Monday, April 7, 2014

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார் ஒளவையார். ஆலயம் என்பது ஆ+லயம் எனப் பிரிக்கலாம். ஆ என்பதற்கு ஆன்மா என்று பொருள். லயம் என்பதற்கு லயமாவதற்கு அல்லது சேருவதற்குரிய இடம் என்பது பொருள். ஆகவே கடவுள் திருவடியில் ஆன்மா லயிப்பதற்குரிய இடம் எனப் பொருள் கூறலாம். ஆ என்பது ஆணவ மலத்தையும், லயம் என்பது அடங்கி இருத்தலையும் குறிக்கும். அதனால் ஆலயம் ஆணவ மலம் அடங்குவதற்குரிய இடம் எனவும் கூறுவர், இதனை கோயில் எனவும் கூறுவர் கோ-கடவுள் இல் தங்குமிடம். கோயில்-கடவுள் தங்குமிடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. ஆகவேதான் ஆலய வழிபாடு என்பது இறைவழிபாடு என்று பொருள்படும். அது பற்றியே மெய்கண்ட தேவநாயனாரும். ஆலயந்தானும் அரனெனத் தொழுமே என்றருளினார். எங்கும் நீக்கமற்ற நிறைந்துள்ள இறைவனை ஆலயங்களில் மட்டும் ஏன் வழிபட வேண்டும் எனச் சிலர் கருதுவர். இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்பதில் ஐயமில்லை. ஆனால் இறையருள் எல்லா இடங்களிலும் விளங்கித் தோன்றுவதில்லை.

பால் முழுவதும் நெய் கலந்துள்ளது. எனினும் தயிரிலிருந்தே விளங்கித் தோன்றும். பூமியின் அடியில் எங்கும் தண்ணீர் வியாபித்திருந்தாலும், நாம் அதை உபயோகப்படுத்த வேண்டுமானால் ஒரு கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு போன்றவற்றின் மூலம்தான் பயன்படுத்த முடிகிறது. இவற்றைப்போல் கடவுள் எங்கும் நிறைந்திருந்தாலும் ஆலயங்களில் சிறப்பாக நின்று அருள் செய்கின்றார். பசுவின் உடம்பெல்லாம் பால் வியாபித்திருந்தாலும் அது அகடுகளின் (மடி) வழியாகவே நமக்குக் கிடைக்கிறது. அதுபோல் இறைவன் எங்கும் வியாபித்திருந்தாலும் ஆலயங்களில் உள்ள மூர்த்திகளின் வழியாகவே அருளைச் சுருக்கிறான்.

ஆலயம் மனிதவடிவம்
கோயில்கள் நமது உடம்பின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனை சேஷத்திரம் சரீரப்பிரஸ்தாரம் என்பர். ஆலயம் மனிதர் உடம்புபோல் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது இதன் பொருள். இதனை திருமூலரின் பின்வரும் பாடல் மூலம் உணரலாம்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!

இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், (மந்திரம், பாவனை கிரியைகளால்) அவனருள் ஆலயத்தில் விளங்கித் தோன்றும். சிவஞான யோகிகளும், மாயை காரிய உருக்களும் எம்பிரான் வடிவம் ஆயவேல் அவை அருள் மயமாகும்? என்றருளினார். எனவே ஆலய வழிபாடு மிக அவசியம் என்பது உணரப்படும்.

ஆலய அமைப்பும் எல்லா இடங்களிலும் ஒரே முறையாக இருந்து வருகின்றது. பொதுவாக எல்லா சிவாலங்களிலும் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நீராட்டு மண்டபம், தம்ப மண்டபம், நிருத்த மண்டபம் முதலியனவும்; ஐந்து அல்லது மூன்று பிராகாரங்களும், கோபுரமும், யாகசாலை, நந்தி, பலிபீடம், கொடிமரம் முதலியவையும் முக்கியமாகக் காணப்படுவனவாகும். இவ்வமைப்பு உடலமைப்பை ஒட்டியது என்பர் ஆன்றோர். தேகமாகிய ஆலயத்துள்ளும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என ஆறு ஆதாரங்களும் அறியப்படும்.  இவ்வுடலில் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்று ஐந்து கோசங்கள் உள்ளன. (கோசம்-சட்டை). கோயிலிலுள்ள ஐந்து பிராகாரங்களும் இவற்றைக் குறிக்கின்றன. அன்னமய கோசம் முதலியவற்றைத் தூல சரீரம், சூக்கும சரீரம், குண சரீரம், கஞ்சுக சரீரம், காரணச் சரீரம் என அறிக.

ஆலயத்தில் தரிசிக்க வேண்டியவை ஏழு
1. சிவாலயக் கோபுரம் (இது தூலலிங்கம் எனப்படும்) 2. சிவாலயத்தின் வாயில். 3. பலிபீடம்(இது பத்ரலிங்கம் எனப்படும்)4. பிராகாரம். 5.கர்ப்பக்கிருக விமானம்(இது தூயலிங்கம் எனப்படும்) 6. அர்ச்சகர். 7. சிவலிங்கப் பெருமான்(சதாசிவ மூர்த்தி என்றும், பார்த்தலிங்கம் என்றும் கூறப்படும்).

ஆலய தரிசனம் செய்ய விரும்புவோர் நீராடி, தோய்த்துவந்த உடைகளை அணிந்து செல்லவேண்டும். ஆலயத்தை நெருங்கியதும் கால்களைக் கழுவிக் கொண்டு பின் தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தை தரிசித்து. இரண்டு கைகளையும் தலைக்குமேலே குவித்த வண்ணம் சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு உள்ளே செல்லவேண்டும். உள்ளே சென்றதும். பலிபீடத்தையும் கொடிமரத்தையும். இடபதேவரையும் வணங்கவேண்டும். பின் பலிபீடத்திற்கு இப்பால் மும்முறை விழுந்து வணங்கவேண்டும்(கிழக்கு, மேற்கு நோக்கிய சன்னிதகளாயின் வடக்கே தலைவைத்தும், தெற்கு, வடக்கு நோக்கிய சன்னிதிகளாயின் கிழக்கே தலைவைத்தும் வணங்கவேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் கால்நீட்டி வணங்கக்கூடாது) ஆண்கள் எட்டுறுப்புகளும், பெண்கள் ஐந்துறுப்புகளும் நிலத்தில் தோய வணங்கவேண்டும். (தலை, கையிரண்டு, செவி இரண்டு, மேவாய், புயங்கள் இரண்டு என்பன எட்டுறுப்புகள். தலை, கையிரண்டு, முழந்தாள் இரண்டு என்பன ஐந்துறுப்புகள்.)

பின்னர், தலையிலேனும் மார்பிலேனும் கைகளைக் குவித்துக்கொண்டு, குறைந்தது மூன்று முறை பிராகாரத்தை மெதுவாக வலம் வர வேண்டும். (கைகளைத் தொங்கவிட்டுக் கொண்டோ, கட்டிக்கொண்டோ வலம் வரக்கூடாது) மீண்டும் பலிபீடத்திற்கு இப்பால் விழுந்து வணங்கவேண்டும். (இந்த இடத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் விழுந்து வணங்குதல் குற்றமாகும்) பின்பு துவார பாலகர்களை வணங்கி உள்ளே சென்று கணநாத ராகிய திருநந்திதேவரை வணங்கி, பகவானே, உம் திருவடிகளை அடைந்து அடியேன் உள்ளே சென்று சிவபெருமானை தரிசித்துப் பயன்பெறும் பொருட்டு அனுமதி செய்தருளும் என வேண்டிக் கொண்டு உள்ளே செல்லவேண்டும்.

உள்ளே சென்றதும் விக்னேசுவரனை வணங்க வேண்டும். (இரண்டு கைகளையும் முட்டியாகப் பிடித்து நெற்றியில் மூன்றுமுறை குட்டி, வலச்செவியை இடக்கையினாலும், இடச் செவியை வலக்கையினாலும் பிடித்து மூன்று முறை தாழ்ந்து எழுவேண்டும்) பின்னர் சிவலிங்கப் பெருமான் சன்னிதியை அடைந்து வணங்கியபின்., உமாதேவியார் சன்னிதி அடைந்து வணங்கி விபூதி, குங்குமம் வாங்கித் தரித்துக் கொள்ளவேண்டும். பின்பு சபாபதி, தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திசேகரர், சுப்பிரமணியர்யும், சமயக்குரவர் நால்வரையும் தரிசனம் செய்தல் வேண்டும், பின்னர் உள்பிராகாரத்தில் வலம்வந்து, சண்டீசர் சன்னிதி அடைந்து தாளத்திரயம் செய்து சிவதரிசன பலத்தைத் தரும்படிப் பிரார்த்திக்க வேண்டும். (தாளத்திரயம் என்பது மெல்லிய ஒலி எழும்படி வலது கை விரல்கள் இடது உள்ளங்கையில் மூன்று முறை தட்டுதல். பின் வலமாக வந்து இடபதேவரை வணங்கி, அங்கிருந்தே சிவலிங்கப் பெருமானை தரிசித்து பலிபீடத்திற்கு இப்பால் மும்முறை விழுந்து வணங்கவேண்டும், பின்பு ஓரிடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து சிவமந்திரத்தை செபித்துப் பின் எழுந்து வீட்டிற்குச் செல்லவேண்டும். சிவாலயத்திற்குச் செல்வோர் தங்கள் தகுதிக்கேற்ப பழம் முதலியன கொண்டு சென்று அர்ச்சிப்பித்து விபூதி பிரசாதம் பெறவேண்டும். ஒன்றும் இயலாதவர் சன்னிதியில் கிடக்கும் குப்பை முதலியவற்றை நீக்குதல் அலகிடுதல், கோலமிடுதல் முதலிய தொண்டுகள் செய்யவேண்டும். தினந்தோறும் ஆலய தரிசனஞ்செய்ய இயலாதவர்கள் திங்கள், செவ்வாய், வெள்ளி, பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, திருவாதிரை, சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி முதலிய புண்ணிய காலங்களில் தரிசனம் செய்தல் வேண்டும்.

No comments:

Post a Comment