 'ச்ருதி’ என்று பெயர். அறிவுப் புலன்களான காதுகளின் திறமை குன்றாமல் இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கச் சொல்கிறது வேதம் (ஸ்ரோத்ரம்த உர்வபதிராபவாம:). ஆம்! வேதக் கருத்துக்கள் காது வழியாக ஒருவரது மனத்தில் பதிந்துவிட்டால், அதோடு கலந்த சிந்தனையில் அறிஞனாகத் திகழ்வார். பாரதப் பண்பாட்டின் ஆணி வேர் வேதம். நாகரிக சமுதாயத்துக்கு வேத அறிவு வேண்டும். தமிழறிஞர்கள் வேதத்தை 'எழுதாக்கிளவி’ என்பர். அதன் வடிவம் ஒலி, எழுத்தல்ல என விளக்குவர்.

வாழ்க்கை இனிக்க உடல் மட்டும் போதாது; தெளிவான உள்ளமும் இணைய வேண்டும். இன்னும் சொல்லப்போனால், உள்ளத் தூய்மையே உடல் வலிமையைப் பாதுகாக்கும். எதிரிடையான குணங்கள், நம் மனத்தில் நீறுபூத்த நெருப்பாக ஒளிந்திருக்கும். ஆன்ம குணங்கள் எட்டும், ஆசை, கோபம் போன்ற எதிரிடையான குணங்கள் ஆறும் மனத்தில் குடியிருக்கும் (அதாஷ்டாவாத்மகுணா: காமக்ரோத லோப மோஹமதமாத் ஸர்யாதய:). மனத்தைக் கலக்கமுறச் செய்யும் ஆசை முதலான ஆறு விபரீத குணங்களை அகற்றி, மனத்தைத் தெளியவைக்கும் ஆன்ம குணங்கள் எட்டையும் மலரச் செய்தால், நல்ல நாகரிகனாக மாறி சமுதாயத்தை விளங்கச் செய்யலாம். கல்வி, வேலை, பணம் சேமிப்பு, வீடு- வாகனம், நுகர்பொருட்கள் அத்தனையும் உலகவியல் சுகத்துக்கு அவசியம்தான். ஆனால், உள்ளத்தெளிவுடன் இருப்பவனுக்கே அது இனிக்கும். இல்லையேல் கசக்கும். மனவியல் செயல்பாடுகள் சிறந்து விளங்க, அன்றாடம் அதன் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்.

வேத ஒலிக்குள் ஒளிந்திருக்கும் ஒளிமயமான பரம்பொருளை அனுதினமும் வழிபடுவதால், மனத்தின் மாசுகளை அகற்றி, நல்ல சிந்தனையுடன் வாழ்வைச் சுவைத்து மகிழலாம். தெய்வ வழிபாட்டின் செயல் வடிவம் கோயில்கள். அவையின்றி மனிதன் மனிதனாக வாழ இயலாது.

வழிபாட்டின் நடைமுறையை ஆகமம் வரையறுத்தாலும், அதன் முழுப்பலனை எட்ட வேதத்தின் இணைப்பு அவசியம். வேதம் ஓதி தேவனை வழிபட வேண்டும். வேதத்தின் ஒலியில் அவர் ஒன்றியிருப்பதால், எளிதில் அவரைத் தட்டியெழுப்பி, அவரின் அருளைப் பெறலாம். ஒட்டுமொத்த மக்களுக்காக கோயில்கள் ஏற்பட்டிருப்பதால், வேதத்தோடு தூய்மையான வழிபாட்டில் மக்களின் தேவைகள் எளிதில் ஈடேறும். அன்றாடம் அலுவலில் மூழ்கியிருக்கும் மக்களுக்குக் கடவுளை வழிபட நேரம் இருக்காது. இந்நிலையில், உலக நன்மைக்காக உள்ள கோயில் வழிபாடுகள் சட்டதிட்டத்துடன் நிறைவேறும்போது, மக்களின் வாழ்க்கை இன்னலின்றி நிறைவுபெறும். ஒவ்வொரு குடிமகனும் தனித்தனியாகக் கோயிலில் வழிபட்டே ஆகவேண்டும் என்பது கிடையாது. வக்கீல் செய்யும் வாதத்தின் பலன் கட்சிக்காரரைச் சென்றடைவதுபோல, அர்ச்சகர் செய்யும் பொது வழிபாட்டின் பலன் மக்களை அடையும்.

சுதந்திரக் குடிமகனாக இருந்தாலும் மந்திரிப் பதவி ஏற்கும் ஒருவன் சில வாக்குறுதிகளை அளிக்கவேண்டும். அவர்கள், சில தனி நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும்; சுய விருப்பப்படி செயல்பட இயலாது. பாரபட்சம் இல்லாத தீர்ப்பை வழங்க, மனசாட்சியுடன் கூடியவன் நீதிபதியாகலாம். மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பவனே, காவல் அதிகாரியாகலாம். அதுபோலவே, உள்ளத் தூய்மையும் வாய்மையில் திட நம்பிக்கையும் உள்ளவன், வேதம் ஓதி வழிபாட்டை நடத்தவேண்டும். இப்படி உலக நன்மைக்காக செய்யப்படும் பூஜையில், வேதம் ஓதுதல் கட்டாயம் ஆகும். வேதம் படித்தால் மட்டும் போதாது; அதனை ஓதி வழிபட்டால் மட்டுமே பயன் இருக்கும். புதுச் சிந்தனையாளர்களின் கண்ணோட்டம் உலகவியலுக்கு மட்டுமே பொருந்தும். உளவியலில் தன்னிறைவு பெற, வேதம் ஓதித்தான் ஆக வேண்டும்.

வேறொரு விளக்கத்தைப் பார்க்கலாம்...

உலகில் பிறந்த அத்தனை பேருக்கும் ஆன்மிக உணர்வு வேண்டும். பிறரது தயவின்றி தானாகவே சுதந்திரமாக அதை அடைய வழி இருக்கவேண்டும். எல்லோராலும் வேதம் கற்க இயலாது. ஆனால், எல்லோருக்கும் உள்ளத் தெளிவு நிச்சயம் வேண்டும். கடவுள் வழிபாட்டில் வேதத்தைக் கட்டாயமாக்கினால், மற்றவர்கள் வழிபாட்டின் பயனை இழப்பார்கள். பிறரின் தயவில் வாழவேண்டிய நிலையை ஸனாதனம் ஏற்காது. தன் கையே தனக்கு உதவி. அதுதான் நம்பிக்கைக்கு உகந்தது. தலையணை இல்லாதவன் தன் கையைத் தலைக்கு வைத்து நிம்மதியாக உறங்குவான். அவரவர் உள்ளத்தை அவரவரே தூய்மைப்படுத்தவேண்டும். வேதம் அதற்கு முட்டுக்கடையாக இருக்கக்கூடாது.

நம: சிவாய எனும் பஞ்சாக்ஷரமும் (நம:சிவாயச சிவதராயச), ஓம் நமோ நாராயணாய என்ற அஷ்டாக்ஷரமும் (நாராயண பரோத்யாதா) வேதத்தில் இருந்து வெளிவந்த ஒலி வடிவம். அதை வைத்துப் பாமரனும் வழிபாட்டில் ஈடுபடலாம். அதற்கும் பலன் உண்டு. புராணங்களும் இதிகாசங்களும் வேதம் இல்லாமலேயே வழிபடும்

தகுதியை வழங்கியுள்ளன. அதற்குப் பலன் உண்டு என்றும் சொல்கின்றன (பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி). ஆகவே, கடவுளின் பெயரை உள்ளத் தூய்மையோடு உச்சரித்து வழிபடலாம்; வேதம் ஓதவேண்டிய கட்டாயம் இல்லை. வேதத்தை முழுமையாக கற்க முடியாது என்பதால், வேதத்தை நான்காகப் பிரித்து ஏதாவதொரு பகுதியைக் கற்றால் போதும் என்று சொன்னார் வேத வியாசர். உலகவியலில் ஆழ்ந்திருக்கும் இன்றைய காலச் சூழலில், வேதம் கற்க நேரம் இருக்காது. ஆகவே, வேதத்துக்குச் சமமான பஞ்சாக்ஷரம், அஷ்டாக்ஷரம் சொல்லி வழிபடுவதால்... இப்படியான வழிபாடு அத்தனைபேருக்கும் நேரடியாக வழிபடும் தகுதியை அளிப்பதால் சிறப்புப் பெறுகிறது. ஆக, வேதத்தைக் கட்டாயம் ஆக்காமல் வேறு வழியில் செய்யும் வழிபாடுகளும் ஏற்கத் தகுந்தனவே!

உயர்ந்த நடைமுறையை ஒதுக்கும் நோக்கத்தில் அமைந்துள்ள இந்த விளக்கம், எல்லோரையும் திருப்திப்படுத்தாது.

காவல் தெய்வங்கள், குல தெய்வங்கள், நம்பிக்கையில் விளைந்த சுயம்பு (தானாகத் தோன் றியது) தெய்வங்கள், ஒருசிலரின் நம்பிக்கையில் விளைந்த முன்னோர் தெய்வங்கள்... இங்கெல்லாம் வேதம் ஓதாமலேயே வழிபாடு நிகழும். எனினும், குறிப்பிட்ட தகுதி இருப்பவர் மட்டுமே பூஜையில் இணைவர். அவர்கள் வம்சம் பூஜை செய்யும் பரம்பரையாக மாறிவிடும். யாவரும் பூஜிக்கலாம் என்ற நிலை இருக்காது. உள் மனம் பூஜைக்கு ஒரு தகுதியை எதிர்பார்க்கும். வேதத்தின் வாசனை இல்லாத பாமரர்கள், தாங்களாகவே வழிபாட்டு முறையை நிர்ணயிப்பர். பயம் மற்றும் இடையூறுகளை விலக்கவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும்,

மகிழ்ச்சியை எட்டவும் அந்த வழிபாடு பயன்படும். உலகவியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கம் அதில் பொதிந்து இருக்கும்.

வழிபாடு இருக்கும். ஆனால், மனத்தெளிவு இருக்காது. அது, உலக க்ஷேமத்துக்காக ஏற்பட்ட வழிபாடாக மாறாது. ஒருசாராரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவோடு நின்றுவிடும். கிராமத்துக்கு கிராமம் ஆராதனையில் மாறுபாடு, தெய்வத்துக்கு தெய்வம் பாகுபாடுகள் ஏற்கப்படும். வேதம் ஓதாமல் வழிபடலாம் என்று அத்தனை பேரையும் ஈடுபடுத்தி னால், மனத்தளவில் உயர இடமில்லாமல் போகும்.

ஒட்டுமொத்த குடிமக்களின் மனத்தை உயர்த்தும் நோக்கிலேயே அன்றைய அரச பரம்பரை கோயில் வழிபாட்டிற்கு ஊக்கமளித்தது. ஒலி வழியாகவே இறைவனை அழைக்க இயலும். அவரை சிலையில் இருத்த இயலும். அதற்கு வேத மந்திரங்கள் உதவும். வேதம் ஓதும்போது அந்த ஒலியைக் கேட்டு, சிலையில் உறைந்த பரம்பொருள் விழிப்பு உணர்வை எட்டி, நமது பணிவிடையை ஏற்கத் தயாராகிவிடுவார். நமக்கும் அருள்புரிவார். நாம் உச்சரிக்கும் எழுத்துக்கள் தேவனைத் தட்டி எழுப்பாது. வேத ஒலியானது அவரது வடிவானதால், அவரை மகிழச் செய்யும். மஞ்சளைப் பிடித்துவைத்து, 'கணாணாம்த்வா’ என்ற வேத ஒலியை எழுப்பினால், ஒலியில் ஒன்றிய முழுமுதற் கடவுள் மஞ்சளில் ஒன்றி, வழிபாட்டை ஏற்று அருள்வார். வழிபாடு சிலைக்கு அல்ல; அதில் ஒன்றியுள்ள இறைவனுக்கே! வேத ஒலியில் இருப்பவனை, ஒலி எழுப்பி வரவழைத்து சிலையில் அமர்ந்தருள வேண்டுகிறோம்.

பொது அமைதிக்கான கோயில்களில், வழிபாட்டுக்கு வேதம் ஓதுவது கட்டாயம். அருவமான பரம்பொருளுக்குப் பணிவிடை செய்ய, பாங்காக ஓர் உருவத்தில் அவரைக் குடியிருத்துகிறோம். கும்பத்தில் இறைவனை மந்திரம் வாயிலாகக் குடியிருத்தி, பூஜை- புனஸ்காரங்களால் மகிழவைத்து, அந்த நீரை கோபுரத்திலும் கருவறையில் உள்ள உருவத்திலும் சேர்க்கும்போது... வேத ஒலி வாயிலாக ஊடுருவியவனை, அதே வேதத்தால்தான் அழைக்க வேண்டும். கோயில்களில் பூஜிக்க முற்படுபவர் வேதம் ஓதிச் செய்தால் மட்டுமே பலன் உண்டு.

No comments:

Post a Comment