Wednesday, March 12, 2014

வேதம் அன்ன தானம், உணவு உற்பத்தியை ஒரு அறமாக வலியுறுத்துகிறது

அன்ன தானம்
வேதம் ஞானத்தை மட்டுமல்ல அறத்தையும் முன்வைக்கிறது. வேதம் முன்வைக்கும் சமூக அறம் மானுடம் அனைத்துக்குமே முக்கியமானது. அது என்ன என்பதையும் அந்த சமூக அறம் இந்திய பண்பாட்டில் எப்படி மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு அதனால் சமுதாயத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் காணலாம்.
வேதம் உணவை ஒரு முக்கிய அம்சமாக முன்வைக்கிறது. உணவு உற்பத்தியை ஒரு அறமாக வலியுறுத்துகிறது. ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் அமைந்துள்ள இப்பாடல்கள் பிக்ஷு சூக்தம் எனப்படும். இவையே பின்னர் பௌராணிக மதங்களாலும், பௌத்த சமண இலக்கியங்களாலும், வளர்த்தெடுக்கப்பட்டு இந்திய உணவு உற்பத்தி பண்பாட்டின் ஒரு இன்றியமையாத அச்சாகவே மாறிவிட்டன எனலாம். அவற்றுள் சில பாடல்களை ((ரிக் 10.117: 1-.6) காணலாம்
தெய்வங்கள் பசியை மரணத்துக்கான ஒரு காரணமாக மனிதர்களுக்கு வழங்கவில்லை. ஏனெனில் மிக நன்றாக உணவு உண்போரும் மரணமடையவே செய்கிறார்கள். அனைவருடனும் பகிர்ந்து கொள்பவனின் செல்வம் என்றும் குறையாது. பகிர்ந்து கொள்ளாதவனோ ஆறுதலற்ற நிலையை அடைகிறான்.
உணவை வைத்துக் கொண்டு கல் போன்ற இதயம் கொண்டவன், தேவையுடையவர்கள் முன்னால் அந்த உணவை பகிர்ந்து கொள்ளாமல் அனுபவித்து உண்பவன், அவன் தன் துக்கத்தில் ஆறுதல் சொல்ல எவருமின்றி தவிக்கப் போகிறான்.
உண்மையான கொடைத்தன்மை கொண்டவன் உணவுத்தேவை கொண்டோரை தேடிச் சென்று தன் உணவை பகிர்ந்து கொள்கிறான். அவனுக்கு கிடைக்கும் பரிசுகள் பல. அவன் எதிரிகளும் அவனுக்கு நண்பர்கள் ஆகிவிடுவார்கள்.
எந்த இல்லறத்தான் தன்னை அண்டியுள்ளோர் தன் சுற்றத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தன் உணவை பகிர்ந்து கொள்ளவில்லையோ அத்தகையவனது இல்லத்தை துறந்துவிட வேண்டும். உற்றோராலும் நண்பர்களாலும் துறக்கப்பட்ட அந்த இடம் இல்லமே அல்ல.
செல்வந்தர்கள் ஏழைகளுக்கு தங்கள் செல்வத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். செல்வம் ஈட்ட பிரகாசமான பாதைகளில் செல்ல வேண்டும். ஏனெனில் செல்வம் நிலையற்றது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செல்வது.
இந்த சூக்தத்தின் உச்சமாக அடுத்த பாடலை சொல்லலாம். வேதகவி அற ஆவேசத்துடனேயே ஒரு பண்பாட்டு பிரகடனத்தை இங்கு செய்கிறார்:
அன்னத்தைத் தானம் செய்யாதவன் அன்னத்தை அடைவது வீணே. அங்கீரஸ ரிஷியாகிய நான் கூறும் இது சத்தியம். அன்னைத்தை பகிர்ந்து உண்ணாதவன் அடையும் அன்னம் வீணானது மட்டுமல்ல அது அவனுக்கு மரணத்தைப் போன்றதே. அந்த அன்னத்திலிருந்து அவன் தேவர்களுக்கு அர்ப்பணம் செய்வதும் இல்லை. அல்லது தன் இல்லத்தின் வாயிலுக்கு வருகை தரும் அதிதிகள் மற்றும் நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து அளிப்பதும் இல்லை. இவ்வாறாக தான் மட்டுமே அன்னத்தை உண்ணும் அஞ்ஞானி நிச்சயமாக பாவத்தையே உண்ணுகிறான்.
பின்னர் தைத்திரீய பிராமணத்தில் உணவே ஒரு தேவதையாக உருவகிக்கப்படுகிறது. அன்ன தேவதையான அவள் சொல்கிறாள்:
யார் என்னை தானம் செய்கிறார்களோ நிச்சயமாக அவர்களே என்னை அடைவார்கள். யார் என்னை மற்றவர்களுக்கு அளிக்காது தானே நுகர்கிறார்களோ அவர்களை நான் நாசம் செய்துவிடுவேன். …யாருக்கு அன்ன தானமும் அன்ன நுகர்வும் ஒரே பொருளாக விளங்குகிறதோ அவர்களை நான் பேணிப் போற்றுகிறேன். ..பகிர்ந்துண்ணாதவரை புறக்கணித்து பகிர்ந்துண்ணுவோரை செழிப்படைய செய்யும் என்னுடைய இந்த நியமத்திலிருந்து அன்னதேவதையாகிய என்னை எந்த மனிதனால் அசைக்க முடியும்?
தைத்திரீய உபநிடதம் வேதத்தின் இந்த கோட்பாட்டை மேலும் விரிக்கிறது:
உணவைப் பழிக்கக் கூடாது. இது உங்கள் கடமை (விரதம்). பிராணனே உணவு. உணவை உண்பது உடம்பு…உணவை வெறுக்கக் கூடாது. இது உங்கள் கடமை(விரதம்). தண்ணீரே உணவு. உணவை உண்பது நெருப்பு….உணவை ஏராளமாக உற்பத்தி செய்யுங்கள். இது உங்கள் கடமை (விரதம்) பூமியே உணவு. உணவை உண்பது வெளி….உணவைத் தேடி வருகின்ற யாரையும் திருப்பி அனுப்பக் கூடாது. அது உங்கள் கடமை. எனவே பலவழிகளில் உணவை ஏராளமாக உற்பத்தி செய்ய வேண்டும். யார் எப்போது வந்தாலும் உங்களுக்கு உணவு இருக்கிறது என்று சொல்லுமளவிற்கு உணவு தாராளமாக உணவு இருக்க வேண்டும். உணவை சிறந்த முறையில் அளிப்பவனுக்கு உணவு சிறந்த முறையில் கிடைக்கிறது. மிகச்சாதாரணமாக அளிப்பவனுக்கு சாதாரணமாக கிடைக்கிறது. உணவின் முக்கியத்துவத்தையும் உணவு தானத்தால் வரும் பலனையும் அறிந்து அதை செய்பவன் அந்த பலனைப் பெறுகிறான்.
இந்தியாவின் தேசிய இதிகாசங்களான ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் அன்ன தானம் முக்கியமானதாக காட்டப்படுகிறது. எங்கெல்லாம் தர்மர் அறிவுரைகளை கேட்கிறாரோ அங்கெல்லாம் அன்னத்தின் முக்கியத்துவம் பேசப்படுகிறது. உதாரணமாக வனவாசத்தின் போது ரிஷி தௌம்யர் தர்மருக்கு சொல்கிறார்:
அனைத்து ஜீவராசிகளின் உயிரையும் தாங்கும் உணவானது சூரியனின் வடிவமாக உள்ளது. அந்த உணவு சூரியனிலேயே உற்பத்தி ஆகிறது.
பீஷ்மர் அம்புப்படுக்கையிலிருந்து பல அறிவுரைகளை தர்மருக்கு வழங்குகிறார். அஸ்வமேத யக்ஞத்திற்கு பிறகு தர்மர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பீஷ்மரின் நெடிய அறிவுரையின் சாரத்தை அளிக்குமாறு வேண்டுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் அதனை 15 உபதேசங்களாக சுருக்கித் தருகிறார். அதன் முதல் உபதேசமே உணவைக் குறித்ததே :
இவ்வுலகம் முழுவதும் அன்னத்திலிருந்தே உருவாகிறது, இதனை நாம் நம்மைச் சுற்றி காண்கிறோம். இதில் எவ்வித ஐயமும் இல்லை.
இறுதி உபதேசம் இவ்வாறு முடிகிறது:
உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ஆவர். அனைத்தையும் அளித்தவர் ஆவர். எனவே இவ்வுலகிலும் மறுமையிலும் நன்மையை விரும்புவோர் உணவை அளிப்பார்களாக.
இதே வேத வேர் கொண்ட பாரத பண்பாட்டின் பிரகடனம்

No comments:

Post a Comment