Wednesday, January 21, 2015

தாகம் தீர்க்கும் வழிபாடும் அதன் சிறப்பும் !!!

தாகம் தீர்க்கும் வழிபாடும் அதன் சிறப்பும் !!!
நாம் நம்முடைய பல்வேறு ஆசைகள் ஈடேறுவதற்கு இறைவனைத் தொழுகிறோம். இதை நாம் தூய மனமும், சுத்தமான உடலும், உண்மையான வாக்கும் கொண்டு செய்யவேண்டும். உடம்பைப் பொறுத்தவரை, தூய்மையை அடைய நன்கு அழுக்கு நீங்கத் தேய்த்துக் குளித்தால் போதும். சாதாரணமாக நீரில் மூழ்கிக் குளித்தாலோ, எண்ணெய் தேய்த்துக் குளித்தாலோ, இந்தத் தூய்மையை உடல் பெற்றுவிடும். இந்த நீராடுதல் நைமித்திக ஸ்நானம், காம்ய ஸ்நானம், நித்ய ஸ்நானம் என்று மூன்று விதமாக அமையலாம். நதியில் மூழ்கி நீராடும் போது, நமது மனத்தில் வேண்டிக் கொண்டது நிறைவேற, இத்தனை தடவைகள் மூழ்கி எழுந்திருக்க வேண்டும் என்ற நியதி உண்டு. இதை வேண்டிக்கொண்டபடி உரிய அளவில் செய்து முடிக்க வேண்டும். இது காம்ய ஸ்நானம். நைமித்திக ஸ்நானம் என்பது குடும்பத்தில் நெருங்கிய உறவினர் இறந்துவிடும்போது செய்யும் ஸ்நானம். இது வீட்டிலும், உடம்பிலும் உள்ள கிருமிகளின் பாதிப்பு, நீங்க செய்யப்படுவதாகும். சூரிய அல்லது சந்திர கிரகண காலங்களிலும் பீடை நீங்க இவ்வாறு செய்வதுண்டு. நித்ய ஸ்நானம் என்பது அன்றாடம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள நீரில் மூழ்கிச் செய்வதாகும். இதைக் குளம் குட்டைகளிலும் பீடை நீங்க இவ்வாறு செய்வதுண்டு.
நித்ய ஸ்நானம் என்பது தூய்மைப்படுத்திக் கொள்ள நீரில் மூழ்கிச் செய்வதாகும். இதைக் குளம் குட்டைகளிலோ, கிணற்றிலோ, நீரைப் பயன்படுத்திச் செய்து முடிக்கலாம். இதில் ஓடும் நதியில் நீரில் ஸ்நானம் செய்வது சிலாக்கியமானது. குட்டையில் நீராடுவது அடுத்த ரகம். கடைசி ரகத்தைச் சேர்ந்தது கிணற்றில் நீராடுவது. சில சமயம் உடம்பு முழுவதும் விபூதி பூசிக்கொண்டு ஸ்நானம் செய்த உணர்வை பெறுவது உண்டு. இதற்கு விபூதி ஸ்நானம், பஸ்ம ஸ்நானம் என்ற பெயர்களும் உண்டு. உடல் நலம் சரியாக இல்லாத நிலையில் இதைச் செய்யலாம். தூய்மை பெற, ஆண்கள் தலைமுடி நனைய மூழ்கி ஸ்நானம் செய்வதுதான் உத்தமம். பெண்கள் கழுத்துக்குக் கீழே ஸ்நானம் செய்தால் போதுமானது. ஸ்நானம் செய்யும் போது கடவுளை நினைத்துக் கொண்டு கங்கை, யமுனா, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி ஆகிய புண்ணிய நதிகளை நினைவு கூர்ந்து நீராட வேண்டும். இதனால் உடலும் புனிதம் அடையும் புண்ணியமும் கிடைக்கும். இவ்வாறு ஸ்நானம் செய்தபிறகு கடவுளை வணங்கிப் பிரார்த்தனை செய்ய, தூய்மையான உள்ளம் தேவை. அத்துடன் உடல்மீது அணிந்த உடையும், தூய்மையாக இருக்க வேண்டும். பூஜை செய்யும்போது ஈரத்துணியை உடுத்தி இருப்பது தவறானதாகும். உடுத்த உடை காய்ந்து உலர்ந்து இருக்க வேண்டும். பூஜை செய்யும் நேரத்தில், அன்று நனைத்து உலர்த்தி, காயவைத்த உடையை அறிவதே சிறப்பு. முந்தைய நாள் இவ்வாறு உலர்த்திக் காயவைத்த உடைகள் இரண்டாம் பட்சமானதுதான். மழையினால் காற்றில் சிலசமயம் துணிகள் உலருவது சிரமமாக இருக்கும். அப்போது துணியை ஏழு தடவைகள் நன்கு உதறிவிட்டால் காயவைத்ததற்குச் சமானம் ஆகும்.

முதல்நாள் உலர்த்திக் காயவைத்த உடைகளைக் கையில் எடுத்துக் கொண்டுபோய் குளியல் அறையில் வைத்துக்கொண்டு, பின் ஸ்நானம் செய்தபின் உடுத்திக் கொள்கிறார்கள். இவற்றைத் தூய்மையான மடி வஸ்திரத்துக்கு ஒப்பிட முடியாது. வர்ண உடைகளை பூஜை செய்யும் போது அணியக் கூடாது. வேஷ்டியின் இரண்டு முனைகளையும் சேர்த்துத் தைத்த கைலி போன்றவற்றையும் வஸ்திரமாக அணியக் கூடாது. புண்ணியதினங்களிலும் பண்டிகை நாட்களிலும் பட்டு வஸ்திரம் அணியலாம். பூஜாவஸ்திரம் அணிவதும் ஒன்றல்ல. பூஜைக்கேற்ப உரிய முறையில் அது பாங்காக அமைவது தான் உத்தமம். நாம் பூஜை செய்யும்போதும், கோயிலுக்குச் செல்லும்போதும் முறையான உடைகளை அறிந்து செல்ல வேண்டும். அது நம்முடைய பண்பாட்டை எடுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும். இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். பூஜை அல்லது பிரார்த்தனையில் ஈடுபடும்போது கடவுளைப் பற்றிய சிந்தனையின்றி வேறு எதுவுமே மனத்தில் இருக்கக் கூடாது. இதற்கு மனத்தூய்மை மிகவும் முக்கியம். எந்த காரியத்தை எடுத்துக் கொண்டாலும் வெற்றி அடைவதற்கு உள்ளத் தூய்மை மிகவும் அவசியமானது, கோபம், வெறுப்பு, கர்வம், பொறாமை ஆகிய உணர்வுகளுடன் பூஜையை மேற்கொண்டால், நாம் செய்வது பயனற்றதாக ஆகிவிடும். மனம் அமைதியாகவும், கட்டுப்பாடுடனும், நல்ல எண்ணங்களுடன் அமைவது மிக முக்கியம் எந்தக் காரியத்தை மேற்கொண்டாலும், அதில் வெற்றி கிடைக்க இவை முக்கியம். பூஜையைப் பொறுத்தவரை இது மிகவும் அவசியம். பூஜைக்கு அமரும்போது உள்ளம் அமைதியாக இருக்க வேண்டும். மற்ற விஷயங்கள் அப்போது நினைவில் வரவே கூடாது. பூஜை முடியும்வரையில் இவ்வாறு நிச்சலனமான மனத்துடன் ஆழ்ந்து ஈடுபடவேண்டும். பூஜையின் போதோ, பிரார்த்தனையின் போதோ கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைக் கணக்கிடவே கூடாது. இது அபசாரம் ஆகும். வீட்டில் பூஜையில் ஈடுபடும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமன்றி, ஆலயங்களில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கும் இது மிகமுக்கியம். பகவானின் அருகில் இருக்கும்போது அதற்கு அருகதை உள்ளவர்களாக நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment