Sunday, March 30, 2014

யார்.. யோகி..!!

யார்.. யோகி..!!

சமீப நாட்களில் யோகிகள் என்ற பெயரில் வந்து இம்சிப்பவர்களின் எண்ணிக்கை கொசுத் தொல்லையை விடவும் மோசமானதாகிவிட்டது. மேலே பார்த்தேன் யோகியாய்ட்டேன். மொட்டை மாடில நின்னு கீழே பார்த்தேன், உணர்ந்தேன் உடனே யோகி ஆய்ட்டேன்ன்னு ஆளாளுக்...கு ஒரு கதையை சொல்லிக் கொண்டு யோகியாகி விடுகிறார்கள். யோகத்தின் அடிப்படை கூட தெரியாத இந்த அசடர்களையும் நம்பிக் கொண்டு அவர்களுக்கு வால்பிடிக்க ஒரு கூட்டம் இருப்பதினால்தான் இவர்கள் வெள்ளையும் சொள்ளையுமாய் குடுமியும், குங்குமமும் வைத்துக் கொண்டு இரண்டு நாளில் ஞானம் தருவதாய் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
யோகம் என்பது எட்டாம் கிளாஸ் பாஸ். பத்தாங்கிளாஸ் பெயில் மேட்டர் இல்லை. வாழ்வியல் அனுபவம். ஒவ்வொரு நிலையாக உணர்ந்து தெளிந்து கடந்து போகிற நிலை. இப்படிக் கடந்து போகிற எவனும் தன்னைச் சுற்றிய ஒளி வட்டத்துக்கோ, காசு பார்க்கும் கார்ப்பரேட் தனத்துக்கோ விலை போவதில்லை. அப்படி விலைப் போனால் அவன் பெயர் வியாபாரியே தவிர யோகி இல்லை. எவன் யோகி என்பதை எத்தனையோ பெரியவர்கள் வரையறுத்து சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள். அதையெல்லாம் பொருள் விளங்கி படிக்கிறவர்கள் தெரிந்து கொள்வர். பொருள் விளங்காமல் யானையை பூனை என பொருள் எழுதுகிறவர்கள் உண்மையான யோகத்தின் பொருள் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
யோக நிலைங்கிறது தன்னை அறிந்த பூரண நிலை. தொடரத் தொடர தொடர்ந்து கொண்டேயிருக்கும் நிலை. தன்னை அறிந்த யோகிகள் இந்த உலகத்தையும் நன்றாக அறிந்தவர் ஆவர். அவர்கள் குன்றின் மேல் வைத்த விளக்கு போன்று அனைவருக்கும் ஒளியாய் இருந்து வழிநடத்துவர். அவர்கள் வழி நடந்தால் உலகம் உய்யும்.
தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்
தன்வழி யாகத் தழைத்திடும் வையகம்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்
தன்வழித் தன்ன ருளாகி நின்றானே.
சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில்
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையைச்
சந்தியிலே கண்டு தான் ஆம் சகமுகத்து
உந்தி சமாதி உடைஒளி யோகியே.
- திருமந்திரம்
சந்திரன், கதிரவன், ஆன்மா என்னும் மூன்றும் விளங்கும் நிமிர்ந்த ஆயிர இதழ் கமலத்தில் சந்திர கலை விளங்கும் தன்மையை உலகில் உயிருடன் வாழும் போதே சீவ ஒளியைச் சிவ ஒளியுடன் பொருந்திச் சமாதி நிலை பெற்ற யோகியானவனே சுழுமுனை உச்சியில் உணர்ந்து உணர்ந்து சிவம் என்ற தன்மையை அடைவான்.
அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்
வணங்குற்ற கல்வி மாஞானம் மிகுத்தல்
சிணங்குற்ற வாயர் சித்திதூரம் கேட்டல்
நுணங்கற்றி ரோதல் கால் வேகத்து நுந்தலே.
ஆசை அழிதல், சுற்றத்தவரிடமிருந்து விலகி நிற்றல், பணிவைத் தரும் சிவஞானம், பதிஞானம் மிகுதல், சுருங்குதலையுடைய வாயினர் ஆதல், பேச்சு அடங்குதல், சித்தி பெறுதல், தொலைவில் நடப்பவை கேட்டல், நுண்மையாக மறைந்திருத்தல், காற்றை மேலே செலுத்துதல்.
மரணஞ்சரை விடல் வண்பர காயம்
இரணஞ்சேர் பூமி இறந்தோர்க்களித்தல்
அரணன் திருவுரு வாதன் மூவேழாங்
கரனுரு கேள்விக் கணக்கறிந் தோனே.
- திருமந்திரம்
இறப்பு, மூப்பு ஆகியவற்றைக் கடத்தல், அயல் உடலில் புகும் ஆற்றலைப் பெறுதல். பொன்னுலகத்தை இறந்தவர்களுக்கு அளிக்கும் ஆற்றல் பெறுதல், பாதுகாப்பான பிரணவ உடலைப் பெறுதல். மூண்டு எழுகின்ற சிவ சூரியனைப் பற்றிய கேள்வி ஞானம் அடைதல் ஆகிய இத்தனையும் யோகி அறிவார்கள் என்று கூறுகிறார் திருமூலர்.
யோகி என்ற வார்த்தையின் மகத்துவம் தெரியாமல் எவரும் தன்னை யோகி என அழைத்துக் கொள்ளும் இழி நிலை இன்று இருக்கிறது. அசல் எது போலி எது என்று தெரியாமல் குழம்பும் நிலையை இந்த போலிகள் உருவாக்கி விட்டனர். அவர்களை சரியாக இனம் கண்டு தவிர்ப்பதே நலம்.

No comments:

Post a Comment