Thursday, September 18, 2014

காசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அது ஏன் ?


காசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அது ஏன் ?
காசியில் அமர்ந்து இருக்கும் துந்தி கணபதிக்கு என் தோப்புக்கார நமஸ்காரங்கள். என்னுள் இருக்கும் பரப் பிரும்மம் என்னை எழுத இயக்க வைத்து பூரணமாக எழுத வைக்கட்டும்.
காசி என்றால் பிரகாசம் அதாவது ஞானம் என்று பொருள். இதுவே காசியின் பலன். காசிக்குப் போனால் ஞானம் ஏற்படும், ஞானத்தை அடைவதையே முக்தி கிடைக்கும் என்பார்கள். அது ஏன் ?
காசியில் அமர்ந்து இருக்கும் அன்னபூரணி, காசி விசாலாட்ஷி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதஸ்வாமி அங்கு வருபவர்களுக்கு பிரகாசம் என்கின்ற ஞானத்தைத் தந்து அங்கு வந்து மரணம் அடைபவர்களுக்கு அந்த கடைசி மூச்சோடு அவர்கள் செவிகளில் தாரக மந்திரமான ஸ்ரீ ராம நாமத்தை உபதேசம் செய்து அவர்களையும் அதை உச்சரிக்கச் செய்து அவர்களுக்கு முக்தி தருகின்றார். ஒவ்வொரு இரவும் இரண்டாம் ஜாமத்தில் அன்று இறந்தவர்களின் சாம்பலை தன் உடலில் பூசிக்கொண்டு ஆனந்தத் தாண்டவம் ஆடுவதாக இதீகம் உண்டு. பகவானே தன் உடலில் பூசிக்கொள்வது தன் சாம்பலை என்பது இறந்தவர்களுக்கு கிடைக்கும் பெருமை அல்லவா? காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும் என்பது பொது நம்பிக்கை. அப்படிப்பட்ட புனித காசி யாத்திரையை ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது செய்ய வேண்டும். முதலில் ஒருவன் தான் அடையும் பலனைப் பார்த்தோம். அடுத்து நாம் அங்கு சென்று செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்க்கலாம் ?
காசி ஆலய தரிசனமும் , முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பிண்ட தர்பணங்களும் காசிக்குப் போய் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் நம் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கர்மாக்கள் மூலம் அவர்களது ஆத்மாக்கள் நல்ல கதி அடையும். அங்கு சென்றதும் முதலில் நாம் செய்வது கங்காஸ்நானம். அதை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. பகவான் வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்ரவர்த்தியிடம் இருந்து மூன்று பிடி மண்ணை யாசகமாகப் பெற்று முதல் அடியை பூமியாகவும், இரண்டாவதை விண்ணுலகிலும் அளக்கும்போது அந்த பாதத்திற்கு பிரும்மா அபிஷேகம் செய்த தண்ணீரே ஆகாச கங்கை என்ற கங்கை நதி ஆயிற்று. அந்த கங்கையைத்தான் இஷ்ஷவாகு வம்சத்து ஸ்ரீ ராமபிரானின் முன்னோரான பகீரதன் என்ற அரசன் பூமிக்கு கொண்டு வந்தானாம். ஆனால் அந்த கங்கையின் வேகத்தை தணிக்க பரம்மசிவனை தியானித்து தபமிருக்க அவர் அதை தன்னுடைய ஜடையில் தாங்கி அதை ஆறு பிரிவாகப் பிரித்து, ஆறு நதியாக பூமிக்கு அனுப்பினாராம். அதே சமயம் பகீரனும் தன்னுடைய முன்னோர்களின் சாபத்தைப் போக்கி அவர்களது ஆத்மா முக்தி அடையவே அந்த கங்கை நதியை கொண்டு வந்தார். ஆகவே அது ஒரு ஜீவ நதி. கங்கை, கங்கை என நாம் வாயாரச் சொன்னாலேயே நமது பாபங்கள் விலகும், புண்ணியம் கிடைக்கும். மனதில் உண்மையான தூய எண்ணத்துடன் கங்கா தேவியை நாம் பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக அவள் நமக்கு நாம் வேண்டியதை நடத்திக் கொடுப்பாள். எது என் சொந்த அனுபவம் கூட. அதற்க்கு உதாரணம் சரீர செயல்பாடுகள் குறைந்துள்ள என்னையும் அழைத்துக் கொண்டு அனைத்தையும் நல்லபடி நடத்திக் கொடுத்து உள்ளாள் என்பதே உண்மை.
அன்னபூரணியின் மகிமையை கூற முடியாது. ஈரேழு பதினாறு லோகங்களையும் படைத்து ஈ எறும்பில் இருந்து அனைத்து ஜீவ ராசிகளுக்கும் அன்றாடம் உணவு அளிப்பவள் அன்னபூரணி . அங்குள்ள விசாலாட்ஷிக்கு தென்னாட்டு மக்களினால் உணவு படைக்கப்படுகின்றது. இனி யாத்திரையை தொடரலாம்.

காசி யாத்திரை என்பது உண்மையில் எப்படி செய்யப்பட வேண்டியது? நம்முடைய முன்னோர்கள் முதலில் தமது குருநாதர்களையும், தமது இஷ்ட தெய்வங்களையும் பிரார்த்தனை செய்து கொண்டப்பின்தான் காசி பிரயாணத்தை துவக்குவார்கள். அவர்கள் முதலில் ஸ்ரீ ராமேஸ்வரத்துக்கே செல்வார்கள். அங்கு சென்று ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியினால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ ராமனாதஸ்வாமியை தரிசனம் செய்தப்பின் சேதுக்கரை என்ற இடத்து கடல் மண்ணை சிறிது எடுத்துக் கொண்டு காசி யாத்திரை செய்வார்கள். வாரணாசியை அடைவதற்கு முன்னாலேயே வரும் அலஹாபாத்தில் முதலில் இறங்க வேண்டும். அங்குள்ள நதிக்கரைக்குச் சென்று படகில் ஏறி சிறியது தூரத்தில் தென்படும் மண் திட்டில் இறங்க வேண்டும். அந்த இடமே கங்கை- சரஸ்வதி மற்றும் யமுனை என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடமாகும். அந்த இடத்தை கூர்ந்து கவனித்தால் கங்கையின் நிறம் தெளிவாகவும், யமுனையின் நிறம் நீலமாகவும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் சரஸ்வதி நதியோ அந்தவாகிநியாக -அதாவது நமது கண்ணுக்குள் புலப்படாமல் உள்ளிருந்தே அந்த இரண்டு நதிகளுடனும் ஒன்றாகக் கலந்து கொள்கிறாளாம்.
அந்த இடத்துக்கு செல்லும் தம்பதியினர் தமது முடியில் இருந்து ஒரு அங்குல தலைமுடியை வெட்டி அந்த நதியில் எறிவது சம்பிரதாயம். அதன் பின்னரே அந்த நதியில் இறங்கிக் குளிக்க வேண்டும். அங்கிருந்தே கெட்டியாக மூடிய ஒரு பாத்திரத்தில் கங்கை நீரைக் கொண்டு வர வேண்டும். சற்று ஏமார்ந்தால் அங்கு நம்முடன் வரும் புரோகிதர்கள் சிறிது தங்க நகைகளை தானம் செய்ய வேண்டும் என்பார்கள். அதை நம்பக்கூடாது. அப்படியெல்லாம் சாஸ்திரத்தில் கூறப்படவில்லை.
அங்கிருந்து திரும்பி வரும் வழியில் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டு வரும் ஆஞ்சிநேயரை தரிசிக்க வேண்டும். நாங்கள் காசிக்கு சென்றபோது இரவில் வேணி மாதவன் ஆலயத்துக்குச் சென்றோம். அங்கு பகவானுக்கு அடிக்கப்படும் தாரை என்ற ஜாலரா வாத்தியத்தை அடிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அலஹாபத்தில் உள்ளவர் வேணி மாதவன். அவரே காசியில் காசி மாதவன் எனப்படுகிறார். சேதுவிலோ சேது மாதவன் என்ற பெயரில் உள்ளார். அடுத்து வாரனாசிக்குப் பயணம் செய்ய வேண்டும். அங்கு உள்ள கங்கா பாகீரதி என்பவளை- அதாவது கங்கை நதியை- பார்க்கும்போதே மனதி ஒரு புத்துணர்ச்சி தோன்றும். அங்கு ஹனுமான் காட், ஹரிச்சந்திராகாட் என்ற குளியல் படித் துறைகள் உண்டு. ஒவ்வொரு படியாக இறங்கும்போதே பகவானின் நாமத்தை மனதில் உச்சரித்தபடி இறங்குவதே புண்ணியமானது. கடைசி படியில் நின்றுகொண்டு நம் காலடியின் கீழே நம்மை நோக்கி ஓடிக் வருவது போல உள்ள கங்கா மாதாவை தலை மீது நம் கரத்தைத் தூக்கி வணங்க வேண்டும். ''ஜகன் மாதா இத்தனை தூரம் என்னை அழைத்து வந்து உன்னை தரிசனம் செய்ய வைக்கின்றாயே, உனக்கு கோடி கோடி வந்தனம் அம்மா'' என மனதார நம்முடைய வணக்கத்தை முதலில் அவளுக்கு செலுத்த வேண்டும். அதன் பின் அதே படியில் அமர்ந்து கொண்டு அவள் நீரை எடுத்து ஆசமனம் செய்ய வேண்டும்.
அடுத்து நாம் அங்கு வரமுடியாமல் இருக்கும் பந்துக்கள், சிநேகிதர்கள், ஏன் நம் வீட்டில் வளரும் இஷ்ட பிராணிகளையும் நினைத்துக் கொண்டு அனைவருடைய ஷேமத்திற்காகவும் ஸ்நானம் செய்ய வேண்டும். அதனால் அவர்களுக்கும் நல்ல பலன் போய் சேரும். அப்படிப்பட்ட பரோபகாரம் மனித நேயத்தின் சிறந்த உதாரணம். அது மட்டும் அல்ல ஸ்நானம் செய்யும்போது கடவுட்களை, நம் குருமார்கள் , சன்யாசிகள் என பெரியவர்கள் என அனைவரையும் மனதில் வணங்கியவாறு ஸ்நானம் செய்ய வேண்டும். அதன்பின் நமது உடையை பிழிந்து கொண்டு உடுத்திக் கொண்டு நம்மால் முடிந்த அளவு கங்கை நீரை எடுத்துக் கொண்டு காசி விஸ்வநாதர் சன்னதிக்கு செல்ல வேண்டும்.
வாரணாசியில் சிவ லிங்கம்
உள்ளே நுழைந்தால் கீரைப் பாத்தி வைத்தது போல நூற்றுக் கணக்கான பல சிவ லிங்கங்கள் இருக்கும். சுவாமிக்கு நம் கையினாலேயே பால், தேன். வீபுதி என அனைத்தையும் படைத்து தொட்டு பூஜிக்கலாம். கங்கை ஜலத்தை விட்டு, பூக்களை தூவி, அர்ச்சனை செய்து ஷோடோஷோபாரத்தோடு பூஜையை முடித்துக் கொள்ள வேண்டும்.
இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை முக்கியமானது. அங்குள்ள பண்டிதர்களையே சப்த ரிஷிகளாக பாவித்து நடத்தப்படும் பூஜையில் அவர்கள் விடாமல் காட்டும் தீப ஜோதி தெய்வீகமானது. ஆனால் அந்த பண்டிதர்களில் பலர் நாம் வெளியில் வந்ததும் நம்மிடம் இருந்து பணத்தைக் கறக்கும் மோகத்தில் மாறிவிடுகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கின்றது.
அடுத்து நுழைய வேண்டியது அன்னபூர்நேஸ்வரி அம்மனின் ஆலயம். மூலஸ்தானத்தில் உள்ளவள் விக்ரஹம் பெரிய அளவில் உள்ளது. அன்னபூர்நேஸ்வரியின் கையில் உள்ள கரண்டியால் உணவு தர அதை திருஓடு ஏந்திய கையில் பிட்சையாக பரமசிவன் வாங்கிக்கொள்வது அற்புதமான காட்சியாகும். அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல மனதில் தோன்றும். விஸ்வநாதர் சன்னதிக்கு எதிரில் லட்டுவிலான தேர் செய்து வைத்து இருப்பார்கள். அர்த்த ஜாம பூஜையின்போது பள்ளத்தில் உள்ள சிவனை மேலே கொண்டு வந்து ஒரு கட்டிலில் சயனிக்க வைப்பார்கள்.
ஸ்ரீ விசாலாட்ஷி அம்மனை தரிசனம் செய்தபின் கரையில் உள்ள வராஹி அம்மனையும் தரிசனம் செய்த பின் செல்ல வேண்டும். வராஹி ஆலயத்தின் அமைப்பு எப்படி உள்ளது என்பதைக் கூற முடியவில்லை. அவளை தளத்தில் உள்ள துவாரத்தின் வழியேதான் தரிசிக்க முடியும். அன்னை வீராவேசமாக, உக்ரஹமான முகத்தோடு, உயரமாகவும், பெருத்தும் உள்ள நிலையில் காட்சி தருகிறாள். எங்களுடன் வந்தவரில் ஒருவருடைய மூக்குக் கண்ணாடி உள்ளே விழுந்து விட்டது. அதை வெளியே எடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.
அடுத்து கேதார்நாத் சன்னதிக்கு செல்வோம். தீபாவளியன்று அங்கு சென்றால் இந்த இடத்தில்உள்ள நீரில்தான் ஸ்நானம் செய்ய வேண்டும். அங்குள்ள லிங்கம் பெரிய பாறை உருவில் உள்ளது. மேலே பாத்திரத்தில் வைக்கப்பட்டு உள்ள நீர் லிங்கத்தின் மீது விழுந்து கொண்டே உள்ளது. அதை சுற்றிலும் பல லிங்கங்கள் உள்ளன. எங்கு திரும்பினாலும் லிங்கன்களே உள்ளன. காசி முழுவதும் லிங்கங்கள்.
அங்கு தரிசனம் முடிந்ததும் போக வேண்டியது கால பைரவர் ஆலயம். அங்குள்ள பைரவர் நாய் உருவில்தான் உள்ளது போல காணப்படுகிறார். கால பைரவர் சாதாரண தெய்வம் அல்ல. அவர் நம்மைக் காக்கும் தெய்வம். நினைத்தக் காரியத்தை நடத்தித் தருபவர். அவர் பெருமையைக் கூற இயலாது. அவர் அருளுடன் நம்மை கண் திருஷ்டியில் இருந்து காப்பாற்ற சன்னதியில் கறுப்புக் கயிறு தருவார்கள். அந்த கயிற்றை நிறைய வாங்கி வந்து நம் பந்துக்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பது புண்ணியமான காரியம். அது போல அங்கு விற்கப்படும் கங்கை நீர் சொம்பையும் வாங்கிக் கொடுப்பது பெரும் புண்ணியக் காரியம். வெளியில் வந்தப் பின் பிர்லா ஆலயம், காசி ராஜாவின் அரண்மனை போன்றவற்றை கண்டு களிக்கலாம்.
இப்படியாக காசி ஆலய தரிசனம் செய்தப் பின் நாம் செய்ய வேண்டியவை மற்ற சடங்குகள். முதலில் நாம் செய்ய வேண்டிய சடங்கு மகா சங்கல்பத்துடன் ஆரம்பிக்கும். அங்கு அதை செய்ய நிறைய பண்டிதர்கள் உண்டு. நாம் நம்முடைய முன்னோர்களின் பெயர், கோத்திரம், நட்சத்திரம், ராசி போன்றவற்றைக் கூறி அனைத்து குடும்பத்தினருடைய பெயர், ராசி நட்ஷத்திரன்களைக் கூறி பிராமணர்களை நமஸ்கரித்தப் பின் பக்தி பூர்வத்துடன் சிரித்தையுடனும் அவர்கள் கூறும் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
'' முதலில் நாம் நம்முடைய தாய் வயிற்றில் ஜனித்து, அவள் வயிற்றில் உள்ள அந்த நேரத்தில் அவளுக்கு சொல்ல முடியாத அவஸ்தைகளை தந்து அவளின் வயிற்றில் இருந்து வெளியே வந்து, அவள் ரத்தத்தில் உருவாகும் அவளுடைய பாலையே பருகி, இரவு பகல் தூக்கமில்லாமல் அவளை அவஸ்தை படுத்தி வந்தாலும் நாம் இன்று இத்தனை பெரிய மனிதராக ஆளாவதற்கு அவள் ஆற்றிய பங்கை நினைத்தால் அதற்கு எத்தனை கைமாறும் செய்ய முடியாது என்பதினால் திரும்பத் திரும்ப அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இந்த உறுதிப் பிரமாணம் எடுக்கின்றேன்.'' என்று கூறி அவளை நினைத்தவாரே பிராமணரை நமஸ்கரிக்க வேண்டும்.
அடுத்து '' உலகில் உள்ள பாவ காரியங்களை சொல்லி நான் தெரிந்தோ தெரியாமலோ அவற்றில் எதையாவது செய்து இருந்தால் அதற்காக கோடி கோடியான அளவு மன்னிப்புக் கோருகிறேன்'' எனக் கூறி நமஸ்கரிக்க வேண்டும். அதை செய்தப் பின் பிராமணர்களை நமஸ்கரித்து அவர்கள் மனம் குளிர தட்ஷனை தர வேண்டும்.
அடுத்து நாம் செய்ய வேண்டியது நாம் தங்கி உள்ள இடத்துக்கு வந்து பிராமணர்களை வைத்து ஹோமம் செய்து வஸ்த்ரம் தந்து சாப்பாடு போட்டு தட்ஷனை செய்து அவர்களது ஆசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை முக்கியமாக தாய் தகப்பன்கள் இல்லாதவர்கள் செய்ய வேண்டும். அங்குள்ள தெருவுகளில் பெரியதும் சிறியதுமான பசுக்கள் உலாவிக்கொண்டே இருக்கும். அவை தெய்வங்களின் அவதாரங்கள், அந்த புண்ணிய பூமியில் அதற்காகவே பிறந்து உள்ளன என்பதினால் அவற்றை தொட்டு வணங்கலாம்.
அடுத்து காசியிலுள்ள அனைத்து கட்டங்களிலும் ( க்ஹாட் என்பது) நாம் பித்ருக்களின் தர்பணத்தை செய்ய வேண்டும். இறந்தவர்களின் ஆத்மா திருப்பதி அடைய பிண்டங்களை படைக்க வேண்டும். ஒரு படகில் ஏறி நதியில் சென்று அதிலேயே எடுத்துச் செல்லும் அடுப்பில் சாதம் சமைத்து அதைக் கொண்டு பிண்டம் படைத்து சடங்குகளை ஒவ்வொரு க்ஹாட்டிலும் செய்து முடிக்க வேண்டும் . அப்படி செய்வதே முன்னோர்களின் பழக்கம். அதுவே சிறந்தது .
ஒவ்வொரு க்ஹாட்டிலும் சடங்கு முடிந்துடன் கங்கை நீரிலயே அந்த பத்திரங்களைக் கழுவி மீண்டும் அடுத்த க்ஹாட்டில் புதியதாக சாதம் சமைத்து பிண்டம் போட வேண்டும். இப்படியாக அனைத்து க்ஹாட்டிலும் நாம் பிண்ட தர்ப்பணம் செய்து முடித்ததும் பிதுர் காரியங்கள் நிறைவு பெறுகின்றது. அங்கிருந்து அடுத்து நாம் செல்ல வேண்டியது காயா மற்றும் ராமேஸ்வரத்துக்கு . அங்கு இன்னும் சில பித்ரு காரியங்களை செய்தால்தான் நம்முடைய காசி யாத்திரையின் பலன் நிறைவு பெரும்.

No comments:

Post a Comment