Monday, June 16, 2014

குல தெய்வம்!

ஒரு குடும்பஸ்தருக்கு மனதில் குழப்பம் ஏற்பட்டது. கோயிலுக்கு போய் வரலாம் என முடிவு செய்து, எந்தக் கோயிலுக்குப் போகலாம் என தன் குல குருவைக் கேட்டார்.
""உன் குல தெய்வக் கோயிலுக்கு போய் வா,'' என்றார் குரு.
""குருவே! என் குல தெய்வக் கோயில் இங்கிருந்து நூறு மைல் தள்ளி இருக்கிறது. பக்கத்தில் ஏதாவது கோயில் செல்லக்கூடாதா?'' என்றார்.
அவரோ குல தெய்வக் கோயில் செல்ல வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்.
வீட்டுக்கு வந்த குடும்பஸ்தர், மனைவி, மகன், மருமகள்களிடம் ஆலோசனை கேட்டார்.
ஆளாளுக்கு ஒரு கோயிலைச் சொன்னார்கள். குடும்பஸ்தர் முன்பை விட இப்போது குழம்பி விட்டார். ஒரு குழப்பத்தை தீர்க்க கோயிலுக்கு போக முடிவு செய்தால், இதென்ன புதுக்குழப்பம் என மீண்டும் குருவிடமே வந்தார்.
""நான் அதனால் தான் முதலிலேயே குலதெய்வம் கோயிலைக் குறிப்பிட்டேன். விருப்பங்கள் ஆளாளுக்கு என்றும் மாறுபடும். ஆனால், குலதெய்வம் மாறுபடாது. மனிதனுக்கு குழப்பம் என்ற ஒன்று வந்து விட்டால், அவனது குலதெய்வம் கோயிலுக்குப் போய் விட வேண்டும். ஏனெனில், உங்கள் முன்னோர் எல்லாரது காலடியும் பட்ட இடம் அது. குலதெய்வ ஆசியுடன் அவர்களின் ஆசியும் உனக்கு கிடைக்கும். வாழ்க்கை மேம்படும்,'' என்றார்.
குடும்பஸ்தர் உடனே பயணத்திற்கு ஆயத்தமாகி விட்டார்.

No comments:

Post a Comment