Tuesday, June 17, 2014

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 22

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 22

'சத்தியம் எங்கே இருக்கிறதோ அங்கே ஸ்ரீகண்ணனும் இருப்பான். ஏனெனில், அந்தச் சத்தியம் என்பதே சாட்ஷாத் அவன்தானே!' என்று போற்றுகின்றனர் வைணவப் பெருமக்கள்.

பகவான் இருக்குமிடத்தில் சத்தியம் நிறைந்திருக்கும். பஞ்ச பாண்டவர்களிடம் இருந்த சத்தியமும் தர்மமும்தான் அவர்களைக் காத்தன. அதாவது, பகவான் பாண்டவர்களுடன் இருந்ததால்தான் அவர்கள் வென்றனர்.

''ஒரேயொரு பாணத்தில் பாண்டவ வம்சத்தில் உள்ள அனைவரையும் அழித்துவிட முடியும். ஆனால், அவர்களுக்கு ரட்சகனாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இருக்கிறாரே... அவர் மட்டும் இல்லையென்றால், விரல் சொடுக்கும் நேரத்துக்குள் அழித்துவிடலாம்'' என பீஷ்மரும் துரோணரும் சொன்னார்கள்.

ஆச்சார்யர்கள் சொன்னதை விடுங்கள்... ஸ்ரீபரமேஸ்வரனே சொல்கிறார்... ''கண்ணபிரான் அவர்களுடன் இருக்கும் வரைக்கும், பாண்டவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்று!

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவனை மனதார ஸேவித்தால், சத்தியத்துடனும் தர்மத்துடன் நிறைவாக வாழலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

'சரக சம்ஹிதை’யின் ஒளஷத சாஸ்திரம், அற்புதமாக இதை விவரிக்கிறது. 'எப்படி வாசுதேவனுக்குத் தோல்வி என்பதே கிடையாதோ, இந்தச் சமுத்திரம் எப்படி வற்றாமல் இருக்கிறதோ, என் தாயாரின் திருமணத்தை எப்படி நான் பார்த்தது கிடையாதோ... இந்த சத் வாக்கியங்கள் அனைத்தும் உண்மையானதைப் போல, இந்த மருந்தும் வேலை செய்து குணமாக்கும்’ என்கிற மந்திரத்தைச் சொல்லியபடி, மருந்து தயார் செய்வார்களாம்.

இத்தனை பெருமைகளைக் கொண்டவன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. இதனால்தான், அபராஜிதன் எனும் திருநாமம் அமையப் பெற்றான். அபராஜிதன் என்றால், தோல்வியே இல்லாதவன் என்று அர்த்தம்!

பகவானின் ஒவ்வொரு அவதாரத்துக்கும் அவனுடைய ஒவ்வொரு திருநாமத்துக்கும் அளப்பரிய சக்தி உண்டு. அந்தக் காரணங்களைத் தெரிந்து கொண்டால், காரியங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம். உடுத்துகிற ஆடை, பஞ்சில் இருந்து வருகிறது; அந்தப் பஞ்சு, புடவையாகவும் வேஷ்டியாகவும், சட்டையாகவும் துண்டாகவும் எப்படியெல்லாம் மாறுகிறது பார்த்தீர்களா? பகவானின் திருமேனி அவதாரமும் திவ்விய நாமங்களும் அப்படித்தான்!

சஜாதிபய பேதம், விஜாதிபய பேதம், ஸ்வத்த பேதம் என மூன்று பேதங்கள் உள்ளன. அதாவது, தென்னையும் வாழையும் மரம்தான்! ஆனால், தென்னை என்பது ஒரு வகை மரம்; வாழை என்பது வேறொரு வகையானது! ஆனால், இரண்டுமே மரம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. இது, சஜாதிபய பேதம்!

அடுத்து, விஜாதிபய பேதம். அது வேறு, இது வேறு. அதாவது, ஒன்று மரமாகவும், இன்னொன்று மலையாகவும் இருக்கிறது. ஆகவே, மரத்தையும் மலையையும் எப்படி ஒரே வகை என்று சொல்ல முடியும்?

மூன்றாவதாக, ஸ்வத்த பேதம். அதாவது ஒரு மரம் இருக்கிறது. அதில் வேர், கிளை, இலை, பழம் என அனைத்தும் இருக்கின்றன. இப்போது, வேரைப் பார்த்து மரம் என்பீர்களா? கிளையை அல்லது இலையைப் பார்த்து மரம் என்று சொல்வீர்களா? வேரை வேர் என்றும் கிளையை கிளை என்றும், இலையை இலை என்றும் கனியை கனி என்றும்தானே சொல்வோம்?! மொத்தமாக மரம் என்று சொன்னாலும், தனித்தனியே ஒவ்வொரு பெயருடன் வேறுபட்டுத் திகழ்கின்றன, பார்த்தீர்களா?

இறைவன் எனும் பிரமாண்டமானவனும் இப்படித்தான்! பரமாத்மாவான அந்தப் பரந்தாமன், அனைத்துக்கும் அப்பாற்பட்டவன். எல்லாமுமாக இருப்பவனும் அவனே; எதுவுமற்றுத் திகழ்பவனும் அவனே! ஏகஹ என்றும் ந ஏகஹ என்றும் ஸ்ரீகிருஷ்ணனை இரண்டு விதமாகவும் அழைப்பது அதனால்தான்! இதைச் சொல்லும் விதமாகத்தான், உணர்த்துகிற வகையாகத்தான் அவனுடைய ஒவ்வொரு திருநாமமும் அமைந்தது.

'நீராய் நிலனாய்...' என்று துவங்குகிற பாடல் உண்டு. அதில் நீராகவும் இருக்கிறாய்; நிலமாகவும் இருக்கிறாய்; நெருப்பாகவும் இருக்கிறாய்; காற்றாகவும் இருக்கிறாய் என்று ஆழ்வார் வியந்து பாடுவார். அந்த வியப்பின் நிறைவாக, 'அட போப்பா... உன்னை எப்படிக் கூப்பிடுறதுன்னே எனக்குத் தெரியலை!' என்று ஏக்கமாகச் சொல்வார். ஆனால் ஒரு விஷயம்... இங்கே பல இடங்களில், வரிகளில்... இறைவன் ஒருவனே என்பதைத் தெளிவுறச் சொல்லிக் கொண்டே வருகிற உத்தி ரசனைக்கு உரியது!

மண்ணை எடுத்துச் சாப்பிட்டான் கண்ணன். இதை பலராமன் யசோதைக்குச் சொல்ல... 'எல்லாரும் பொய் சொல்றாங்கம்மா... நான் மண்ணைச் சாப்பிடலை’ என்று குறும்பு கொப்பளிக்கச் சொல்கிறான் கண்ணன். 'நீ விஷமக்காரனாச்சே... செஞ்சாலும் செய்திருப்பே. எங்கே வாயைத் திறந்து காட்டு’ என்கிறாள் யசோதை.

வேறு வழியின்றி, தன் வாயைத் திறக்கிறான் கண்ணபிரான். அங்கே, ஏழுலகையும் தன் தாயாருக்குக் காட்டி அருள்கிறான் பகவான். அதாவது, பகவான் ஸ்ரீகிருஷ்ணன் என்பது ஒருவன்தான். ஆனால், அவன் காட்டியது ஏழுலகங்களையும்! 'வையம் ஏழும் கண்டாள்... என்றொரு பாடல், 'காட்டியது ஒருவன்; கண்டது ஏழு’ எனும் பொருள்படும்படி, அழகுற விவரிக்கிறது.

ஸ்ரீகிருஷ்ணனுக்கு 'சஹா’ எனும் திருநாமம் அமைந்தது அதனால்தான்! அதாவது... கொடுப்பது, கொடுப்பவன் என்று அர்த்தம். நமக்கெல்லாம் ஞானத்தை அள்ளிக் கொடுப்பவன் ஸ்ரீகிருஷ்ணன் அல்லவா?

சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட உபதேசித்தவன், அந்தக் கருணாமூர்த்தி அல்லவா?

சர்க்கரையை, பச்சை மிளகாய் என்றோ வேம்பு என்றோ மாற்றிச் சொல்லிவிட்டு, அந்தச் சர்க்கரையைச் சாப்பிட்டால் அது காரமாகிவிடுமா? கசப்பாகிவிடுமா? சர்க்கரையின் இயல்பை மாற்ற எவராலும் முடியாது. அப்படித்தான்... பகவானின் எந்தத் திருநாமங்களைச் சொன்னாலும், அவனுடைய பரிபூரண அன்பும் ஆசீர்வாதமும் நமக்கு என்றைக்கும் உண்டு.

இதேபோல் 'வஹா’ எனும் திருநாமமும் கொண்டிருக்கிறான் பகவான். வஹா என்றால் வசிப்பது, வசிப்பவன் என்று அர்த்தம்.

இதைத்தான் பராசர பட்டர், தன் சிஷ்யரான மைத்ரேயரிடம்... 'ஜகத் முழுவதுமாக, ஜகத்தில் உள்ள உயிர்கள் அனைத்திலுமாக ஊடுருவிப் பரவியிருக்கிறான் பரந்தாமன்’ என்கிறார். அதாவது அந்தராத்மாவாக, அந்தராமியாக, அனுப்பிரவேசம் பண்ணியிருக்கிறான்.

அட... இதைத்தானே பிரகலாதனும் சொன்னான் என்கிறீர்கள்தானே?!

ஆமாம். 'இறைவன் எங்கே இருக்கிறான்?' என்று இரணியன் கேட்டதற்கு, 'எங்கும் உளன்’ என்றான் பிரகலாதன். உடனே 'இங்கே இருக்கிறானா?' என்று கேட்டான் இரணியன். எவ்வளவு முட்டாள்தனமான கேள்வி இது. பின்னே... எங்கும் இருப்பவன் என்று சொல்லிவிட்ட பிறகு இங்கே இருக்கிறானா என்று கேட்கலாமோ?

'இந்தத் தூணில் இருக்கிறானா?' என்று அவன் கேட்க, 'இருக்கிறான்’ என்று பதில் சொன்னால், 'அந்தத் தூணில் இல்லையா?' என்கிற அடுத்த கேள்வியும் வரும். இதை உணர்ந்த பிரகலாதன், விதண்டாவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்... எனச் சொன்னான்.

சஹா என்றால் கொடுப்பவன்; வஹா என்றால் வசிப்பவன். கொடுக்க வேண்டும் என்றால், கூட இருந்துதானே ஆக வேண்டும்?!

நம்மில், நமக்குள்... ஊடுருவியிருக்கிறான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். இன்று இல்லையேனும் நாளை... நாளை இல்லையேனும் அடுத்த வாரம்... அதுவும் இல்லையெனில் அடுத்த மாதம்... நாம் திருந்த மாட்டோமா, நல்வழிக்கு வரமாட்டோமா எனக் காத்துக் கொண்டிருக்கிறான் கண்ணபிரான்.

'ஆடுற வரைக்கும் ஆடு. ஓய்ஞ்சு முடிஞ்சாதான் உன் புத்திக்கு எதுவுமே உரைக்கும்’ என்று பிள்ளையைப் பெற்ற தாய், பொறுமை காப்பதைப் போல, நமக்குள் இருந்தபடி நமக்காகக் காத்திருக்கிறான் கண்ணபிரான். முடிந்தால், அவனை உணர முயற்சி செய்து பாருங்களேன்!

No comments:

Post a Comment