Monday, April 21, 2014

மனதை தாமரை போல, வைத்து கொள்ளவேண்டும்



உண்மையை சொல்வதென்றால் மனதை (சுருக்க) அடக்கக்கூடாது மனதை விரிக்க வேண்டும் குறிப்பாக தாமரை மலரை மனதோடு நம் முன்னோர்கள் ஒப்பிட்டு கூறுவார்கள் காரணம் தாமரை மொட்டாக இருக்கும் போது அழகாக இருக்காது அதை தாமரை விரிந்து(மலர்ந்து )இருக்கும்போது அழகாகவும் அருமையாகவும் இருக்கும்,
இதை போலதான் நம் மனதை விரிந்து (மலர்ந்து ) வைத்து கொள்ளவேண்டும் இந்த தத்துவத்தை நாம் கோவில் வழிபாடுகளில் பார்க்கலாம் கோவில் வாசலில் தாமரை மொட்டை வாங்கி கடவுளுக்கு அர்ப்பணம் பண்ணும் போது கோவிலுக்குள் உள்ள பூசாரி தாமரையை விரித்து இறைவனின் பாதத்தில் வைத்து பூசை செய்வார்
இதில் இருந்து நாம் உணர்ந்து கொள்வது மனதை மலர்ந்து (விரித்து) வைத்து கொள்ள இறைவனை உணர முடியும்.
நீங்கள் சிறகுகளோடு பிறந்திருக்கிறீர்கள். ஆனால் அது தெரியாமல் தவழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் பறக்கப் பிறந்தவர்கள். உங்கள் சிறகுகளை உணருங்கள், பறந்து செல்லுங்கள் – என்கிறார் சூஃபி கவிஞர் ஜலாலுத்தீன் ரூமி.
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்! உண்மைக்குத்தான் எவ்வளவு அழகு! ஆமாம், வெற்றி வானில் பறக்கவேண்டுமென்றால் மன ஒருமை தேவை. அது இல்லாவிட்டால் அதை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதற்கு நாம் பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும்.
தொடர்ந்த பயிற்சியானது ஒரு பழக்கத்தை ஏற்படுத்திவிடும். நல்லதானாலும் சரி, கெட்டதானாலும் சரி. தினமும் ஒரு க்வாட்டர் அடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் எவ்வளவு படித்தவராக இருந்தாலும், குடி குடியைக் கெடுக்கும் என்ற வாசகத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டே உங்களால் குடிக்க முடியும்! அதேபோல, ஒரு நல்ல காரியத்தை தினமும் செய்துவந்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஒரு விஷயம் பழக்கமாகிவிட்டால் அதனால் வரும் நன்மைகளும் அல்லது தீமைகளும் தாமாகவே வர ஆரம்பிக்கும்.
வெற்றிபெற்ற அனைவரிடமும் இரண்டு உள்ளது. ஒன்று முயற்சி, இரண்டாவது பயிற்சி. இவைகள் மட்டும்தான் பயிற்சிகள் என்பதல்ல. அனேக பயிற்சிகள் உள்ளன. நிலவு இருக்கும் திசையை மட்டுமே நான் சுட்டுகிறேன். ஆயிரம் மைல்களுக்கான பயணம் முதல் அடியில் தொடங்குகிறது என்றார் லாசூ.
பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிபந்தனை உண்டு. அதிகம் உணர்ச்சி வசப்படாதவராக நீங்கள் இருக்கவேண்டும். இல்லையெனில் பயிற்சி செய்யமுடியாமல் போய்விடும். பத்துபேரை எடுத்துக்கொண்டால் பத்துபேருக்குமே இந்தப்பிரச்சனை இருக்கும். மனிதர்கள் பெரும்பாலான நேரம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களே. எவ்வளவு படித்தவராக இருந்தாலும் சரி. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.
நீங்கள் நாடறிந்த அறிஞர், ஆன்மிகவாதி என்று வைத்துக்கொள்வோம். சிங்காரச் சென்னையில் ஒரு ஆட்டோவில் போகிறீர்கள். ஆட்டோ ஓட்டுநர் ஒரு வினாடிக்கு மூன்று முறை வலது பக்கமாகக் குனிந்து, ஒவ்வொரு முறையும் ஒருகிலோ அளவுள்ள சமாச்சாரங்களை தன் வாயிலிருந்து துப்பிக்கொண்டே இருக்கிறார் (ஆமாமா என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது). நீங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் துப்புவதை நிறுத்தவேயில்லை. அப்போது எதிர்பாராமல், அல்லது எதிர்பார்த்த மாதிரியே, அவரது வாய்க்குள்ளிருந்து வெளியான திரவம் சட்டென்று காற்றின் உதவியுடன் உங்கள் வெள்ளை வேஷ்டியில் அல்லது சட்டையில் வந்து ’பச்சக்’ என்று அடைக்கலம் கொள்கிறது!
கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று ஆன்மிகக்கூட்டமொன்றில் பேசச்சென்றுகொண்டிருக்கும் உங்களுக்கு அப்போது எப்படி இருக்கும்? சென்னைத் தமிழுக்கு நீங்களும் இறங்கி வெறும் கைகளாலேயே அவன் மென்னியை நெரித்துக் கொன்றுபோட்டுவிடவேண்டும் என்று தோன்றுமல்லவா? அப்போது உங்களால் கீதையின் ஸ்லோகத்தையோ குர்’ஆனின் ஆயத்தையோ,பைபிளின் வாசகத்தை நினைவுக்குக்கொண்டுவர முடியுமா? நிச்சயமாக முடியாது.
நீங்கள் உணர்ச்சியின் கட்டுப்பாட்டில் அப்போது இருப்பீர்கள். உணர்ச்சிக்கு அடிமையாக இருக்கும் கணங்களில் எந்த மனிதனாலும் மனதை ஒருநிலைப்படுத்த முடியாது. பயிற்சிக்குப் போகும்முன் மேற்கண்ட தளைகளிலிலிருந்து மனரீதியாக உங்களை விடுவித்துக்கொண்டு செய்வதே சரியாகும்.
மனிதனாகப் பிறந்தவர்கள் நாம் அனைவரும், அடைய வேண்டிய எல்லை சப்தரிஷி மண்டலம்தான். இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. நம் உயிர்தான், நமக்குச் சொந்தமானது. இந்த உடலுக்காக வாழாமல், நம் உயிருக்காக, நாம் வாழ்ந்தோமென்றால், நம் பூமியில் வாழ்ந்த நம் முன்னோர்களான, மெய்ஞானிகளும், மகரிஷிகளும், தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளையும், இன்னல்களையும் எப்படி நீக்கினார்களோ, அந்த இயற்கையின் வழியில், நாமும் வாழலாம்.
இன்றைய விஞ்ஞானத்தின் பேரழிவிலிருந்து, நம்மைக் காக்கலாம், நம் குடும்பத்தைக் காக்கலாம், நம் ஊரைக் காக்கலாம், நம் நாட்டைக் காக்கலாம், உலக மக்கள் அனைவரையும் காக்கலாம், நம் தாய் பூமியைக் காக்கலாம், இந்த பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்கலாம். இதுதான் மனிதனின் வீரியத்தின் உண்மை,
அகண்ட அண்டத்திலே உருவான படைப்புகளிலேயே, உயரிய படைப்பான, மனிதன் ஒருவனுக்குத் தான், இத்தகைய நிலை பெறக் கூடிய தகுதி உண்டு. இதுவெல்லாம், நம் மகரிஷிகள் கண்ட பேருண்மைகள்.

No comments:

Post a Comment