Sunday, March 30, 2014

பேச வைத்த முருகப் பெருமான்

பேச வைத்த முருகப் பெருமான்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஸ்ரீகைலாசபுரம் என்ற ஊரைச் சேர்ந்த சண்முகசிகாமணிக் கவிராயர் - சிவகாம சுந்தரி என்ற தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் குமரகுருபரர். இவருக்கு 5 வயது வரை பேச்சு வரவில்லை. ஊமை...யாக இருந்தார். பேச வைப்பதற்காக அவரது பெற்றோர் எடுத்த முயற்சிகளுக்கு எந்த பலனும் இல்லாமல் இருந்தது.

ஒரு நாள் சண்முகசிகாமணிக் கவிராயரும், அவரது மனைவி சிவகாம சுந்தரியும் குமரகுருபரரை அழைத்துக் கொண்டு கடல் அலைகள் தாலாட்டும் திருச்செந்தூருக்கு முருகப்பெருமானை தரிசிக்க சென்றனர். பேசாத குழந்தைக்கு பேச்சு வர வேண்டும் என்று வேண்டி 48 நாட்கள் விரதம் இருந்தனர். அப்படியும் குமரகுருபரருக்கு பேச்சு வரவில்லை. நொந்து போனார்கள் அவர்கள்.

இனி நமது பிள்ளைக்குப் பேச்சு வராது என்று எண்ணிய அவர்கள், மகனுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்வது என்று முடிவெடுத்தனர். தற்கொலை செய்யும் நோக்கத்துடன் அவர்கள் புறப்பட்டபோது அர்ச்சகர் ஒருவர் அவர்களை நோக்கி வந்தார். அவர்கள் அப்படியே நின்றனர்.

அர்ச்சகர் குமரகுருபரரிடம் ஒரு பூவை காட்டி, இது என்ன? என்று கேட்டார். குமரகுருபரரின் பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை. “நமது மகனுக்குத்தான் பேச்சு வராதே... இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று எண்ணிய போது, அந்த அதிசயம் நடந்தது.

அர்ச்சகர் கேட்ட கேள்விக்கு “பூ” என்று பதில் சொன்னார் சிறுவன் குமரகுருபரர்.

அவரது பெற்றோருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஊமையாக இருந்த மகன் பேசியதை கண்டு சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டனர்.

அதன் பிறகு முருகா... முருகா... என்றார். படிப்படியாக அவரிடம் இருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன. எல்லாப் பிள்ளைகளையும் போல் நன்றாக பேசினார். அதன்பிறகு தான், அவர் எப்படி பேசினார் என்பதற்கான காரணம் புரிந்தது. ஒரு நாள் குமரகுருபரர் கனவில் தோன்றிய முருகப் பெருமான், தனது வேலால் சிறுவன் குமரகுருபரர் நாவில் குருபரா என்று எழுதிப் படித்து காட்டிவிட்டு மறைந்த சம்பவம் தெரிய வந்தது.

முருகன் அருளால் பேசும் தன்மையை பெற்ற குமரகுருபரர், பூமேவு செங்கமல... என்று தொடங்கும், சைவ சித்தாந்த கருத்துகள் அனைத்தும் அடங்கிய கந்தர் கலிவெண்பாவை இயற்றிப் பாடினார். இவர் மதுரைக்குச் சென்று, மீனாட்சியம்மனை குழந்தையாக பாவித்து மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடினார். சிதம்பரம் சென்ற குமரகுருபரர் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் இயற்றி பாடினார். இறுதியாக காசிக்குச் சென்று தவம் செய்தார். அங்கு காசி கலம்பகம் பாடினார். குமாரசாமி என்ற மடாலயத்தையும் நிறுவினார். காசியிலேயே முக்தியும் அடைந்தார்

No comments:

Post a Comment