Saturday, May 31, 2014

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது.






குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக . நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.
குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.வீடு கட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.
இதில் நான் பதிவு செய்யப்படுகிற ஆன்மீகம் தகவல்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு தெரிந்து அவர்களும் தங்கள் வாழ்கையில் ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று நல்ல என்னத்தில் தான். நான் பதிவு செய்கிறேன்,ஆன்மிகம் என்பது கடவுளை அடையும் வழி அதை அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம்

பாலி (இந்தோனேசியா) ஹிந்துக்களின் சொர்க பூமி

பாலி (இந்தோனேசியா) ஹிந்துக்களின் சொர்க பூமி .................
உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.
பாலி ஹிந்துக்களின் சுவாரசியமான தகவல்கள் ........
1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். 2013ல் மார்ச் 12ம் தேதி இந்த மௌன தினம் வருகிறது. ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கபடுகிறது. காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.
2. பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான். பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன. புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.
3. பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான். எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது. இந்தியாவில் கூட சில கோவில்களில்தான் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்து தான் செல்ல வேண்டும்.
4. பாலியின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana என்ற கோட்பாட்டின் படி தான் அமைந்துள்ளது. அதைதான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். Parahyangan - Pawongan - Palemahan என்று பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.
5. Trikala Sandhya என்பது சூரிய நமஸ்காரம். அணைத்து பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். அதே போல மூன்று வேலையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்லவேண்டும். பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள்.
6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. முஸ்லிம் மத நாடான இந்தோனேசியாவில் அனைத்து மத கோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசே கொடுக்கிறது. ஆனால் இந்தியா மத சார்பற்ற நாடு, இருந்தாலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஹஜ் செல்ல பணத்தை வாரி இறைக்கின்றது.
7. இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.
8. உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது, பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது. பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்கு தான் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள். 9ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை ஹிந்து பெரியோர்கள் கற்றுகொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு Subak System என்று பெயர். இங்கே நீர் பாசனம் முழுவதும் கோவில் பூசாரிகளின் கட்டுபாட்டில் தான் இருக்கும். உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.
9. பாலி ஹிந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை. இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள். ராமாணயம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.ராமாணய ஓலைசுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும்.
10. அனைத்து திருவிழாகளிலும் பாலி நடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள். ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என்று இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை.

இந்துக்கள் ஏன் தலையை மொட்டை அடிக்கிறார்கள் என்பது தெரியுமா?

இந்துக்கள் ஏன் தலையை மொட்டை அடிக்கிறார்கள் என்பது தெரியுமா?
இந்து மதத்தில் எண்ணிலடங்கா சடங்குகள் நிலவுகிறது. மொட்டை அடித்தல், உபநயனம், திருமணம் போன்றவைகள் சில உதாரணங்கள். பிறந்தது முதல் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு இந்துக்களும் இவையனைத்தையும் பின்பற்ற வேண்டியிருக்கும். இந்த சடங்குகளும், பண்பாடுகளும் இந்து மதத்தில் முக்கிய பங்கினை வகிக்கிறது. மோட்சத்தை அடைய (மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்க) இதனை இந்துக்கள் பயபக்தியுடன் பின்பற்றுவார்கள். தலையை மொட்டையடித்து கொள்வது என்பது பல இந்துக்கள் பின்பற்றி வரும் ஒரு முக்கியமான சடங்காகும். திருப்பதி, பழனி மற்றும் வாரணாசி போன்ற புனித ஸ்தலங்களில் தலையை மொட்டையடித்து, முடியை கடவுளுக்கு காணிக்கையாக கொடுப்பது கட்டாயமான ஒரு பழக்கமாக உள்ளது.
பிறப்பு மற்றும் மறுபிறவி மீது இந்துக்களுக்கு நம்பிக்கை உண்டு. கடந்த ஜென்மத்தில் இருந்த பந்தங்களின் தொடர்பை துண்டிப்பதற்காகவே குழந்தைகளுக்கு முதல் மொட்டை போடப்படுகிறது. அப்படி தலையை மொட்டை அடிப்பதால் அக்குழந்தை இந்த பிறப்பில் புதிய வாழ்க்கையை தொடங்குகிறது. அதனால் இது ஒரு முக்கியமான சடங்காக பார்க்கப்படுகிறது.
தலைமுடி என்பது பெருமை மற்றும் ஆணவத்தை குறிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதனால் தலைமுடியை மொட்டை அடித்து கொள்வதன் மூலம், நாம் கடவுளிடம் சரணாகதி அடைகிறோம். தலைமுடியை மொட்டை அடிப்பதன் மூலம் நம் தலைக்கனத்தை இழந்து, கடவுளுக்கு அருகில் வருகிறோம். இது பணிவை எடுத்துக்காட்டும் ஒரு செயலாகும். மேலும் எந்த ஒரு ஆணவமும், எதிர்மறையான எண்ணங்களும் இல்லாமல் கடவுளை உணர ஒரு சின்ன முயற்சியாகும்

முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் கந்தரப்பத்தின் செய்முறை

தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் கந்தரப்பத்தின் செய்முறை
என்னென்ன தேவை?
பச்சரிசி - 2 கப், 
புழுங்கல் அரிசி - 1/4 கப், 
உளுத்தம்பருப்பு - 1/4 கப், 
கடலைப்பருப்பு - 1/8 கப், 
வெந்தயம் - 1 டீஸ்பூன், 
வெல்லம் - 2 கப், துருவிய தேங்காய் - 1 கப், 
ஏலக்காய் - 4, 
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் கழுவி 2 மணிநேரம் நன்றாக ஊறவைக்கவும். பிறகு நைசாக அரைத்து அதில் வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்து இன்னும் 5 நிமிடம் அரைக்கவும். எண்ணெய் சூடாக்கி, ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். அப்பம் உப்பி மேலே வரும்போது திருப்பி விட்டு வேகவைத்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும். மாவை நன்கு அடித்து ஊற்றினால் நன்றாக வரும்

கோயில் கருவறையில் மின்சார விளக்கு ஏன் போடுவதில்லை

கோயில் கருவறையில் மின்சார விளக்கு ஏன் போடுவதில்லை
விளக்கில் எண்ணெய் ஊற்றி திரியோடு தீபம் ஏற்றுவது என்பது எவ்வளவோ தத்துவங்களை உள்ளடக்கியது. திரி எரிந்து தீபம் பிரகாசிக்கிறது. நம்மிடத்தில் உள்ள தீய குணங்களும், பாவங்களும் விலகி நல்லறிவும், புண்ணியமும் வெளிப்படவேண்டும் என்பது தான் தீபத்தத்துவமாகும். தீபஸ்ஸத் விஷயா: என ஆகமம் கூறுகிறது. மின்சார விளக்கு ஒளியில் பார்ப்பதை விட தீபஒளியில் சுவாமியைத் தரிசிப்பதே ஆனந்தம். சாஸ்திரம் தோன்றிய காலத்தில் மின்சாரம் கிடையாது. எனவே, அதைப் பற்றி சாஸ்திரங்களில் இல்லை.

நீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

நீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
சோழவள நாட்டிலே அமைந்துள்ள எருக்கத்தம் புலியூர் என்னும் நகரில் ஓர் பெரிய சிவன் கோவில் உண்டு. அக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சிவனுக்கு, நீலகண்டேசுவரர் என்றும், சக்திக்கு நீலமார்க் கண்ணம்மை என்றும் பெயர். தலவிருட்சம் வெள்ளெருக்கு. இத்தகைய தெய்வ வளமிக்க நகரில், பாணர் மரபில் பிறந்தவர் நீலகண்ட யாழ்ப்பாணர். இவரது மனைவி மதங்க சூளாமணி. இசையே உருவெடுத்த பாணரும், அவரது வாழ்க்கைத் துணைவியாரும், நீலகண்டேசுவரர் புகழை யாழில் இனிமையுடன் உள்ளம் உருக இசைத்து எல்லையில்லா இன்பம் எய்தினர். இவர்கள் சிவத்தலங்கள் தோறும் சென்று யாழ் இசைத்து எம்பெருமான் அருள் பெற்று பெருமையுற்றனர். சோழவள நாட்டிலுள்ள எல்லா சிவன் கோவில்களையும் கண்டுகளித்துப் பேரின்பம் பூண்ட பாணரும் அவரது மனைவியாரும் மதுரையம்பதிக்குச் சென்றனர். பாணர் தம் மனைவியோடு திரு ஆலவாய் அண்ணலாரது ஆலயத்தின் புறத்தே நின்று எம்பெருமானின் புகழை யாழில் சுருதிகூட்டி பண்ணமைத்துப் பாடிக் கொண்டிருந்தார். பண்டை நாட்களில், பாணர் மரபினோர் ஆலயத்துள் சென்று இறைவனை வழிபடுவது கிடையாது. புறத்தே நின்று வழிபடுவதையே நியதியாகக் கொண்டிருந்தார்கள். பாணரின் யாழிலே உள்ளம் உருகிய சோமசுந்தரக் கடவுள் தமது பக்தனைக் காக்க திருவுள்ளம் கொண்டு மதுரையம்பதி சிவத்தொண்டர்கள் கனவில் எழுந்தருளினார். யாழ்ப்பாணரையும், அவரது மனைவியாரையும் கோவிலுள் அழைத்து வந்து தரிசனம் செய்வதற்கு ஆணையிட்டார். அவ்வாறே பாணர் கனவிலும் எழுந்தருளினார்.
பாணரே ! உம்மை, எம்மிடம் அழைத்து வந்து தரிசனம் செய்து வைக்க ஆவன செய்துள்ளோம் என்று அருள்வாக்கு சொல்லி மறைந்தார். மறுநாள் வழக்கம்போல் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மனைவியாருடன் கோயிலின் புறத்தே அமர்ந்து யாழ் இசைத்து தம்மை மறைந்த நிலையில் பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது தொண்டர்கள் அவர்களைக் கண்டு வணங்கி எம்பெருமானின் ஆணையைக்கூறி அவர்களை அகத்து எழுந்தருளுமாறு பணிவோடு கேட்டுக் கொண்டனர். அவர்களும் தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்கி கோயிலுக்குள் சென்று மண்டபத்தில் அமர்ந்தனர். பக்தி வெள்ளத்தில் மூழ்கிய அன்பர் இருவரும் தரை ஈரமாக இருப்பதனை கூட பொருட்படுத்தாமல், ஈரத்தரையில் அமர்ந்து மெய்மறந்து யாழை மீட்டி பாடத் தொடங்கினர். இவருடைய இன்ப இசையில் மயங்கிய மதுரையம்பதி ஈசன் தரையின் குளிர்ச்சி பட்டு யாழின் சுருதி கெட்டுவிடுமே என்று திருவுள்ளம் பற்றினார். அசரீரி வாயிலாக பெருமான் நிலத்திலிருந்து பாடினால் ஈரத்தால் யாழ் கெட்டுவிடும். எனவே அவர்கட்கு அமர்ந்து பாடப் பலகை ஒன்று இடுங்கள் என்று திருவாய் மலர்ந்து அருளினார். அப்பொழுது அத்தொண்டர்கள் அவர்களுக்கு அழகிய பீடம் ஒன்றை எடுத்து வந்து அதன் மீது அமர்ந்து பாடுமாறு செய்தனர். பீடத்தில் அமர்ந்த யாழ்பாணரும், மதங்கசூளாமணியும் அழகிய இனிய தெய்வ சக்திமிக்கப் பக்திப் பாடல்கள் பலவற்றைப் பாடி அனைவரையும் மெய்மறக்கச் செய்தனர். அதன் பிறகு இருவரும் மதுரையம்பதியில் நெடுநாள் தங்கியிருந்து தங்கள் யாத்திரையைத் தொடர்ந்தனர். அடுத்துள்ள பல சிவத்தலங்களையும் தரிசித்தவாறு திருவாரூரை அடைந்தனர்.
திருவாரூர் தியாகேசப்பெருமானும், பிராட்டியாரும் பாணர் இசையில் மயங்கினர். அன்றிரவு ஈசன் திருவாரூர் மெய்யன்பர்கள் கனவிலே எழுந்தருளி,எமது அன்பன் பாணனுக்கு திருக்கோயிலுள் வேறு வாயில் அமைத்து அதன் வழியாகக் கோயிலுக்குள் அழைத்து வந்து இசை பாடத் துணைபுரிவீர்களாக என்று கட்டளையிட்டருளினார். மறுநாள் தொண்டர்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணர் எழுந்தருளும் பொருட்டு வடதிசையில் வாயில் ஒன்று நிர்மாணித்தனர். அதன் வழியாக அவரையும், அவரது மனைவியாரையும் எம்பெருமான் திருமுன் எழுந்தருளச் செய்தனர். யாழ்ப்பாணர் வீதிவிடங்கப் பெருமானைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்து பக்திப் பாடல்கள் பாடினார். சில நாட்களில் அங்கிருந்து புறப்பட்டார். சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்துக் கொண்டே, சீர்காழியை வந்தடைந்து சம்பந்தரை வணங்கினார். பாணரின் யாழிசையில் எல்லையில்லா இன்பம் எய்திய திருஞான சம்பந்தப் பெருமான் அவரையும், அவர் தம் மனைவியாரையும் தம்முடனேயே இருந்து தேவாரப் பதிகங்களை யாழில் இட்டு இசைத்து பாடும் வண்ணம் அருள்புரிந்தார். இறுதியில் திருபெருமணநல்லூரில் ஞானசம்பந்தர் திருமணத்தில் தோன்றிய சிவஜோதியில், பாணரும், அவர்தம் மனைவியாரும் கலந்து சிவபதவியை அடைந்தனர்.
குருபூஜை: திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
திருநீலகண்டத்துப் பாணனார்க்கு அடியேன்

கடன்- கஷ்டம் தீர்க்கும் ஹேரம்ப கணபதி


கடன்- கஷ்டம் தீர்க்கும் ஹேரம்ப கணபதி
உலகில் பிறந்த பலருக்கும் பலவிதமான சங்கடங்கள்-துன்பங்கள்-தோன்றுவது இயற்கை. இந்தச் சங்கடங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்று புரியாமல் பலர் குழம்புகின்றனர். குடும்பத்தில் ஏற்படும் தர்ம சங்கடத்தைத் தீர்க்க அவசரமாகக் கடன் வாங்குவர். பணம் வந்ததும், திரும்பத் தந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வட்டிக்கு வாங்குவார்கள். இந்த அவசரத் தன்மையை அறிந்த கடன் கொடுப்பவர்கள் இரண்டு வட்டி, ஐந்து வட்டி, பத்து வட்டி, மீட்டர் வட்டி என்று ஏதேதோ பெயர்களில் தாராளமாகத் தருவார்கள்! இதற்கு கந்து வட்டி என்ற பெயரும் உண்டு.
இப்படி வட்டிக்குக் கடன் வாங்குபவர்கள் சில மாதங்கள் வட்டியைத் தவறாமல் கட்டுவார்கள். பிறகு மெல்ல மெல்ல தர முடியாத சூழல் ஏற்படும். வட்டி குட்டிமேல் குட்டிப் போட்டு அது வாங்கியதற்கு மேல் விஸ்வரூபம் எடுத்து விடும். இப்படிப்பட்டவர்களின் நிலைமையைப் பார்த்துத்தான் கடன் பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பர் பாடினார். இப்படித் தாங்க முடியாத சங்கடங்களில் மாட்டிக் கொண்டு முழிப்போரும், ருணத்தால் விழி பிதுங்குவோரும் எல்லா நலமும் பெற வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி. இவருக்கு நான்கு தலைகள்! கடன்களையும், சங்கடங்களையும் தீர்க்கும் சுபாவம் கொண்டவர். இவரைக் குளிரக் குளிர அபிஷேகம் செய்து அவருக்கே உரிய ஸ்லோகத்தை, குறைந்தது பதினாறு தடவை சொன்னால் சங்கடங்கள் விலகும். ருணம் (கடன்) தீரும்.
அவருக்குரிய ஸ்லோகம்:
ஓம் நமோ ஹேரம்ப
மத மோதித மம சங்கடம்ச
மஹா சங்கடம்ச
நிவாரய ஸ்வாஹா!
ஓம் நமோ ஹேரம்ப
மத மோதித மம ருணம்
அதி ஸீக்ரமேவ
நிவாரய ஸ்வாஹா!
சங்கடத்தில் தவிப்பவர்கள் முதல் ஸ்லோகத்தையும், ருண (கடன்)த்தால் தவிப்பவர்கள் இரண்டாவது ஸ்லோகத்தையும் கூறவேண்டும். கூடியவரை அபிஷேகத்தை சங்கடஹர சதுர்த்தியில் செய்வது நலம்.

குருநானக் உபதேசித்த ஆன்மிகம்!

குருநானக் உபதேசித்த ஆன்மிகம்!
சமூகத்தில் ஆன்மிகம் மலிந்து போகும் போதெல்லாம் மகான்கள் பிறந்து வழி காட்டுகிறார்கள். மனித குலத்தைத் திருத்தி நல்வழிப்பாதைக்குத் திருப்புகிறார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் அன்றைய பாரதத்தில் (இன்றைய பாகிஸ்தானில்) லாகூருக்கு அருகே அப்படி அவதரித்தவர் தான் குருநானக் என்ற மகான்.
இளமையிலேயே அறநெறியில் மனிதன் வாழ்வதே அவன் இறை மார்க்கத்தில் வாழ்ந்து வருகிறான் என்பதற்கு அடையாளம் என்று நம்பியவர் அவர். மோசடிகளில் எல்லாம் மிகப்பெரிய மோசடி கடவுள் பெயரால் செய்யப்படும் மோசடி என்ற ஆணித்தரமான கருத்து குருநானக்கிற்கு உண்டு. இறைவன் பெருமை உணர்ந்தவர்கள் அறநெறியில் வாழவேண்டுமே அல்லாது ஏமாற்றிப் பிழைக்கலாகாது என்பதை எல்லா விதங்களிலும் உபதேசித்து வந்தார் குரு நானக். அவர் அதை உபதேசித்த விதங்கள் வித்தியாசமானவை.
ஒருமுறை கயிலாயம், மானசரோவர் வழியாக கர்தார்பூர் என்ற நகருக்கு வந்தார் குருநானக். அங்கே ஒரு போலிச் சாமியார் ஒரு மேசை முன் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருப்பதுபோல் நடித்து வந்தான். அடிக்கடி கண்திறந்து மேசைமேல் விழும் நாணயங்களை மட்டும் கவனமாக எடுத்து வைத்துக் கொள்வான்! காசை எடுத்து வைத்துக் கொள்ளும் போது மட்டுமே அவனுடைய போலித் தியானம் கலையும்.
இதைப் பார்த்த குருநானக் ஒருநாள் அந்த போலிச் சாமியார் கண்மூடி இருந்த நேரத்தில் மேசையையே அப்புறப்படுத்தி விட்டார். கண்திறந்த போலிச் சாமியார், ""என் மேசை எங்கே, என் காசு எங்கே?'' என்று அலறினான்.
""புண்ணியம் செய்த மேசை அல்லவா அது! தன்மேல் விழும் காசை உன்னைப்போல் அது லட்சியம் செய்ததே கிடையாது. எனவே நீ மேலுலகம் போவதற்குள் காசில் ஆசை இல்லாத அந்த மேசை மேலுலகம் போய் விட்டது!'' என்றார் குருநானக். அவன் வெட்கித் தலைகுனிந்தான். "ஆன்மிகம் பணம் சம்பாதிப் பதற்கான வழி அல்ல. அது ஆண்டவனின் அருள் பெறுவதற்கான மார்க்கம்!'' என்று அவனுக்கு அறிவுறுத்தி திருத்தினார் குருநானக்.
குருநானக்கின் ஆன்மிகம் உலகியல் நெறிப்பட்டது. எல்லாரும் அவரவர் கடமையைச் செய்வது மிக முக்கியம் என்று சலிக்காமல் கூறுவார். ஒருநாள் அவரது அறவுரைகளைக் கேட்க ஒருவன் வந்தான். அந்த நேரத்தில் அவனது நண்பன் ஒருவன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தான். "நான் தங்கள் உபதேசத்தைக் கேட்பது நல்லதா? என் நண்பனுக்குப் பணிவிடை செய்வது நல்லதா?'' என்று அவன் கேட்டான் "நோயுற்றிருக்கும் உன் நண்பனுக்குப் பணி விடை செய். அதுவே நீ கடவுளின் அருளைப் பெறச் செய்யும் நல்ல செயல் ' என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார் குருநானக்.
""இயன்றவரை எல்லாருக்கும் நல்லதே செய்யுங்கள். எதிரியைக்கூட மன்னியுங்கள். மனத்தாலும் பிறருக்குக் கெடுதல் நினையாதீர்கள்! அன்பே எல்லா மதங்களையும்விட உயர்வான மதம்'' என்றெல்லாம் அவர் சொன்ன உயர்ந்த கருத்துகள் மக்களைக் கவர்ந்தன.
அமெனாபாத் என்ற ஊருக்கு அவர் சென்ற போது, அந்த ஊர் கவர்னரான மாக்பாகோ அவரைத் தன் வீட்டு விருந்துக்கு அழைத்தான். குருநானக்கோ ஏழைத் தச்சரான பாய்லாலு என்பவர் வீட்டிலேயே உணவு உண்பதாகக் கூறி அவன் அழைப்பை மறுத்துவிட்டார். பெரிய விருந்தே அளிக்க உத்தேசித்திருந்த தன்னைப் புறக்கணித்து விட்டு ஏழைத் தச்சன் வீட்டில் தந்த எளிய ரொட்டியையே உண்ட குருநானக் மீது செல்வந்தனான கவர்னரின் சீற்றம் அதிகமானது. ஏன் தன் வீட்டு விருந்துக்கு வரவில்லை என்று கேட்டு நேரில் சென்று அவன் சீறினான். மக்கள் கவர்னரின் சீற்றத்தை குருநானக் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
”உன் வீட்டு உணவுக்கும் தச்சன் வீட்டு உணவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை உனக்கு நிரூபிக்கிறேன். உன் இல்லத்திருந்து ஒரு ரொட்டித் துண்டைக் கொண்டுவரச் சொல்!” என்றார் குருநானக். உடனே அவன் தன் வீட்டில் இருந்து ரெட்டித் துண்டை வரவழைத்தான். அந்த ரொட்டித் துண்டை கையில் எடுத்துப் பிழிந்தார் நானக். ரொட்டித் துண்டிருந்து செக்கச்செவேலென ரத்தம் வழிந்தது. நீ ஏராளமான ஏழைகளின் உழைப்பைச் சுரண்டினாயே? அவர்களின் ரத்தம்தான் இது! என்றார் நானக். பிறகு அந்த ஏழைத் தச்சன் அளித்த ரொட்டியைக் கையிலெடுத்துப் பிழிந்தார். அதிலிருந்து வெள்ளை வெளேர் என்று பால் வடிந்தது. கவர்னர் மாக்பாகோ திகைப்படைந்தான். எப்படி சம்பாதிக்க்றோம் என்பது தன் இல்லத்தின் உணவில் கூட பிரதிபலிக்கிறதே என்று புரிந்த அவன் மனம் மாறினான்.. அவர் மாபெரும் மகான் என்பதை உணர்ந்து வணங்கினான். அன்றிலிருந்து ஏழைகளைக் கொடுமைப் படுத்துவதில்லை என்று அவருக்கு வாக்குறுதியும் கொடுத்து அதன் படியே வாழ ஆரம்பித்தான்.
ஒருமுறை சஜ்ஜன் என்கிற கொள்ளைக்காரன் வீட்டுக்குத் தன் சீடர்களுடன் சென்று வாசலில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்ட குருநானக் இனிமையான குரலில் பாடலானார். ”திருட்டும் ஒரு தொழிலா, இத்தகைய பாவ வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா” என்று தொடங்கிய பாடல் மெல்ல மெல்ல வளர்ந்தது. சஜ்ஜன் அதுவரை நிகழ்த்திய கொலை, கொள்ளை போன்ற அனைத்தையும் அது புள்ளிவிவரத்தோடு விவரிக்கலாயிற்று! முதலில் திகைத்த சஜ்ஜன் போகப் போக கண்ணீர் விட்டு அழத் தொடங்கினான். அவனால் கொள்ளை அடிக்கப்பட்டவர்கள் பணம் போனதால் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பதை அவர் பாடல் விவரித்தபோது, சஜ்ஜனின் கண்ணீர் அவர் பாதங்களைக் கழுவிக் கொண்டிருந்தது.
”மகானே! நான் இதுவரை செய்த பாவங்களை எப்படித் தொலைப்பேன்? அதற்கு ஏதாவது ஒரு வழியை நீங்கள் தான்சொல்ல வேண்டும்!” என்று அவன் கதறினான். அவன் பாவங்கள் தொலைய குருநானக் ஒரு வழி சொன்னார். அது இதுவரை வேறு எந்த ஞானியும் சொல்லாத புதிய வழி. யாரையெல்லாம் கொன்றானோ யாரிடமிருந்தெல்லாம் திருடினானோ அவர்களின் வீட்டுக்கெல்லாம் மறுபடி சஜ்ஜன் போய்க் குற்றத்தை ஒப்புக்கொண்டு அங்குள்ளவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதே நானக் சொன்ன வழி.
சஜ்ஜன் தான் திருடிய வீடுகளையும் கொலைசெய்த வீடுகளையும் தேடிக் கண்டு பிடித்தான். அங்குபோய் அவன் கண்ணீர் விட்டு, உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்ட போது அவனை நையப் புடைத்தவர்களும் உண்டு. கோபத்தில் எட்டி உதைத்து அவமானப்படுத்தியவர்களும் உண்டு. அவன் பதிலுக்குத் தாக்காமல் கண்ணீரோடு அடி வாங்கிக் கொண்ட விதத்தைப் பார்த்து மக்கள் திகைத்தார்கள். மெல்ல மெல்ல ஆசைகளைக் குறைத்துக் கொண்டு ஒரு துறவிபோல் பின்னர் வாழலானான். குருநானக்கின் பெருமை சஜ்ஜனின் செயல் மூலமாக விறுவிறுவென்று பரவலாயிற்று.
இது போன்ற அவர் வித்தியாசமான அறிவுசார்ந்த அணுகுமுறையால் ஒரு அப்பழுக்கற்ற ஓர் உண்மையான மகான் தங்களிடையே வாழ்கிறார் என்பதை உணர்ந்து மக்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினார்கள்
இந்து, இஸ்லாம், பௌத்தம், சமணம் ஆகிய எல்லா மதத்தவரின் புனிதத் தலங்களுக்கும் குருநானக் பயணம் செய்தார். அனைத்து இடங்களிலும் இறைவன் “சத்திய கர்த்தர்” என்ற நினைவுடன் வணங்க வேண்டும் என்று உபதேசம் செய்தார். அனைத்து மதத்தினர்களையும் அவர் ஒன்று சேர்க்கவும், அவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் முயன்றார். இதனால் எல்லா மதத்தவரும் குருநானக்கிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர்.
குருநானக், மூன்று அத்தியாவசிய கடமைகளில் மனிதனின் வாழ்க்கை முறையைச் சுருக்கமாக கூறுகிறார். அவை-
வாண்ட் சாக்கோ – தன்னிடம் இருப்பதை உண்மையான தேவையில் இருப்போருக்கும், நம்மை விடக் குறைவாக இருப்போருக்கும் பகிர்ந்து கொள்தல் வேண்டும்.
கிராத் கரோ – நேர்மையாகவும், நியாயமாகவும் வாழ்தலும், சம்பாதிப்பதும் வேண்டும்.
நாம் ஜபோ – இறைவனுடைய திருப்பெயரை ஜபிக்க வேண்டும்.
சீக்கியர்களின் முதல் குருவான அவர் பொய், பித்தலாட்ட வாழ்க்கையை எதிர்த்தார். மனிதர்களுக்கு ஒருவன் தீமை செய்து வாழ்ந்து இறைவனுக்கு உகந்தவனாக மாட்டான் என்ற தீர்க்கதரிசன சிந்தனை அவரிடம் உறுதியாக இருந்தது. இதுவல்லவா அறிவார்ந்த ஆன்மிகம்!

கண்ணன் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 10

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 10

சத்தியம் செய்வதற்கும் அந்தச் சத்தியத்தின்படி செயல்படுவதற்கும் மிகப் பெரிய மன உறுதி வேண்டும். அந்த உறுதியுடன், அன்பும் கருணையும் மிக அதிகமாக இருக்கவேண்டும். அப்படியான பெருங்கருணையுடன்திகழ்ந்தவன் ஸ்ரீகண்ணன். கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றியவன்; சத்தியத்தின்படி வாழ்ந்து காட்டியவன்; சத்தியமாகவே காட்சி தந்தவன், அவன்!

''நான் மூன்று முறை பிறக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டாய். அதன்படி, பிரிஸ்னி- சுதபாவுக்குப் பிறந்தேன். அதையடுத்து அதிதி- காஷ்யபருக்கு வாமன மூர்த்தியாகப் பிறந்தேன்.

இப்போது, உனக்கும் வசுதேவருக்கும் பிள்ளையாகப் பிறந்துவிட்டேன். ஆக, நீ கேட்டுக் கொண்டதன்படி, நான் மனதுக்குள் சங்கல்பம் செய்துகொண்டபடி, மூன்று முறை பிறந்துவிட்டேன். எனக்கு நானே கொடுத்துக் கொண்ட சத்தியத்தை நிறைவேற்றிவிட்டேன்'' என்று தேவகியிடம் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. அதுமட்டுமா? வசுதேவரின் மைந்தன் வாசுதேவன் எனத் திருநாமம் கொண்டு, அவர்களுக்குக் கூடுதல் மதிப்பையும் மரியாதையையும் வழங்கியருளினார்.

ராவணனின் மகன் ராவணீ; தசரதரின் மகன் தாசரதீ; துரோணரின் மகன் துரோணீ. அதுபோல், வசுதேவரின் மகன் வாசுதேவன்! இவற்றுக்கெல்லாம் விதை... ஸ்ரீமந் நாராயணன். பரமபத நாதனாக இருந்தவர், க்ஷீராப்தி நாதனாக திருப்பாற்கடலில் சயனித்திருந்தவர், எழுந்து மதுராபுரிக்கு வந்துவிட்டார். அவருக்கு முன்பாகவே அவருடைய படுக்கையும் வந்துவிட்டது. அதாவது, ஆதிசேஷன்... பலராமனாக முன்பே வந்துவிட்டான்.

வீட்டில், எவ்வளவு விருந்தாளிகள் வந்தாலும், நமக்கான படுக்கையை மட்டும் விட்டுக்கொடுக்கமாட்டோம், அல்லவா?! அதேபோல், தனக்கான படுக்கையின்றி ஸ்ரீமந் நாராயணன் இருந்ததே இல்லை.

'ஸ்ரீலட்சுமணனைவிட்டு ஒருபோதும் பிரியமாட்டேன்’என்பது ஸ்ரீராம வாக்கியம். இங்கே... கிருஷ்ணாவதாரத்தில், பலராமனாக அவதரித்த ஸ்ரீஆதிசேஷன், அங்கே... ஸ்ரீராமாவதாரத்தில் ஸ்ரீலட்சுமண னாகப் பிறப்பெடுத்தார் அல்லவா!

பட்டாபிஷேகம் முடிந்து, புஷ்பக விமானத்தில் ஏறிச் செல்ல யத்தனித்தார் ஸ்ரீராமபிரான். அப்போது விபீஷணன் அவரிடம், ''ஸ்ரீராமா, பதினான்கு வருடங்கள் வனவாசத்தில் இருந்தாய். போதாக்குறைக்கு ஸ்ரீசீதாபிராட்டியாரை பத்து மாதங்கள் வரை பிரிந்திருந்தாய். உனக்குத்தான் எத்தனைக் கஷ்டங்கள்; எத்தனைத் துக்கங்கள். இந்த ஊர், கோலாகலங்கள் நிறைந்த ஊர். கொண்டாட்டங்களுக்குப் பஞ்சமில்லாத நகரம். இங்கே, ஆட்டபாட்டங்களுக்குக் குறைவே இல்லை. சந்தோஷங்களுக்கும் மகிழ்ச்சிக்கும் இம்மியளவும் குறைவிருக்காது. மனம் முழுவதும் சோகமும் அயர்ச்சியுமாக இருந்தவன் நீ. சில நாட்கள் இங்கே தங்கி, அத்தனை குதூகலங்களையும் கண்ணாரக் கண்டால், உன் மனம் லேசாகும். எனவே, ஒரு நான்கு நாட்களுக்கு இங்கே தங்கிச் செல்லேன் ராமா!'' என்றாராம்.

அனைத்தையும் கேட்ட ஸ்ரீராமர், ''என்னுடைய அடுத்த வேளைக் குளியல், பரதனுடன்தான்!'' என்றாராம். ஏன் அப்படிச் சொன்னார்? ஸ்ரீலட்சுமணர் ஆதிசேஷன் என்றால், ஸ்ரீபரதன் பாஞ்சஜன்யம்.

லட்சுமணர் இன்றிப் படுக்கையில்லை; சங்கு இல்லாமல் தீர்த்தமாடுதல் இல்லை.

ஆக, அவதாரமும் நோக்கமும் திருநாமமும்தான் வெவ்வேறு! இங்கிருப்பவரே அங்கிருக்கிறார்; அங்கிருப்பவரே இங்கிருக்கிறார்.

அரங்கனைத் தவிர வேறு எந்தப் பெருமாளையும் பாடாதவர் திருப்பாணாழ்வார். அவர், ஸ்ரீரங்கம் திவ்விய தேசத்துக்கு வந்து ஸ்ரீஅரங்கனைக் கண் குளிரத் தரிசித்துப் பாடினார். தனது பாசுரத்தில், திருவேங்கடநாதனாக நின்றவன், இங்கே திருவரங்கத்தில் சயனித்திருக்கிறான் என்று பாடுகிறார்.

நம் வீட்டுக்கு எவரேனும் வந்தால், 'எங்கிருந்து வருகிறீர்கள்?’என்று கேட்போம்தானே?! திருப்பாணாழ்வாரே தனக்குள் கேட்டுக்கொண்டு, தானே பதில் சொல்லியிருக்கிறார். இந்த அரங்கன் என்பவன் எங்கிருந்து வந்தவனாம்? திருவேங்கடத்தில் இருந்து வந்தவன். அங்கே எப்படியிருந்தானாம்? அங்கு நின்ற கோலத்தில் இருப்பவன், இங்கு சயனித்தபடி இருக்கிறான்!

பழசை மறக்காமல் இருப்பது ஆழ்வார் மட்டும் தானா? நம் கிருஷ்ணபரமாத்மாவும் பழசை மறக்காமல், தந்தையை எப்போதும் நினைத்தபடி, வசுதேவர் மீது அளப்பரிய அன்பைக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு 'வசுமனஹா’ என்று திருநாமம் உண்டானது. அதாவது, தந்தையான வசுதேவரை மனத்தில் வைத்திருப்பவன் என்று அர்த்தம்!

இதையெல்லாம் அறிந்த பராசரபட்டர், சற்றே கேலியும் கிண்டலுமாகச் சில விஷயங்களைப் பார்க்கிறார்.

மாமனார் வீட்டுக்குச் சென்றிருக்கிற மாப்பிள்ளைகள் சுகவாசிகள். தலைதீபாவளிக்கு மாமனார் வீட்டுக்குச் செல்லும் மாப்பிள்ளை குறித்த ஜோக்குகள் அள்ள அள்ளக் குறையாமல், படிக்கப் படிக்கத் திகட்டாமல் இன்றைக்கும் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன.

மாமனார் வீட்டுக்கும் மாப்பிள்ளைக்கும் உண்டான உறவும் நெருக்கமும் ஏதோ இன்றைக்கு நேற்றைக்கான விஷயம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். திருப்பாற்கடல் என்பது ஸ்ரீதேவித் தாயாரின் ஜென்ம பூமி. அதாவது திருமாலின் மாமனார் வீடு. அங்கே... எவ்வளவு ஒய்யாரமாக, உல்லாசமாக, சயனித்திருக்கிறார் பரந்தாமன்!

இந்தப் பரந்தாமன் மட்டுமா... பரமேஸ்வரன் குடிகொண்டிருக்கிற ஹிமாச்சலமும் உமையவளின் தந்தை, அதாவது சிவனாரின் மாமனார் வீடாயிற்றே?!

பூமியில், ஸ்ரீவில்லிப்புத்தூரைப் பாருங்கள். பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள், அந்த அரங்கனையே மனதுள் வரித்துக் காதலித்தாள்; அவனே எனக்கு மணாளன் எனப் பூரித்தாள். அதற்காக, மாலையைக் கட்டி எடுத்துக் கொண்டு, ஸ்ரீரங்கத்துக்குச் சென்றாளா என்ன? ஆண்டாள் இருந்த இடத்துக்கே, அதாவது பெரியாழ்வாரின் வீட்டுக்கே வந்துவிட்டாரே ரங்கமன்னாராக! 

இன்றைக்கும், அந்தத் தலத்தில் ஸ்ரீவடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் - ஸ்ரீரங்கமன்னார் ஆகியோரின் சந்நிதிகள் இருக்கின்றன. அவற்றில் ஸ்ரீரங்கமன்னாரின் சந்நிதியைச் சற்றுக் கூர்ந்து கவனியுங்கள். அந்தச் சந்நிதியின் சாளரமும் அமைப்பும் மற்ற கோயிலைப் போலவோ, சந்நிதியைப் போலவே இருக்காது; வீடுகளில் இருப்பது போலவே காட்சி தரும். ஏனென்றால், அது பெரியாழ்வாரின் வீடு; ஸ்ரீஆண்டாள் தவழ்ந்து விளையாடிய இல்லம். அதாவது, ஸ்ரீரங்கமன்னாருடைய மாமனார் வீடு!

பெரியாழ்வாரை மாமனாராகப் பெற்றுப் பெருமை கொண்டார் திருமால். அதேபோல், மாப்பிள்ளையாகி, பெரியாழ்வாருக்கும் பெரும்பேறு தந்தருளினார்.

மாமனார் வீட்டை விடுங்கள்; பெற்றோரையே அதாவது வசுதேவரையே மனதுள் நினைத்துக் கொண்டிருக்கிற ஸ்ரீகண்ணனைப் பார்ப்போம்.

பத்தாவது வயதில், கம்ச வதம் முடிந்தது. உடனே ஸ்ரீகிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமா? விறுவிறுவென காராக்கிரகம் நோக்கி ஓடிவந்து, வசுதேவரையும் தேவகியையும் பார்த்து, பார்த்த மாத்திரத்தில் தடாலென சாஷ்டாங்கமாக விழுந்து ஸேவித்தான். உதட்டில் சிரிப்பும் கண்களில் கண்ணீருமென இரண்டும் கலந்த உணர்வில், மூன்று பேரும் இருந்தார்கள்.

இந்தப் பத்து வருடங்களில், எத்தனை முறை சிரித்திருப்பாய்? எத்தனைப் பேரை உன்னுடைய குறும்புகளால் சிரிக்க வைத்திருப்பாய்? உன்னையும் உன் அழகையும் பார்த்ததில், எத்தனை பேரின் துக்கங்கள் பறந்தோடியிருக்கும்? ஆனால், வெளியில் சிரித்துக்கொண்டு, குறும்புகள் செய்து வலம் வந்தாலும், நீ உள்ளுக்குள் அழுதாய் அல்லவா! பெற்றோரைப் பிரிந்திருக்கிற வேதனையில் கதறினாய்தானே?! உள்ளுக்குள் நீ அழுத அழுகையை எவர் அறிவார்? கீதையில், அர்ஜுனனிடம்... ''என்னுடைய ஆதங்கமெல்லாம், என்ன பிறந்து என்ன... என்னை எவரும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லையே என்பதுதான்! 700 ஸ்லோகங்கள் கேட்ட நீயே என்னைப் புரிந்துகொள்ளாதபோது, மற்றவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள்?'' என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

சாரதியாக, தூதனாக, கையாளாக என்று எத்தனை இறங்கி வந்து பணி செய்திருக்கிறான் ஸ்ரீகண்ணன்! அவனைப் புரிந்து, உணர்ந்து, அறிந்து, தெளிந்தால்... நமக்காகவும் வருவான் ஸ்ரீகண்ணன். அழகுக் கண்ணனை ஆராதியுங்கள்; தூதனாக, கையாளாக, சாரதியாக உங்கள் வீட்டுக்கும் வருவான் ஸ்ரீகண்ணன்!

உண்மையான குரு யார்?

உண்மையான குரு யார்?

நம் புராணங்களிலும், இதிகாசங்களிலும் குரு ஒவ்வொருவருக்கும் கடவுளுக்கு நிகராகக் கருதப்பட்டவராக இருந்தார். மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருவரும் சாஸ்திர தத்துவங்களைக் கற்பதும், ஆன்மிக ஞானத்தைப் பெறுவதும் ஒரு குருவின் மூலமே பெற முடியும் என்ற நிலை இருந்தது. இறைவனே அவதாரம் எடுத்து வந்தாலும் குருவிடம் முறையாகக் கற்றதாக நாம் படிக்கிறோம்.

மகாவிஷ்ணு இராமாவதாரம் எடுத்த போது விசிஷ்டரைக் குருவாக ஏற்றுக் கொண்டு குருகுலவாசம் செய்து கற்றுக் கொண்டதாகவும், குருகுலவாசம் முடிந்த பின்னரும் வசிஷ்டரின் அறிவுரைகளின்படி நடந்ததாகவும் இராமாயணம் கூறுகிறது. இராமருக்கு வசிஷ்டர் வழங்கிய உபதேசங்கள் யோக வாசிஷ்டம் என்ற பெயரில் இன்றும் அறிவுப் பொக்கிஷமாய் நமக்குப் படிக்கக் கிடைக்கிறது.

பகவத்கீதையை வழங்கிய கிருஷ்ணரே இளமையில் குருவிடம் கற்க வேண்டும் என்ற சம்பிரதாயத்தை வலியுறுத்த சாந்தீபனி முனிவரிடம் குருகுலவாசம் புரிந்தார். மனிதராக அவதாரம் எடுத்த பின்னர் அவன் கடைத்தேறும் வழியை குருவின் மூலமாகவே நாட வேண்டும் என்கிற அளவு குரு முக்கியத்துவம் பெற்றிருந்தார்.

புராணங்கள், இதிகாசங்கள் காலம் கழிந்த பின்னும் நம் பண்டைய பாரதத்தில் குருசரணமே ஞானத்தெளிவு என்ற நிலைப்பாடு இருந்தது. உதாரணத்திற்கு குருசரணத்தைப் பற்றும் வழிகளை திருமூலர் இப்படி விவரிக்கிறார்

“தெரிசிக்கப் பூசிக்க சிந்தனை செய்யப்
பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபக்தி செய்யுங் குவலயத்தோர்க்குத்
தருமுத்தி சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே”

குருவைத் தரிசித்தல், பூஜித்தல், சிந்தனை செய்தல், அவருடைய கீர்த்தியைப் பாடிப் பரவுதல் அவரது பாதுகைகளக் கும்பிடுவது ஆகியன முக்திதரும் என்று மிக உயர்வாகக் கூறுகிறார்.

வேதவித்து என்று கருதப்பட்ட ஆதிசங்கரர் கூட கோவிந்த பகவத்பாதரின் சீடராக இருந்தார். பின் பல நூற்றாண்டுகள் கழித்துப் பிறந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் “எப்போதும் குருசரணம் நினைவாய் நெஞ்சே” என்று மொழிந்தவர்.

நம் நாட்டில் தொன்று தொட்டு குருமார்கள் எல்லாம் கடவுளின் பிரதிநிதிகள் என்றே நினைக்கும் வழக்கம் இருந்தது. இறைவன் ஆணையை ஏற்று இந்த உலகிற்கு நலம் செய்வதற்காகப் பிறப்பெடுக்கும் புண்ணிய மூர்த்திகளே குருமார்கள் என்று நம்பப்பட்டது. பழகிய யானையைக் கொண்டு புதிய யானையைப் பிடிப்பது போல, நம்மைப் போலவே மானிட வடிவம் தாங்கிக் கடவுளே நம்மை உய்விக்கக் குருவடிவில் வருவதாகக் கொள்ள வேண்டும் என்று எண்ணினார்கள் நம் முன்னோர்கள்.

இன்றோ குரு என்ற வார்த்தையும் குருவழிபாடும் கொச்சைப்படுத்தப்பட்ட வார்த்தைகளாக மாறிவிட்டன.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் 
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர் 
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி 
குருடும் குருடும் குழிவிழுமாறே.

என்று திருமூலர் எச்சரித்ததைப் போன்ற வேடிக்கையான காலகட்டத்தில் தான் நாம் இருக்கிறோம். அஞ்ஞானக் குருட்டுத் தனத்தை நீக்க முடியாத தகுதியற்ற குருவினைக் குருவாக ஏற்றுக் கொள்பவர்கள், அந்தக் குருட்டுத் தனத்தை நீக்க முடிந்த உண்மையான குருவினை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நடிப்பும், பகட்டும் பிடிப்பவனுக்கு நல்லதும், உண்மையும் பிடிக்காது. அது கசக்கவே செய்யும். இப்படி தகுதியும், ஞானமும் இல்லாத குருவும், முட்டாள் சீடனும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? ஞானமில்லாத இருவரும் குருடர்களே என்பதால் அவர்கள் குருட்டாட்டம் ஆடி கடைசியில் படுகுழியில் விழ வேண்டி இருக்கும்.

முன்பு குருவை எப்படி எல்லாம் பூஜிக்க வேண்டும் என்று சொன்ன அதே திருமூலர் பிற்காலத்தில் இப்படியும் குருக்கள் மழைக்காலக் காளான்களாய் முளைப்பார்கள் என்று ஞான திருஷ்டியில் உணர்ந்து பாடியது போல் அல்லவா இருக்கிறது.

சரி உண்மையான குரு யார்? எப்படி இருப்பார்?

உண்மையான குரு தன்னையே உயர்த்திப் பேசிக்கொண்டிருக்க மாட்டார். தன்னை நாடி வந்தவர்களை உயர்த்தப் பார்ப்பார்.

தன்னைக் கடவுளுக்கு இணையாகப் பறை சாற்ற மாட்டார். அவரிடம் படாடோபமும், பகட்டும் இருக்காது. பணிவும், எளிமையும் அவரிடம் இருக்கும். வசிஷ்டர் முதலான மகத்தான வேதகால முனிவர்களும் சரி, ஆதிசங்கரர் முதலான பிற்கால பெரும் துறவிகளும் சரி தங்களைக் கடவுள்களாகச் சொல்லிக் கொண்டதில்லை. பிற்காலத்தில் அவர்கள் சிஷ்யர்கள் அவர்களைக் கடவுள்களாக சித்தரித்திருக்கக் கூடும். ஆனால் அவர்கள் அப்படிச் சொன்னதில்லை. இதை யாரும் மறந்து விடலாகாது.

உண்மையான குரு வசூலில் குறியாக இருக்க மாட்டார். சொல்லப் போனால் பணம் பிரதானமாகும் போது மற்ற எல்லாமே பின்னுக்குத் தள்ளப்படுகிறது. ஞானமே முக்கியமாக நினைப்பவரே உண்மையான குரு. அவர் தன்னைக் குருவாக ஏற்றுக் கொண்டவர்களை ஞான நிலைக்கு உயர்த்துவதில் குறியாக இருப்பார்.

தன்னை நாடி வருபவர்களுக்குப் பிடித்ததை மட்டுமே சொல்லி மகிழ்விக்கும் மனப்போக்கு உண்மையான குருவிடம் இருக்காது. உண்மை கசந்தாலும் அதை மருந்தாக உட்கொள்ள வைத்து நலமடையச் செய்யும் மகத்தான அக்கறை அவரிடம் இருக்கும்.

தன்னைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கையில் அவருக்கு அக்கறை இருக்காது. தன்னைப் பின்பற்றுவோரின் தன்மையிலும், முன்னேற்றத்திலும் அவருக்கு அக்கறை இருக்கும்.

சொத்துக்கள் சேர்ப்பது, ஆள்பிடிப்பது, சித்துவித்தைகள் செய்து காட்டுவது போன்றவை உண்மையான குருவிடம் இருக்காது. ஞானத்தைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கம் மட்டுமல்லாமல் ஒரு உதாரண புருஷராய் அவர் வாழ்ந்து காட்டும் பண்பு இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான குரு ஒரு ஆரம்பம்தான். அவர் முடிவு அல்ல. உண்மையான குரு என்பவர் ஒரு வாசல் தான். அடுத்த நிலைக்கு அவர் மூலம் ஒருவர் சென்று கடந்து போக முடியும். அவர் தன்னிடமே ஒருவரைக் கட்டிப் போட நினைக்க மாட்டார். அவரைக் கடந்து செல்லவும் மகிழ்ச்சியுடன் உதவுவார். 

இதெல்லாம் இக்காலத்தில் உண்மையான குருவை அடையாளம் காண நமக்கு இருக்கும் அளவுகோல்கள். உண்மையான குருமார்கள் நம் புராணங்களிலும், வேதங்களிலும், உபநிடதங்களிலும் எப்படி இருந்திருக்கிறார்கள் என்பதை ஆழமாகப் படிக்கும் போது நமக்குப் புலப்படும் உண்மைகள்.

இன்னொரு உண்மையையும் நாம் இங்கே நினைவுகூர்வது நியாயமாய் இருக்கும். உண்மையான தேடலுடன் செல்கின்ற சீடனுக்கு உண்மையான குரு கண்டிப்பாகக் கிடைப்பார். எப்படி தண்ணீரும் எண்ணெயும் சேராதோ அப்படி நல்ல தேடலுடைய மனிதனும், போலி குருவும் சேர முடியாது. உண்மையான தேடலும், நோக்கமும் உள்ளவன் தன் அறிவுக் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே இருப்பான். அதைப் போலி குருமார்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தானாக விலகல் என்பது நேர்ந்து விடும். ஒருசில நேரங்களில் மோசமான குருவிடம் இருந்து கூட ஒரு உண்மைச் சீடன் நல்ல விஷயங்களைக் கற்றுக் கரை தேர்ந்துவிட முடியும். ஆனால் அது விதிவிலக்கே ஒழிய பொதுவாக நிகழ்வதல்ல.

ஒரு குழந்தைக்கு அதன் தந்தையைக் காட்டுபவள் தாய். ஒரு சீடனுக்கு இறைவனைக் காட்டுபவர் குரு. ஏட்டுக் கல்வியை மட்டும் அளிப்பவர் ஆசிரியர். ஞானத்தெளிவை அளிப்பவரே குரு. உண்மையான குரு தன்னை நாடி நம்பிக்கையுடன் வருபவர்களுக்கு இருவிதமாக வழிகாட்டுவார். தகுதி உடையவர்க்கு தகுந்த வழிகாட்டுவார். தகுதி இல்லா விட்டாலும் நோக்கம் உயர்வாக இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் தகுதியை ஏற்படுத்தி பின்பு உயர்ந்த வழிகாட்டுவார்.

உண்மையான குருவின் உபதேசம் ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு மோர் விழுவது போலத் தான். அந்தக் குடத்தில் உள்ள பால் எப்படி இனி பாலாகவே இருந்து விட முடியாதோ அதே போல் அவரது சீடனும் முந்தைய அஞ்ஞான நிலையிலேயே தங்கி இருந்து விட முடியாது. அவரது உபதேசம் மிகப்பெரிய ஞான மாற்றத்தை அவனிடம் கண்டிப்பாக ஏற்படுத்தும்.

எனவே உண்மையான குருவை அறிவுக் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு கண்டுபிடிப்போம். அவர் மூலம் நாம் மேலானதொரு நிலைக்குப் பயணிப்போம்.

Friday, May 30, 2014

சூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்?

சூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்?
-

மனிதர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள்.நோய் நொடியில் விழக்கூடியவர்கள். தவறு செய்யக்கூடியவர்கள். மிகப் பெரிய அபத்தங்களுக்கு ஆளாகக்கூடியவர்கள். ஆனால் சூரியனை வழிபடுவதால் ஆரோக்கியமும் தீர்க்க ஆயுளும் உண்டாகும். சூரியனால் இடையறாது பெரும் உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சூரியன் ஒரு மகத்தான சக்தி. சந்திரன் இன்னொரு சக்தி. நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாமும் தனித்தனியே சக்தி வாய்ந்தவை. அவை பூமியோடு நெருங்கிய சம்பந்தமுடையவை. அவற்றின் தாக்கம் இங்கே இருக்கிறது. அப்படித் தாக்கம் இருக்கின்ற, தொடர்பு இருக்கின்ற, நல்லது செய்கின்ற கிரகங்களையும் சூரியனையும் சந்திரனையும் வழிபடுவதில் என்ன தவறு? எல்லா சக்தியும் வழிபடக்கூடியவை.  சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்கிறார். கடவுளின் பேச்சாக, கடவுளின் குணமாக, கடவுளின் உருவமாக, சூரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன. கடவுளை கண்டறிய முடியாது. பேசிப்புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சூரியனை வழிபடுவதில் தவறே கிடையாது. 

நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் எங்கிலும் சூரியவழிபாடு பலகாலமாக இருந்து வந்துள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தியர்கள் சூரியனை வழிபட்டு வந்துள்ளனர். அந்நாட்டை ஆண்ட பாரோ வம்சத்து அரசர்கள் தங்களை சூரியன் வழி வந்தவர்களாக கருதினர். அங்கும் உழவுத்தொழில் சிறக்க சூரியனை மக்கள் வழிபட்டனர். பாரசீகர்களின் வேதநூலான ஜெந்த் அவெஸ்தாவில் மித்ரன் என்ற பெயரில் சூரியன் குறிக்கப்படுகிறார். மித்ரன் என்ற பெயர் சூரியனுக்கு உண்டு. மாகர்கள் எனப்படும் பாரசீகர்கள் சூரிய ஆராதனைக்காக இந்தியா வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். கிரேக்கர்கள் சூரியனை அபொல்லோ என்ற பெயரிலும், ரோமானியர்கள் ஹைபீரியன் என்னும் பெயரில் வழிபட்டனர். தென்அமெரிக்காவிலுள்ள பெருநாட்டில் இன்காஸ் இனத்தவர்களிடமும் சூரியவழிபாடு இருந்தது.

குட்டிக்கதை:உண்மையான மதிப்பு தெரிந்தும்,கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்

குட்டிக்கதை:
ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன்
ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது..
அது வைரம் என்றறியாமல்,
விலை போகுமா என்ற
சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..
அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன்,
இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்..
ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற
எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்..
ஐந்து ரூபாய் அதிகம்
கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20
ரூபாய்க்கு பேரம் பேசினான்..
இதைக் கவனித்த
மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்..
ஆத்திரமடைந்த வியாபாரி,
அந்த வழிப்போக்கனை பார்த்து, “அட
முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்... அறிவில்லாமல்
விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்..
அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய
மதிப்பு அவ்வளவுதான்..
ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய
முட்டாள்” என்றான்..
சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும்,
கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்

* காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்’’

 
* காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்’’என்னது காக்கைக் கறி சமைத்து கருவாடு தின்பவர்தான் சைவர்களா என பதற வேண்டாம். 
* இதன் தமிழ் விளையாட்டும் பொருளும் பின்வருமாறு :காக்கை =கால் கை அளவு
கறி சமைத்து= காய்கறி சமைத்து கரு வாடு =கரு எனும் உயிர் வாடும் என்றுஉண்பர் சைவர்= உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்அதாவது சிவனை வழிபாடு செய்யும் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கால் வயிறு மட்டும் உண்பார்கள். இதுதான் அவர்களது அடிப்படை நியதி.

கோவில் வழிபாட்டு முறைகள்


 கோவில் வழிபாட்டு முறைகள்
ஆன்மிகம். மிகவும் உயர்ந்த சொல் இது. ஆனால், இன்றைய நிலையில் ஆன்மிகம் என்பது... "இந்தக் கோவிலுக்குப் போனால் அது கிடைக்கும்; அந்தக் கோவிலுக்குப் போனால் இது கிடைக்கும்" என்று, மக்களைத் தூண்டுவதாக இருக்கிறது.
* கோவில்களிலோ, கோஷ்ட தெய்வங்களின் திருவடிகளில், விரல்களின் நடுவில் கற்பூரத்தை வைத்துக் கொளுத்துவதும்; கோவிலின் உள்ளே சன்னிதிகளில் எல்லாம் விழுந்து வணங்குவதும்; சண்டிகேஸ்வரரின் சன்னிதியில், வேட்டி - புடவை ஆகியவற்றில் இருந்து நூல்களைப் பிய்த்துப் போடுவதுமாக - வழிபாட்டு முறைகளும் எங்கோ போய்க் கொண்டிருக்கின்றன.
* பிரதோஷத்தன்றோ, நந்தியின் கழுத்தில் கையைப் போட்டு, கனகச்சிதமாக பக்தி வெளிப்படுகிறது. இவையெல்லாமே தவறு! கோவில் அர்ச்சகராக இருந்தாலும் பூஜை நேரங்கள் தவிர, மற்ற நேரங்களில் விக்கிரகங்களைத் தொடக்கூடாது.
* இவையெல்லாம் ஆன்மிகம் அல்ல. ஏற்கனவே போட்டு வைத்த நல்ல வழி இருக்கும்போது, நாமாக ஏன் புதுப்புதுப் பாதைகளை உருவாக்கி, கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? முன்னோர் காட்டிய அந்தப் பாதையைப் பார்க்கலாம் வாருங்கள்! முன்னோர்களின் அந்தப் பாதை, அவர்களின் அனுபவத்தில் உண்டானது. அவர்களின் அனுபவங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து அனுபவிக்கலாம்.
* கோவிலுக்குச் செல்லும் போது செய்ய வேண்டியவைகளைப் பற்றியும், கோவிலின் உள்ளே செய்ய வேண்டியவைகளைப் பற்றியும், நமது ஆகம நூல்கள் விரிவாகவே கூறுகின்றன.
* அவற்றை உணர வேண்டியது நமது கடமை. உணர்ந்து செயல்பட்டால்தான், பலன் கிடைக்கும். ஆனால்...
* இப்போது, உதாரணமாக - என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றால், கைபேசிகளில் (செல் ஃபோன்களில்) சிம் (SIM) கார்டே போடாமல், பேச முயற்சிக்கிறோம். நடக்குமா? அதுபோல, ஆலயத்தில் நாம் செய்யவேண்டியவைகளைச் செய்தால்தானே பலன் கிடைக்கும்?
* கோவிலை நெருங்கியதும், கோபுரத்தின் அருகே (கீழே) நின்று, இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும். ஆனால் இந்த நியதி பெண்களுக்குப் பொருந்தாது. ஆண்களுக்கு மட்டுமே! பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட வேண்டும். அதற்கு மேல் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிடக் கூடாது.
* அடுத்து, கோவிலின் உள்ளே நுழைந்ததும், கொடி மரத்தின் அருகில் விழுந்து கும்பிட வேண்டும். கோவிலின் உள்ளே நாம் விழுந்து கும்பிட வேண்டிய இடம் இது ஒன்றுதான்.கொடிமரத்தைத் தாண்டி, உள்ளே உள்ள எந்தச் சன்னிதியிலும் விழுந்து கும்பிடக் கூடாது.
* அடுத்து, கொடிமரத்தைத் தாண்டியதும் பிராகார வலம் வரவேண்டும். அவ்வாறு வலம் வரும்போது, அவசர அவசரமாக ரயிலைப் பிடிக்கும் அவசரத்தோடு வரக்கூடாது. இதற்கும் முன்னோர்கள் ஒரு வழிமுறையை வைத்திருக்கிறார்கள். அதாவது... நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண், கால்களில் விலங்கிட்டு, கைகளில் ஒரு பாத்திரம் நிறைய எண்ணெயுடன் நடந்து வரும்போது, சொட்டு கூடச் சிந்தாதபடி மெளனமாக நடந்து வருவதைப்போல, வலம் வர வேண்டுமாம்.
* இதற்கு முக்கியமான காரணம்... கோவில் பிராகாரங்களில் குறுக்கும் நெடுக்குமாகக் கற்களைப் பாவியிருப்பார்கள்; பதித்திருப்பார்கள். அந்தக் கற்கள் சற்று சொரசொரப்பாக, சிறுசிறு முட்கள் கொண்டதைப் போல இருக்கும்.அக்கற்களின் மேல் கால்களைப் பதித்து மெள்ளமாக நடந்து வரும்போது, அக்கு பிரஷர் போல நரம்புகள் தூண்டப்பட்டு ஆரோக்கியம் கிடைக்கும்.இதன் காரணமாகவே, பிராகாரங்களில் மெள்ளமாக நடந்து வலம் வரவேண்டும் என்றார்கள்.
* கோஷ்ட தெய்வங்களின் கால் விரல்களில் கற்பூரத்தை வைத்துக் கொளுத்தக் கூடாது.
* அடுத்து; சண்டிகேஸ்வரர் சன்னிதியில் பலர், வேட்டியில் இருந்தும் புடவையில் இருந்தும் நூல்களைப் பிய்த்து, சண்டிகேஸ்வரர் மீது போடுவதைப் பார்த்திருக்கலாம். அவர்களைக் கேட்டால், "இவ்வாறு செய்தால், புது ஆடை கிடைக்குமாம்" என்று பதில் வருகிறது. அது உண்மைதான்! ஒரு வேட்டியில் இருந்தோ புடவையில் இருந்தோ, தினந்தோறும் நூல் இழைகளைப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தால், வேட்டியும் புடவையும் போய் விடும். புது ஆடை வாங்கித்தானே ஆகவேண்டும்?
* சண்டிகேஸ்வரர் சன்னிதியில், இன்னொரு கூத்தும் தினந்தோறும், அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பார்த்ததைப் போல, நூல் கிழித்துப் போடுவது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம்...
பலர், சண்டிகேஸ்வரர் சன்னிதியில் பலமாகக் கைகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களிடம் கேட்டால், "இது செவிட்டு சாமி சார்! இப்படிப் பலமாகக் கை தட்டினால்தான், இது விழித்துக் கொள்ளும்" என்று பதில் வருகிறது. நல்ல வேளை! யாராவது நன்கொடையாளர்களைப் பிடித்து (ஸ்பான்ஸர்), காத்து கேட்கும் கருவியை வாங்கிப் பொருத்தாமல் விட்டார்களே!
* பெரிய புராணத்தில் வரும் சண்டிகேஸ்வரர் வரலாற்றின்படி, சிவன் சன்னிதியில் அளிக்கப்படும் பிரசாதங்களை (விபூதி - குங்குமம் முதலானவற்றை) சண்டிகேஸ்வரர் சன்னிதியில் சமர்ப்பணம் செய்து, "தரிசனப் பலனைத் தந்தருளுங்கள்" என வேண்டி, அதன்பின் அவற்றை நாம் அணிய வேண்டும்.
* அடுத்து; பிரதோஷத்தன்று முறைப்படி சிவ தரிசனம் செய்தால், கடன் தொல்லைகள் நீங்கும்; துயரங்கள் விலகும் என நம் ஞான நூல்கள் கூறுகின்றன.அது என்ன முறைப்படி? அப்படியென்றால், இப்போது நடப்பவை சரியில்லையா? சரியில்லைதான்! பிரதோஷத்தன்று நந்தியின் கழுத்தில் கையைப் போட்டு அதன் காதில் முணுமுணுப்பதும், முழுமையாக அப்பிரதட்சிணமாக (எதிர்வலம்) வருவதும், பல கோவில்களில் நடந்து கொண்டிருக்கின்றன.
* இன்னும் சிலர் நந்தியின் முன்னால், காப்பரிசி இருப்பதைப் பார்த்துவிட்டு, அவர்களும் காப்பரிசியைக் கொண்டு வந்து நந்தியின் முன்னால் போடுகிறார்கள்.காப்பரிசியை நந்தியின் முன்னால், குருக்கள் ஏன் போட்டு வைத்தார்? பிரதோஷத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன? - என்பதைப் பார்க்கலாம்.
*இது, பிரதோஷத்தன்று மட்டும் செய்ய வேண்டிய வழிபாட்டு முறை!
* வழக்கப்படி நாம் செய்யக்கூடிய முறையை விடுத்து, நந்தியின் பின்னால் நின்று அதன் இரு கொம்புகளின் வழியாக, சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.அதன்பின், வழக்கப்படி வலம் வராமல், எதிர்வலமாக வந்து, அபிஷேகத் தீர்த்தம் வரும் வழி அல்லது சண்டிகேஸ்வரர் சன்னிதி வரை சென்று திரும்ப வேண்டும்.சில கோவில்களில், அபிஷேக தீர்த்தம் வரும் வழியை மூடி வைத்திருப்பார்கள். அங்கு, சண்டிகேஸ்வரர் சன்னிதியை எல்லையாக வைத்துக் கொள்ளலாம்.இவ்வாறு திரும்பி வந்து, நாம் வழக்கப்படி வலம் வரும் வழியில் சென்று, அந்தப் பக்கமாக சண்டிகேஸ்வரர் சன்னிதி வரை வந்து அத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
* இந்த முறைப்படி, மூன்று முறை வலம் வரவேண்டும். இவ்வாறு வலம் வருவது, 'சோம சூத்ரப் பிரதட்சிணம்' அல்லது 'சோம சூக்தப் பிரதட்சிணம்' எனப்படும். (முழுமையாக எதிர்வலம் வரக்கூடாது) இது; ஆலகால விஷத்தில் இருந்து காப்பாற்றுமாறு தேவர்கள் கிளைக்குச் சென்று வேண்டிய போது, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஓடியதைக் குறிக்கும்.
* அடுத்து - காப்பரிசியைப் பற்றிய தகவல்;
* ஆலகால விஷத்தின் கொடுமை தாங்காமல், தேவர்கள் எல்லாம், சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள்.சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தைத் தன் திருக்கரங்களில் ஏந்தி உண்டார். (தெரிந்த தகவல் தான் இது) அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நந்தி பகவானுக்கு அகங்காரம் உண்டாயிற்று. அவர், "ஹ! என்ன இது? ஒன்றுமில்லாத இந்த விஷயத்திற்குப் போய், தேவர்கள் இந்தப் பாடு படுத்துகிறார்கள்! இதெல்லாம் ஒரு விஷமா? இதற்குப் போய், பயப்படலாமா? நான் பயப்படுகிறேனா என்ன?" என்று மிகவும் அலட்சியமாக நினைத்தார்.அது, நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளிப்பவனைப் பார்த்து, கரையில் இருப்பவன், "என்னப்பா இது? இதற்குப் போய்க் கவலைப் படலாமா? நீ இன்னுமா நீச்சல் கற்றுக் கொள்ளவில்லை? நான் உன்னைப் போல் கவலைப் படுகிறேனா என்ன?" என்று கேட்பதைப் போல இருந்தது.
* நந்தியின் உள்ளத்தில் எழுந்த ஆணவம், சிவபெருமானுக்குத் தெரிந்தது. அதனால் சிவபெருமான் உடனே நந்தியை அழைத்து "நந்தி! இதோ இந்தக் கையால்தான் நஞ்சினை வாங்கி உண்டேன். இந்தா! இந்தக் கையை முகர்ந்து பார்!" என்று தன் கையை நீட்டினார்.நந்தி பகவானும் அதன்படியே, சிவபெருமானின் அந்தக் கையை முகர்ந்து பார்த்தார்.அதே விநாடியில்... நந்தி பகவான் விஷத்தின் வேகம் தாங்காமல், தலைசுற்றி மயங்கிக் கீழே விழுந்தார்.
அதைப் பார்த்து அனைவரும் திடுக்கிட்டார்கள்.அப்போது சிவபெருமான் பார்வதியிடம், "தேவி! இந்த நந்திக்கு நீ காப்பரிசியைச் செய்து கொடு!" என்றார்.பார்வதி உடனே காப்பரிசியைத் தயாரித்து , நந்திக்குக் கொடுத்தாள்.விஷவேகம் தணிந்து நந்தி பகவான் எழுந்தார். அவரிடம் இருந்த ஆணவம் முழுவதுமாக நீங்கியிருந்தது.
அதை நினைவு கூருமுகமாகவே, அர்ச்சகர் நந்திக்கு முன்னால் காப்பரிசியைச் சமர்பிக்கிறார்.ஆணவ நீக்கத்தையே, காப்பரிசி சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி குறிக்கிறது. இந்த சோமசூத்ர வழிபாடு அல்லது சோமசூக்த வழிபாடு என்பது, பிரதோஷத்தன்று மட்டுமே செய்ய வேண்டும். மற்றைய நாட்களுக்கு இது பொருந்தாது.
* ஆலயங்களில் விபூதியோ - குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் வாங்க வேண்டும். வாங்கிய உடன், அவற்றை இடது கையில் போட்டுக் கொள்ளக் கூடாது. இடது கையில் ஒரு தாளை வைத்து, அதில் மாற்றிக் கொள்ளலாம்.
* ஆலயங்களில் சுவாமிக்கும் வாகனத்திற்கும் நடுவில் போகக் கூடாது.
இவ்வாறு உள்ள வழிமுறைகளை அறிந்து, அதன்படி நடப்பதே ஆன்மிகத்தை அடைய வழி வகுக்கும்.
** அப்படியென்றால், இவ்...வளவு நேரம் பார்த்தது ஆன்மிகம் இல்லையா? இல்லை! அவையெல்லாம் வழிமுறைகள் மட்டுமே. அவற்றைச் செய்வதனால் உண்டாகும் பலன்தான் ஆன்மிகம்.
* இகம் - பரம் என்று இரண்டு சொல்கிறோமல்லவா? இவற்றில் இகம் என்பது, இகலோகத்திலேயே அதாவது இந்த உலகில் நாம் இருப்பதையே குறிக்கும். பரலோகம் என்பது மேலுலகைக் குறிக்கும். இதன்படி;ஆன்ம + இகம் - ஆன்மிகம் என்பது, இந்த உலகில் நாம் இருக்கும்போதே, ஆன்ம அமைதி - ஆன்ம சந்தோஷம் - ஆன்ம நிம்மதி என்றெல்லாம் சொல்கிறோமே - அதை அடைவதே உண்மையான ஆன்மிகம்.

பைரவர்

சிவாலயங்களில் நீங்கள் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும். ஏனெனில் பைரவரை மனம் உருகி வழிபடாவிட்டால், நீங்கள் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான நோக்கமே பயன் தராமல் போய் விடக் கூடும்.
அந்த அளவுக்கு பைரவர் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள். உங்களுக்கு எப்போதாவது இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்... மனம் கலங்காமல், நம்பிக்கையுடன் "பைரவா... காப்பாற்று'' என்று அழைத்துப் பாருங்கள், காகம் விரட்டும் போது கோழி தன் குஞ்சுகளை எப்படி தன் இறக்கைக்குள் வைத்து காப்பாற்றுகிறதோ, அப்படி ஓடோடி வந்து பைரவர் உங்களை காப்பாற்றுவர்.
பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால். நவக்கிரக தோஷங்கள் விலகி, தீ வினைகள் அழிந்து, பிறவிப் பயனை உணர்ந்து, சுப மங்களமாக, தலை குனியா வாழ்க்கையை நிச்சயம் வாழ்வீர்கள்

ஐம்பூதங்களையும் அடக்கிய ஆஞ்சநேயர் ராமா என்ற இரண்டு எழுத்தில் அடங்கி விடுகிறார்

ஆஞ்சநேயர்
ஸ்ரீ ஆஞ்சநேயரை பஞ்ச பூதங்களை வென்றவர் என்று சொல்வது ஏன்?
* அவர் வாயுகுமாரன் என்பதனால் காற்றை வென்றவர் ஆனார்.
* இராம நாம சக்தியால் சமுத்திரத்தை தாண்டியதனால் நீரை வென்றவர் ஆனார்.
* பூமாதேவியான சீதாபிராட்டியின் பூரண அருளை பெற்றதனால் நிலத்தை வென்றவர் ஆனார்.
* இலங்கையில் வாலில் வைத்த தீயால் இலங்காதகனம் செய்ததனால் நெருப்பை வென்றவர் ஆனார்.
* வானத்தில் நீந்திடும் ஆற்றல் உடையவரானதால் ஆகாயத்தை வென்றவர் ஆனார்.
இப்படி ஐம்பூதங்களையும் அடக்கிய ஆஞ்சநேயர் ராமா என்ற இரண்டு எழுத்தில் அடங்கி விடுகிறார். அந்த ராம நாமத்தை யார் முழுமனத்தோடு சொல்கிறார்களோ அவர்களுக்கும் ஆஞ்சநேயர் அடங்கி விடுகிறார்.
Photo: ஆஞ்சநேயர்
ஸ்ரீ ஆஞ்சநேயரை பஞ்ச பூதங்களை வென்றவர் என்று சொல்வது ஏன்?
* அவர் வாயுகுமாரன் என்பதனால் காற்றை வென்றவர் ஆனார்.
* இராம நாம சக்தியால் சமுத்திரத்தை தாண்டியதனால் நீரை வென்றவர் ஆனார்.
* பூமாதேவியான சீதாபிராட்டியின் பூரண அருளை பெற்றதனால் நிலத்தை வென்றவர் ஆனார்.
* இலங்கையில் வாலில் வைத்த தீயால் இலங்காதகனம் செய்ததனால் நெருப்பை வென்றவர் ஆனார்.
* வானத்தில் நீந்திடும் ஆற்றல் உடையவரானதால் ஆகாயத்தை வென்றவர் ஆனார்.
இப்படி ஐம்பூதங்களையும் அடக்கிய ஆஞ்சநேயர் ராமா என்ற இரண்டு எழுத்தில் அடங்கி விடுகிறார். அந்த ராம நாமத்தை யார் முழுமனத்தோடு சொல்கிறார்களோ அவர்களுக்கும் ஆஞ்சநேயர் அடங்கி விடுகிறார்........ அனைவருக்கும் அன்பான வணக்கம்....!

மனையடி சாத்திரமும் கிணறும்

மனையடி சாத்திரமும் கிணறும்!
மனையில் வீடு அமைக்க அடிக்கல் நாட்டுவதில் துவங்கி வீட்டின் அமைவு, கிணறு தோண்டும் இடம், கதவு, வாசல் படி வைக்கும் இடம் வரை அனைத்து விவரங்களும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது.முதலில் கிணற்றை அமைத்த பின்னரே மனை அமைக்கும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர்.
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது.ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகளை சித்தர்கள் அருளிச் சென்றிருக்கின்றனர்.
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்.
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி?
அதற்கும் சித்தர்கள் தீர்வு சொல்கிறார்கள்...
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.
சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று....கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி?
அதற்கும் தீர்வுகளை சொல்கிறார்கள்...
கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை அவதானித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் அவதானித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.
சுவாரசியமான தகவல்கள்தானே!...இப்படியான பல தகவல்கள் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. இவை முறையே சேகரிக்கப் பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் படுதல் அவசியம்.

ஆதி சேஷ ஆனந்த சயண! - இதன் உள்ளர்த்தம்

ஆதி சேஷ ஆனந்த சயண! -  இதன் உள்ளர்த்தம்

எலோருக்கும் எளிதில் விளங்க வேண்டும் என்ற நோக்கில்! சமயங்கள்! கொள்கைகள் கடந்த விளக்கம்!
ஆனந்தமாய் ஒருவன் இருக்க வேண்டும் என்றால்! அவனுடைய தேவைகள் அனைத்தும் சம்பூரணமாய் நிறைவேறி இருக்க வேண்டும். இந்த சம்பூர்ணத்தை உணர்வது எது? நம் மூலைதான்!இதை உணர்த்துகிறது. இந்நிலை தொடர! தொடர, அது சயனமாகி! சஹாசரத்தில், நிலையான ஆனந்த மயமாகி! சயனமாகிறது.
இந்நிலை பரிபூரணன் என்று அழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயண மூர்த்தி கொண்ட கோலத்தை குறிக்கும். பரிபூரணன் என்றல் என்ன? 72000 நாடிகளும் தன் வயப்பட்டு, 7 சக்ரங்கள் வழி! இடா, பிங்களா, சுஸ்மான நாடிகள் மூலம் சஹாசரத்தை அடைந்தது,
நிலையற்ற ஆனந்தத்துடன்! ஆயிரம் இதழ்கள் சுறந்த அமிர்தகடல்(பாற்கடல்)கமலத்தில்ஆனந்தமாய்! குண்டலினி பாம்பு (ஆதி சேஷன்) குடை பிடிக்க, தன் சக்தியாகிய மகா லெட்சுமி! நாதன் தாழ் பணிந்து பணி செய்ய ஆனந்தமாய் சயனம் செய்கின்றார்! ஸ்ரீ மந் நாராயணன்.
மனம் ஒடிங்கினால்! அனைத்தும் ஒடுங்கும். காரணங்களும்! அந்தகரணங்களும்! அடங்கி ஒடுங்குமிடம் நம் மூளை. மூளை சஹாசரத்தில்தான் இருக்கிறது. அது Cerebrospinal fluid (ஆயிரம் இதழ் கொண்ட பாற்கடல்) என்ற அமிர்தத்தில்தான் மிதக்கிறது. முடிவாக! நம் தேவைகள் மனதோடு பினைந்த்திருக்கின்றன! மனமோ, நம் மூலையோடு பினைந்திருக்கிறது. ஆகவே அடங்கி ஒடிங்கி ஆனந்த மாயமான மூலைக்கு! எந்நாளும் ஆனந்த சயனம்தான்! ஸ்ரீ மந் நாராயணனுடைய இந்த அற்புத சயனம் இதைதான் விளக்குகின்றதோ! 

பித்ரு தோஷம்


பித்ரு தோஷம்
ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும். நிழல் கிரகங்களான் ராகுவும், கேதுவும் நமது முன்வினைகளை பிரதிபலிப்பவை. மேலும் ராகு தந்தை வழி பாட்டனாரைக் குறிக்கும் கிரகம் ஆகும். அதே போல் கேது தாய் வழி பாட்டனாரைக் குறிக்கும கிரகம் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும், ஒருவர் செய்த முன்வினை கணக்கினை தெளிவாக காட்டுபவை ஆகும்.
ராகுவும், கேதுவும் அவரவர் முன்னோர்கள் செய்த பாவ-புண்ணிய கணக்கினை தெளிவாக காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த பாவங்களை தீர்க்க முடியுமா அல்லது முடியாதா என்பதையும் காட்டும் கிரகங்கள் ஆகும். ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு பாம்பு கிரகங்களே கிரகங்களில் மிகவும் வலிமையானவை. ஆனால் தற்கால சோதிடமோ ராகு மற்றும் கேது ஆகியவற்றிற்கு பலமில்லை என்று கூறுகின்றன். ராகுவை ஞான-போக காரகன் என்றும் கேதுவை மோட்ச காரகன் என்றும் அழைப்பர்.
முன்பு குறிப்பிட்டவாறு ஜாதகத்தில் ராகு, கேது அமைந்திருந்தால் ஜாதகரின் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை, குழந்தைப்பேறு இவற்றில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கான காரணம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களே. ஒருவர் தனது முற்பிறவிகளில் அவர் செய்த பாவங்களே அவருடைய இப்பிறவியில் ஜாதகத்தில் தோஷங்களாகவும், முற்பிறவிகளில் செய்த புண்ணியங்களே அவரது ஜாதகத்தில் யோகங்களாகவும் அமைகின்றன.
அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்களிடமிருந்து இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை பெறுவதால் நம் முன்னோர்களின் பாவ-புண்ணியங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதி ஆகும். நாம் நமது முன்னோர்களின் பாவத்தினை அனுபவித்தால் நம் முன்னோர்களின் புண்ணியத்தினையும் அனுபவித்தே ஆக வேண்டும். நம் முன்னோர்களின் பாவமும் நம்முடைய பாவமும் சேர்ந்து தலைமுறை தலைமுறைகளாக நம்மை பின்தொடர்கின்றன என்பதே உண்மை ஆகும்.
அவ்வாறு நாம் பாவங்களை அனுபவிக்கும் காலத்தில் ஒரு சில நன்மைகளும் நமக்கு விளையும். அவை நம்முடைய புண்ணியம் மற்றும் நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தினால் விளையும் நன்மைகள் ஆகும். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய முன்னோர்களின் பாவத்தினையும், நம்முடைய பாவத்தினையும் அழித்து நம் முன்னோர்கள் மற்றும் நம்முடைய ஆன்மாக்கள் நற்கதி அடையுமாறு செய்தல் வேண்டும். நமது பித்ருக்களின் ஆன்மா நற்கதி அடைய தக்க பரிகாரங்களை மேற்கொள்ளல் வேண்டும்.
பித்ரு தோஷம் எதனால் வருகிறது?
பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.
ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் முறையற்ற கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது.
பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.
நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம். அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம். நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.
நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார். நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் வழிபாடு ஆவி வழிபாடு ஆகும். இதுவே நம் பண்டைய தமிழர்களின் முக்கிய வழிபாடு ஆகும். இந்த வழிபாடு தற்போது மறைந்து விட்டது.
ஆவிகள் என்றவுடன் நம்மில் சிலர் பயந்து போய் இருக்கலாம். பயம் கொள்ள தேவையில்லை. நமது முன்னோர்களின் ஆவிகள் மறுபிறப்பு எய்தும் வரை நமது நலனில் அக்கறை கொண்டவையாகவே இருக்கும். இத்தைகய நம்முடை முன்னோர்களின் ஆவிகளுக்கு நாம் செய்யும் வழிபாடு தான் பிதுர்கடன் எனப்படுகிறது. நமது பித்ருக்கள் தான் கடவுளரின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள். நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றித் தருபவர்கள் நமது பித்ருக்களே.
எனவே நமது நலனில் அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும். அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியினால் வாடுவர். அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் நமது இல்லங்களில் உள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவர். அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.
வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர். இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள். எனவே நாம் அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது. மேலும் நமது பித்ருக்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதி படுத்த வேண்டும்.
பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது. இந்த தோஷம் உள்ள உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை. இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான். எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும்.
பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது. மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும். பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அதனை போக்கிட வேண்டும். அவ்வாறு நீங்கிய பின்னரே அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் வரும்.

Thursday, May 29, 2014

நமச்சிவாய" -

ஓம்" - திருமுறைகளில் இல்லாத ஒன்று
பன்னிரு திருமுறைகளில் எங்குமே ஒலிக்கப்படாத ஒலி
...
"நமச்சிவாய" - நமக்கு துணையாகும் ஒரே நாமம்
நற்றுணையாவது நமச்சிவாயவே - அப்பர் வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே - சம்பந்தர் நமச்சிவாய வாழ்க - மாணிக்கவாசகர் நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே - சுந்தரர்
"ச்" இல்லாத நமசிவாய - இகவாழ்வில் சுகம் தராது
உச்சரிக்கும் போது "ச்" தவறாமல் சேர்த்து உச்சரிக்க வேண்டும். "ச்" இல்லாத "நமசிவாய" இக வாழ்வில் சுகம் தராது
"ஓம் நமசிவாய" - வினையைப் பெருக்கும்
"ஓம்" உடன் சேர்த்து நமச்சிவாய சொல்லக்கூடாது. சொன்னால் அது உயிருடன் வினையை சேர்த்துக் கட்டும்; விடுவிக்காது.
"நமச்சிவாய" - வினைகளை விலக்கும்
நமச்சிவாய என்பது நாதன் நாமம் அதாவது எம்பெருமானின் திருநாமம். இது மந்திரமல்ல , மெய்ப்பொருள், மெய், சிவம்
தவறாமல் சொல்வோம்
நாளும் இரவும் நாங்கள் சொல்வோம் நமச்சிவாய நமச்சிவாய நம்மைக் காக்கும் இறைவன் நாமம் நமச்சிவாய நமச்சிவாய

முருகனை விநாயகரின் தம்பி என்றும் சிவனின் மகன் என்றும் சிலர் கூறுவர்



முருகனை விநாயகரின் தம்பி என்றும் சிவனின் மகன் என்றும் சிலர் கூறுவர். உன்மை அதுவல்ல என்பதே சைவத்தின் கொள்கை. உண்மை, அறிவு, இன்பமா...ய் விளங்கும் சிவத்தின் இன்னொரு அருள் வடிவமே தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகன். எல்லாவற்றையும் கடந்தும் உள்ளும் இருக்கின்ற சிவம் என்கின்ற பரம்பொருள் தனது சிறப்பு நிலையிலிருந்து பொதுநிலைக்கு உயிர்களுக்கு அருள் புரிவதற்கு எடுத்து வந்த இன்னொரு வடிவமே முருகனின் வடிவம். அச்சிவம் ஓசை வடிவமாக, பிரணவ வடிவமாக, ‘ஓம்’ வடிவமாக வந்தபோது விநாயகர் என்று கூறப்படுகிறது. அதேபோன்று, அச்சிவம் அறிவு வடிவாக, ஒளி வடிவாக வருகின்றபோது அதை முருகன் அல்லது ஞானபண்டிதன் என்கிறோம். எனவேதான் முருகனுக்கு அருவுருவமாக ஆழ்ந்து அகன்று நுண்ணியதாக இருக்கின்ற வேலைச் சமமாகச் சொல்கின்றோம்.
உலகைத் தோற்றுவித்து உயிர்களுக்கு அருள்புரிய இறைவன் முதலில் ஓசையாகவும் பின்பு ஒளியாகவும் தன் திருவருளை வெளிப்படுத்தியதாகச் சைவம் குறிப்பிடும். எனவேதான் ஓசையாக இருக்கின்ற விநாயகர் வடிவத்தை அண்ணன் என்றும் அடுத்து வந்த ஒளிவடிவத்தை முருகனாகக் கூறி தம்பி என்றும் அழைக்கும் வழக்கு வந்தது. முருகனும் சிவமும் வேறு அல்ல என்று பாமர மக்களுக்குப் புராணம் மூலம் கூற வந்ததே கச்சியப்ப முனிவரின் கந்த புராணம். முருகனும் சிவமும் வேறு அல்ல என்பதை, இப்படிக் கூறுவர்.
‘அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பது ஓர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய ‘
- கந்தபுராணம்