Monday, March 31, 2014

ஆணவத்தை கைவிட்டு, அடக்கமாக இருந்து, இறைவனின் அருளைப் பெறுவோம்

உயிர்களின் பரிணாம வளர்ச்சி தான் மனிதனின் தோற்றம். இம்மனித இனத்திற்கு, மேலும் வளர்ச்சி என்பது, மிகவும் அவசியமானது; அதை மறுக்க முடியாது. ஆனால், பிரச்னை எங்கு வருகிறது என்றால், நாம் வளர்ச்சி அடையும் போதே, கூடவே, ஆணவமும், அடுத்தவர்களை மதிக்காத தன்மையும் வந்து விடுகிறது.
கடுமையான உழைப்பின் மூலம் பெறும் வளர்ச்சி, கட்டுப்படுத்தப்பட்ட ஆணவத்தை கொடுக்கிறது என்றால், உழைக்காமல் கிடைக்கும் செல்வம், பதவி, உச்சகட்ட ஆணவத்தை கூடவே கூட்டிக் கொண்டு வந்து விடுகிறது. இத்தகைய, ‘தான்’ எனும் ஆணவத்த...ால், ராவணன் அவதிப்பட்ட கதை இது.
ராவணன் பல வரங்கள் பெற்றவன். ஆற்றல், அறிவு, வீரம், இசை ஞானம் என, அனைத்திலும் சிறந்து விளங்கியவன். தன் ஆற்றலின் காரணமாக, இறைவன் படைப்பினில், என்னை விட உயர்ந்தவர்கள் கிடையாது என்ற ஆணவம், அவனுள் ஏற்பட்டு விட்டது. ஒருசமயம், ராவணன், தன்னுடைய புஷ்பக விமானத்தில், ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்தான். வழியில், கைலாய மலை குறுக்கிட்டது. அதைத் தாண்டி அவனால், செல்ல முடியவில்லை.
குனிந்து கீழே பார்த்தான். நந்திதேவன் அமர்ந்திருந்தார். அவர் ராவணனைப் பார்த்து, ‘அப்பா தசக்கீரிவா… உன்னால் கைலாய மலையை தாண்ட முடியாது. அதனால், சுற்றிப் போ…’என்று, அறிவுரை கூறினார்.
‘குரங்கு மூஞ்சி நந்தியே… நீ, என்ன எனக்கு புத்தி சொல்வது?’ என, இகழ்ச்சியாகப் பேசினான் ராவணன்.
கோபம் கொண்ட நந்திபகவான், ‘ஏ ராவணனே… அழகு முகம் படைத்த ஆணவமா உனக்கு… எந்த செல்வத்தின் காரணமாக, என்னை குரங்கு மூஞ்சி என்று, இழிவாகப் பேசினாயோ, அந்த உன் செல்வ செழிப்பு மிக்க நகரம், குரங்குகளாலேயே அழிக்கப்படட்டும்…’ என, சாபம் கொடுத்தார்.
அந்த வார்த்தைகளை கேட்டு, ராவணன் சீற்றம் கொண்டான். ‘இந்த மலையை, இப்போதே, இங்கிருந்து எடுத்து வீசி விடுகிறேன் பார்…’ என்று கூறி, கைலாய மலையை, தன் தோள்களால் அசைத்து தூக்க முயன்றான். அப்போது அம்மலையின் அடியில், அகப்பட்டுக் கொண்டான். வலியால் அழுது கதறிய ராவணன், வாகீச முனிவரால், அத்துயரத்தில் இருந்து காப்பாற்றப்பட்டான் என்பது தனிக்கதை.
செல்வம், பதவி, புகழ் கிடைத்து விட்டது என்று ஆணவம் கொள்ளாமல், எப்போதும் எளிமையாகவும், இனிமையாகவும், அடக்கமாக இருப்போரை, திருமகளும், கலைமகளும், மலைமகளும் ஒரு நாளும் பிரிய மாட்டார்கள் என்பது சாஸ்திரம் கூறும் தத்துவம். அதனால், எத்தகைய உயர்வான நிலைக்கு சென்றாலும், ஆணவத்தை கைவிட்டு, அடக்கமாக இருந்து, இறைவனின் அருளைப் பெறுவோம்!

No comments:

Post a Comment