Friday, March 21, 2014

பக்திக்கு அகிம்சை என்னும் தர்மமே ஆதாரம்:-


இந்து சனாதன தர்மம் - பக்திக்கு அகிம்சை என்னும் தர்மமே ஆதாரம்:-
இறைவனின் ஆணையான தர்மங்களை முழுமனதாக ஏற்று, அவற்றை பின்பற்றுவதாகவும் உறுதி பூண்டு, பின்னர் இறைவனிடம் அன்பு செலுத்தும் முறையே 'பக்தி' என அழைக்கப் பெறும். தர்மங்களை முழுவதுமாக புறக்கணித்து விட்டு இறைவனிடம் கொள்ளும் அன்பு 'பக்தி' ஆகாது என்ற புரிதல் மிகவும் அவசியம் ஆகிறது.
மணிக்கணக்கில் கிருஷ்ண நாம ஜெபம் செய்ய விழையும் மனம், கண்ணனின் வாக்கான கீதையை பின்பற்ற மறுக்கிறது. ஸ்ரீராமாயண நிகழ்வுகளை ரசித்து மகிழும் மனம், ஸ்ரீரா...மாயணம் உணர்த்தும் தர்மங்களை உணர மறுக்கிறது. சீரடி பாபாவின் பஜனைகளுக்கு பழகிய மனம் - அப்பரம ஞானியின் போதனைகளை தெரிந்து கொள்ள ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை.
எண்ணற்ற மகான்களை வணங்கத் தயங்காத மனம் - அந்த அருளாளர்களின் தெய்வ வாக்கில் இருந்து உதிக்கும் தர்மங்களை கடைபிடிக்க மறுக்கிறது. ஞானிகளின் படங்களை விட அவர்களின் பாடங்கள் மிக முக்கியம். படங்களால் முக்தி பெற முடியாது - அப்பெருமக்களின் பாடங்களான தர்மங்களே முக்தி நெறிக்கு நம்மை இட்டுச் செல்ல வல்லது.
தர்மமே பக்திக்கு ஆதாரம். தர்மத்தை பின்பற்றாத நிலையில் பக்தி செயல் இழக்கிறது. எது தர்மம் ? அகிம்சையே உயர்ந்த தர்மம். அகிம்சையே உன்னதமான கடமை. 'மற்றொரு உயிருக்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதே' ஞானப் பாதையில் பயணிக்க விரும்பும் ஒவ்வொருவரின் லட்சியமாக இருத்தல் வேண்டும்.
மனு தர்ம சாத்திரம் (அத்தியாயம் 5 - சாத்திரம் 51 & 52):-
ஒரு உயிரினத்தை கொல்ல அனுமதிப்பவர் - கொல்பவர் - கூறுகளாக வெட்டுபவர் - மாமிசமாக்கி விற்பவர் - வாங்குபவர் - சமைத்து உணவாக்குபவர் - பரிமாறுபவர் - உட்கொள்பவர் - இவர்கள் அனைவருமே அந்த உயிரைக் கொன்றவர்களாகவே கருதப் படுவர். தன் உடம்பை வளர்க்கும் பொருட்டு பிற உயிர்களின் மாமிசத்தை உண்பதை விட பெரிய பாவச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

No comments:

Post a Comment