Wednesday, February 19, 2014

பஞ்ச பூதங்களின் நிறமும், அவற்றின் விளைவும்....

பஞ்ச பூதங்களின் நிறமும், அவற்றின் விளைவும்....

நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்கிற ஐந்து அம்சங்களின் கலவையாகவே இந்த பூமியும், அதில் வசிக்கும் உயிர்களும் இருக்கின்றன என்றும், ஒரு பொருளில் அமைந்திருக்கும் இந்த பஞ்சபூத விகிதங்களை மாற்றுவதன் மூலம் தமக்கு தேவையான பண்புகளை உடைய புதிய பொருளினை உருவாக்கிட முடியும் என்கிற சித்தர் பெருமக்களின் தெளிவினை முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த பஞ்சபூத அம்சங்களை குறிக்கும் மூலகங்களையும் அகத்தியர் எவ்வாறு வரையறுத்துக் கூறியிருக்கிறார் ...என்ற தகவலையும் கடந்த பதிவில் பார்த்தோம்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை இன்று பார்ப்போம்.
பஞ்ச பூதங்கள் என்னும் இந்த ஐந்து அம்சங்களுக்கான மூலகங்களை வரையறுத்துக் கூறிய அகத்தியர், அவற்றின் நிறம் குறித்தும் வரையறுத்துக் கூறியிருக்கிறார்.

ஆமென்ற பஞ்சபூதக் குறிப்பைச் சொன்னோம்
அறையுறோ மதினுடைய நிறந்தான்கேளு
போமென்ற பிரிதிவியின்றன நிறந்தான்கேளு
பொன்னிறம்போல் தானிருக்கும் தங்கவர்ணம்
பாமென்ற வப்பினிட நிறந்தான்கேளு
பளிங்குநிறம் போலிருக்கும் பஞ்சவர்ணம்
மானென்ற வக்கினியின் நிறந்தானப்பா
மகத்தான செம்புநிற வர்ணங்காணே
காணப்பா வாயுவதின் நிறந்தான்கேளு
காளகண்டமாக ரசப்புகை மேகந்தானே.

நிலம் அல்லது மண்ணை முன்னிலைப் படுத்தும் மூலகங்கள் தங்க வர்ணமாகவும், நீரை முன்னிலைப் படுத்தும் மூலகங்கள் பளிங்கு போன்ற பஞ்ச வர்ணமாகவும், நெருப்பினை முன்னிலைப் படுத்தும் மூலகங்கள் செப்பு நிறமாகவும், காற்றை முன்னிலைப் படுத்தும் மூலகங்கள் ரசபுகை போல மேகவர்ணமாகவும் இருக்குமாம்.ஆகாசத்தை முன்னிலைப் படுத்தும் மூலகங்களுக்கு நிறம் குறிக்க முடியாது என்கிறார் அகத்தியர்.
இனி இந்த மூலகங்கள் ஒவ்வொன்றையும் மற்றவற்றோடு இணைப்பதால் என்னவாகும் என்பதைப் பற்றிய அகத்தியரின் தெளிவினை பார்ப்போம்.
பாரப்பா பிருதிவிதா னப்பைக்கொல்லும்
பாங்கான அப்பதுதான் தேய்வைக்கொல்லும்
நேரப்பா தேய்வுந்தான் வாய்வைக்கொல்லும்
நிலையான வாய்வதுதா னாகாசத்தில்
வீரப்பா கொண்டதிலே மடிந்துபோச்சு
வேதாந்த பஞ்சகர்த்தாள் கூத்திதாச்சு
சாரப்பா தன்னறிவாற் சார்ந்துகொண்டு
சகலகரு வேதைமுகஞ் சார்ந்துபாரே.

மண்ணை முன்னிலைப் படுத்தும் பொருட்களுடன் நீரை முன்னிலைப் படுத்தும் பொருட்களை இணைத்தால் மண் செயலற்றுப் போய்விடுமாம். அதே போல நெருப்பை முன்னிலைப்படுத்தும் பொருட்களுடன் காற்றை முன்னிலைப்படுத்தும் பொருட்களை இணைத்தால் காற்றை செயலாற்ற முடியாது செய்துவிடுமாம்.காற்றை முன்னிலைப்படுத்தும் பொருட்களுடன் ஆகாயத்தை முன்னிலைப்படுத்தும் பொருட்களை இணைத்தால் ஆகாயத்தை செயலாற்ற முடியாது செய்துவிடுமாம் என்கிறார்.

இந்த தகவல்கள் எல்லாம் இந்த அறிவியலின் அடிப்படை ஆதாரக் கூறுகளே, இவற்றை நன்கு உணர்ந்து தெளிவதன் மூலமே மருந்து தயாரிப்பு மற்றும் இரச வாதத்தின் அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்ந்திட முடியும் என்கிறார் அகத்தியர்.நமது முன்னோர்களின் அறிவியல் திறம் எந்த அளவிற்கு விஸ்தாரமாகவும், வினைத் திட்பம் மிக்கதாகவும் இருந்திருக்கிறது என்பதை அறிமுகம் செய்வதே இந்த பதிவுகளின் நோக்கம்.

இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள எல்லாத் தகவல்களும் அகத்தியர் பரிபூரணம் என்னும் நூலில் இருந்தே சேகரிக்கப் பட்டவை. ஆர்வம் உள்ளவர்கள் இத்துறையில் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
Mehr anzeigen

No comments:

Post a Comment