Tuesday, September 16, 2014

விநாயகரின் நிரந்தர ரசிகர்களாகி புண்ணியத்தைப் பெறுவோம்.

நம் முன்னோரைப் போல் விபரமறிந்த விஞ்ஞானிகள் உலகில் வேறு எங்கும் இல்லை.
மற்ற தெய்வங்களை அந்தந்த தெய்வங்களுக்குரிய விசேஷ நாட்களில் வழிபடுவது மரபு. தினமும் வணங்கும் வழக்கமுள்ளவர்கள் கூட, முதல் கடவுளான விநாயகரை வழிபட்ட பிறகே, பிற தெய்வங்களை வணங்குவார்கள். அவ்வாறு, விநாயகரை வணங்கும் போது வாழைப்பழம், அப்பம், அவல், பொரி படைக்கிறார்கள். இதில் எதுவுமே வயிற்றுக்கு கேடு விளைவிக்காதது. இதன் மூலம், உணவே மருந்து என்ற தத்துவத்தை அன்றே விளக்கியுள்ளனர். அது மட்டுமல்ல! இந்த உணவுகள் மிகவும் சத்துள்ளவை. சத்துள்ள உணவு மனிதனை ஆரோக்கியமாக வாழ வைக்கும். யார் நல்ல உடல்நிலையுடன் இருக்கிறாரோ, அவரது செயல்பாடுகளில் "விக்னங்கள்' (தடைகள்) ஏதும் இருக்காது. அவர்கள் வெற்றியை நோக்கி விரைந்து செல்வார்கள். இதனால் தான், விக்னங்களை நீக்கும் விநாயகரை "விக்னேஸ்வரன்' என்றார்கள்.
காஞ்சி மகாபெரியவர், தினமும் சாப்பிடுவது தயிரில் நனைத்த அவல். இப்போதும் கூட, அவர் பிறந்த அனுஷ நட்சத்திரத்தன்று பக்தர்கள் தயிர் அல்லது வெல்லம் சேர்த்த அவல் படைத்து அவரை வணங்குகின்றனர். நல்ல உணவு வகைகளை தெய்வத்திற்கு படைத்து பிரசாதமாக உண்ணும் போது, அதிலுள்ள தெய்வீகத்தன்மை மனதிற்கு மேலும் வலு சேர்க்கிறது. மனவலிமையும், ஆரோக்கிய உடல்நிலையும் ஒன்று சேரும் போது, மனிதன் எதையும் சாதிக்கும் வல்லமை பெறுகிறான்.
விநாயகருக்கு படைத்த இவ்வகை பொருட்களை கொடுப்பதில் குழந்தைகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். இதனால், பகுத்து (பங்கிட்டு) உண்ணும் பண்பாடு இளமையிலேயே அவர்கள் மனதில் வளரும். அவர்கள் அதைச் சாப்பிட்டு திருப்தி அடைந்தால், அது அந்த விநாயகரே திருப்திஅடைந்ததற்கு சமம். இதனால், அவரது பூரண அருள் நமக்கு கிடைக்கும். குழந்தைகள் விநாயகரின் ரசிகர்கள். அவரது ஒவ்வொரு உறுப்பையும் நகைச்சுவை உணர்வுடன் ரசித்துப் பார்ப்பார்கள். அவ்வாறு பார்க்கும் போது, அவர்களுக்கு நாம் அந்த உறுப்புகள் குறித்த தத்துவங்களை தகுந்த கதைகளுடன் எடுத்துச் சொல்ல
வேண்டும். இதன்மூலம், நாம் அவர்களை விநாயகரின் நிரந்தர ரசிகர்களாக்கிய புண்ணியத்தைப் பெறுவோம்.

No comments:

Post a Comment