Thursday, May 29, 2014

பொன்னான வாழ்வை அருளும் அட்சய திருதியை என்ன செய்ய வேண்டும்

எந்தெந்த நாட்களில் எதை எதை வாங்கி வைத்தால் நலமாக இருக்கும் வளர்ச்சி அடையும் என்றெல்லாம் பசூர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் பிரதானமாக வெள்ளை நிறப் பொருட்கள் வாங்கினால் நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு மஞ்சள் நிறப் பொருட்கள் வாங்குவது நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

வெள்ளை நிறத்திற்குப் பிளாட்டினம் வாங்கலாம். மஞ்சள் நிறத்திற்கு தங்கத்தை வாங்குங்கள் என்கிறார்கள். இதெல்லாம் ஆன்மீக ரீதியாக சரியானதல்ல. ஏற்புடையதும் அல்ல. தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

வெள்ளியும் வாங்கலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை. பல நூல்கள் வெள்ளியை மிகவும் உயர்வாக குறிப்பிடுகிறது. அதற்குப் பிறகு தான் தங்கத்தையே கொண்டு வருகிறது. அதனால் வெள்ளியும் வாங்கலாம். ஆனால், தங்கம் வாங்கினால் தான் நல்லது என்பது தவறு. பொதுவாக தானியங்களில் தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள்.

அதனால் தான் திருமணம் முடிந்த பெண்கள் முதன் முதலாக மாப்பிள்ளை வீட்டிற்கு வரும் போது மரக்காவில் அரிசி போட்டு அதன் மீது காமாட்சி விளக்கு ஏற்றி அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் உள்ளே வரச் சொல்வார்கள். அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது.

(கைக்குத்தல் அரிசி தான் முனை முறியாத அரிசி) அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது. அதற்கடுத்து மஞ்சள். இதில் தான் மகிமையும் உள்ளது. மஞ்சள் தான் எல்லா வகையிலும் நல்லது தரக்கூடியது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம். மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம்.

இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. அடுத்தது, அட்சய திருதியை விரதம் இருப்பது பற்றி பலருக்கு பலவிதமான சந்தேகம் உள்ளது. அட்சய திருதியை தினத்தன்று விரதம் இருக்க விருப்பம் உள்ளவர்கள் இருக்கலாம்.

ஆனால் கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. உத்திர கால விரதம் என்ற நூலில் கூட, அன்றைக்கு தானம் செய்யுங்கள் என்று தான் சொல்கிறது. அன்னதானம் செய்யுங்கள். வஸ்திர தானம் துணி தானம் கொடுங்கள். அதாவது அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும். காசாக கொடுக்கக்கூடாது.

அவர்களுடைய தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இவை தவிர, அட்சய திருதியை அன்றைக்கு நிதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்து மந்திரங்கள் சொல்லி திதி கொடுக்க வேண்டும்.

அப்படி திதி கொடுக்கும் போது வாழைக்காய், பச்சரிசி, துணி, பணம் கொடுத்து தானே திதி கொடுக்கிறோம். அதுவும் ஒரு வகையான தானம் தான். எல்லாவற்றையும் தாண்டி மனதார, வாயார, வயிறார யாராவது வாழ்த்தினால் தான் அட்சய திருதியை அன்று நமக்கு நல்லது நடக்கும். அதற்கு தானம் செய்யுங்கள்.

No comments:

Post a Comment